வியாழன், 3 அக்டோபர், 2019






















வாங்க வாசிக்கலாம் (8) – எம்.சேகர்
மக்கள் ஓசை (7-7-19)

நாம் வாழும் இந்த வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் அணுகுவது இன்றைய படைப்புலகின் நவீனம் சார்ந்த சிந்தனையாக இருக்கிறது. நமக்கான வாழ்வை இயல்பாகக் கடந்து அதில் நிறைவு கொள்வதில் இருந்து இந்தச் சமூகமும் அதன் கடப்பாடுகளும் கட்டுப்பாடுகளும் மனிதக் குலத்தைச் சீரழித்து வைத்திருக்கிறது. இத்தகைய இருப்பு நிலைச் சூழலில் நாம் பல நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டும் சந்தித்துக்கொண்டும் கொடுத்துக்கொண்டும் வாழ்கிறோம் என்பதே இங்கு உண்மையான ஒரு விஷயமாகும். அத்தகையச் சூழலைப் படைப்பின்வழி வெளிப்படுத்தும் ஆக்கச் செயல்பாடுகள், இந்த வாழ்க்கையின்மீது எதிர்மறையான பார்வைகளையும் விமர்சனங்களையும் அவ்வப்போது கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.


நம் சுய விமர்சனத்திற்காகப் பல படைப்புகள் மூடி மறைக்க வைக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கையை நிர்வாணப்படுத்தி நம் முன்னே நிறுத்தியிருக்கின்றன. அத்தகைய படைப்பின்வழி கிழிக்கப்பட்ட அந்த வாழ்க்கைப் பக்கங்களை நம் மீள்பார்வைக்குக் கொண்டுவரும் ஒரு படைப்பாளிதான் பெருமாள் முருகன். அவரின் மாதொருபாகன் தமிழ் இலக்கியச் சூழலில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அவருக்கே பல சிக்கல்களை உருவாக்கிக்கொடுத்தது. நிஜ வாழ்க்கையின் பிரதிகள்தான் அவரின் படைப்புகள். அத்தகைய அவரின் இரண்டு நாவல்களை இந்த வாரம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


1988 இல் இவரின் முதல் சிறுகதை பிரசுரமான பிறகு சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதிக்கொண்டிருந்தார். அவரின் ஆர்வத்திற்கும் வேகத்திற்கும் இந்த வடிவப்பிரதிகளின் வெளி போதவில்லை என்பதாலும் தன் எழுத்துக்கு இன்னும் கொஞ்சம் பரந்த வெளி தேவைப்பட்டதாலும் அவர் நாவல் வடிவத்தைத் தனக்கான ஒன்றாக ஏற்றுக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்.

     
மாதொருபாகன் – பெருமாள் முருகன்


தமிழகத்தின் நிலப்பரப்புகளில் எங்கோ ஒரு பகுதியில் உள்ள தமிழ் இனக்குழுக்களின் வாழ்வையும் எளிய மனிதர்களின் ஆசைகளையும் கனவுகளையும் தொன்மங்களையும் குலமரபுச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பூர்வக்குடிகளின் கதைகளையும் அவர்களிடையே கனன்று கவியும் மன உணர்வுகளையும் மிகவும் அழகாகவும் அதே சமயத்தில் மிகவும் நெகிழ்ச்சியாகவும் ஆவணப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர் பெருமாள் முருகன். பலதரப்பட்ட மனித மனங்களின் பல்முரண் உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் பதிவு செய்திருப்பது வாசிப்பின் படிநிலைகளை வாசகர்களிடையே பன்முகப்படுத்தியிருப்பது இந்நாவலின் தனித்துவம்.


நாட்டுப்புற வழக்காறுகளும் தொன்று தொட்டு நீண்ட பாரம்பரியத்தைக்கொண்ட பழங்கதைகளும் (ஆதிதெய்வம் தேவாத்தா, குலதெய்வம் கூளியாள், ஆணாகவும் பெண்ணாகவும் பார்ப்பவர் பார்வைக்கேற்பத் தெரியும் மாச்சாமி, தாண்டியான் கோயில், பிள்ளை தரும் மொட்டைக்கல், எழுபது சத்தியப்படிகள், காட்டூர் நோம்பி, கரடேறும் இரவு) கதையின் பின்புலமாகத் தொன்ம நம்பிக்கைகளின் வடிவில் பின்னப்பட்டுள்ளது தமிழக மண்வாசனையற்ற என்னைப் போன்றவர்களுக்கு ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் தருவதாக அமைந்திருக்கிறது.


காளி, பொன்னாள், முத்து, சித்தப்பா நல்லையா என முக்கிய கதாபாத்திரங்களின் தனித்தன்மைகள் நாவலின் பல இடங்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. காளியின் அம்மா சீராயி, பாட்டி, மற்றும் அவர்களின் கதைகளில் வரும் தாத்தா நாச்சி, சடையப்பன் என கதையின் மையத்துக்கேற்ற கதாபாத்திர வார்ப்புகளுடன் வளர்ச்சிப்பெற்றுள்ளன. இதைத் தவிர்த்து கதையை மையத்தை நோக்கி நகர்த்துவதற்காக அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் நாவலுக்கு வலுவான தாக்கத்தைத் தந்துள்ளன.


காளியின் பாத்திரப்படைப்பில் இயற்கையோடு இயைந்து வாழும் மனப்போக்குள்ள ஓர் ஆத்மாவைக் காண முடிகிறது. அந்த வானத்தையும் அந்த இரவின் நட்சத்திரங்களையும் பூவரசம் மரமும் அதன் கிளைகளும் பூக்களும் அவன் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய் என அனைத்தையும் நேசிப்பதைக் காண முடிகிறது. இதற்கெல்லாம் மேலாக, பொன்னாள்மேல் அவன் கொண்டுள்ள அன்பு அலாதியானது. அவளைத் தன்னில் பாதியாகப் பார்க்கிறான் அவன். பன்னிரண்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவன் மனம் ஒப்பவில்லை. தான் இன்னொரு திருமணம் செய்துகொண்டால் பொன்னாள் என்னாவாள்? என்ற கேள்விக்குப் பதில் தெரிந்திருந்ததால், அவன் அம்மாவும் மற்றவரும் பல தடவை வற்புறுத்திக் கூறினாலும் அவன் ஏற்றுக்கொள்ளாமல் குழந்தை இல்லாவிட்டால் என்ன? இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற எண்ணத்தில் அவளுடன் மிகவும் அன்பாக இருக்கிறான்.


பொன்னாள் அவனுக்காகத் தான் எதையும் செய்யும் பண்புடையவளாய் இருக்கிறாள். அவளை வறடி என்று பலரும் தூற்றும்போதும் அவமானப்படுத்தி ஒதுக்கிவைத்த போதும் அவள் பெரும் மன உளைச்சலுக்கு ஆனாலும், காளியை மற்றவர் யாரும் வறடன் என்று கேவலப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாள். கிளி ஜோசியம் முதல் குறி சொல்பவர்வரை அவர்கள் சொல்லும் அனைத்து பரிகாரங்களையும் ஒன்றுவிடாமல் செய்து முடித்துவிடுவாள். ஒவ்வொரு முறையும் அப்படி செய்துவிட்டு விலக்குத் தள்ளிப்போகுமா எனக் காத்திருந்து ஏமாந்து போவாள். பன்னிரண்டு வருடங்களாகத் தொடரும் ஏமாற்றம் இது. உயிரைப் பணயம் வைத்து, மொட்டைக் கல்லைக்கூடச் சுற்றிவந்து விட்டாள். அவள் அம்மாவும் மாமியாரும் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்கியவள், உறவுகளின் சூழ்ச்சிக்குழிக்குள் வீழ்ந்து விடுகிறாள். அதுவும் காளி ஒத்துக்கொண்டான் என அவள் அண்ணன் முத்து சொன்னபிறகே அவளும் காட்டூர் பெருநோம்பிக்கு வர சம்மதிக்கிறாள்.


முத்து, காளியின் சிறுவயது நட்பில் வளர்ந்து தன் தங்கையைக் காளி விரும்புகிறான் எனத் தெரிந்தவுடன் பெற்றோரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்துவைக்கிறான். காளியின்மீதும் தன் தங்கையின்மீதும் அதீத அன்பு கொண்டுள்ளதால் அவர்கள் இருவரும் படும் வேதனைகளுக்கு ஒரு நல்ல பலன் இதன்மூலம் கிடைத்தால் இருவரும் மகிழ்ந்துபோவார்கள் என நம்புகிறான். அதற்காகத் தன் பெற்றோருடனும் காளியின் அம்மாவுடனும் சேர்ந்து பொன்னாளைப் பெருநோம்பிக்கு வரவைக்க காய் நகர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் எவ்விதச் சந்தேகமும் வராமல் பார்த்துக்கொள்கிறான்.


காளி – முத்து இருவரின் நட்பின் வாசம் அவர்களின் சிறுவயது அனுபவம் முதல் இன்றைய அனுபவம் வரை கதை நெடுக அவ்வப்போது வந்து நம்மைப் பரவசப்படுத்துகிறது. அவர்களின் மகிழ்வான அந்தத் தருணங்களை நாவலாசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்.


அந்த வயதின் மனத்தை இழந்துபோனபின் அவையெல்லாம் அர்த்தமற்றவை என மூளை முடிவுசெய்து எல்லாவற்றையும் அழித்திருக்கக்கூடும். ஆனால், அந்த சந்தோச உணர்வை ஒன்றும் செய்ய முடியவில்லை. பெருவெளியாக விரிந்து கிடக்கிறது அது.
இவர்களின் பால்ய அனுபவங்கள் நம்முடைய வாழ்க்கையையும் பின்னோக்கி நகர்த்திப் பார்க்கின்றன. வண்ணதாசன், ‘அந்தப் பன்னீர்மரம் இப்போது இல்லை என்ற கதையில்
நினைப்பு மட்டுமே வாழ்வில் அழகாக மிஞ்சும்போல இருக்கிறது
என்பார்.


அந்தந்தக் காலத்தில் அது அது நடப்பது இயல்பானது என்றாலும், ஒரு நாள் என்றாவது ஒரு நாள் அந்த நினைப்பு வரும்போது வாழ்வின் இன்பதுன்பம் இரண்டும் வெவ்வேறு வெளிகளில் நின்றுகொண்டு நமக்கான உணர்வலைகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. இந்நாவலும் அப்படித்தான். மனித மனத்தின் சுயம்புகளை அவரவர் சூழலுக்கேற்ப மிகவும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது.


எத்தனை வருஷக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக்கிடக்கும் முகங்கள் எத்தனையோ வெளிப்படாமலேயே புதைந்துபோய் விடுகின்றன.
மனிதன் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு தன் முகத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் அவனின் நிஜ முகம் அவனுக்கே மறைந்துபோகிறது. நாளடைவில் அதனுள் அவனே தொலைந்தும் போகிறான்.


இந்நாவலில் வரும் பேச்சு வழக்காறுகள் பல தலைமுறையாகத் தொடர்பவையாக இருக்கின்றன. காடு, தொண்டுப்பட்டி, மண்டி, நோம்பி, பெருநோம்பி, சாமி கரடிறங்கி கரடேறுதல் என அவர்களின்  வாழ்வியல் மண்டலத்தைப் பின்னிப் பிணைத்தவையாகவும் அன்றைய பண்பாட்டின் அசைவாக்கங்களாகவும் இருக்கின்றன. கதைக்குத் தேவையான பட்சத்தில் அவ்வப்போது சில இடக்கர் சொற்கள் பேச்சினூடே வந்து விழுந்துவிடுவதையும் தவிர்ப்பதற்கில்லை. அவற்றைக் கடக்கும்போது மனத்தை நெருடினாலும், கதைக்கு இயல்பான வழக்காறுகளாக இருப்பதால் சமாதானத்துடன் கடந்து செல்ல முடிகிறது. ஆனால், எத்தனை பேருக்கு இப்படிக் கடந்து செல்ல இயலும் என்பதே இங்குக் கேள்வியாக இருக்கிறது. ஆனால், தனது முன்னுரையில் நாவலாசிரியர், ‘இதை வாசிப்போரில் சிலர் அசௌகரியாங்களை உணர்ந்தால் வாசிப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம் எனக் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.


பெருநோம்பி அன்னைக்கு காலடி எடுத்து வைக்கற ஆம்பளைங்க எல்லாரும் சாமிதான். கொடுக்கறது சாமிதான். சாமியா நெனச்சுக்கிட்டாப் பிரச்சினை ஒன்னுமில்ல. எந்தச் சாமி எந்த மூஞ்சியோட வரும்னு ஆருக்குத் தெரியும். மூஞ்சி தெரியாத கொடுத்திட்டுப் போறதுதான் சாமி
காளியின் அம்மா அவனுடன் பேசும் இந்தப் பேச்சு, இதை ஒரு தொன்மத்தின் வழமையாகத்தான் அவர்கள் அணுகுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. குழந்தை பிறப்பதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு வழமை வழக்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றால், அவ்வளவு எளிதில் சுலபமாக நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. நம் சமூகத்தில் அன்று மட்டுமல்ல, இன்றும்கூட பொது இடங்களில் நாங்களும் மனிதர்கள்தான் என்று காட்டிக்கொள்ளத் தம்பதியினருக்குக் குழந்தை பிறப்பு அவசியமாக இருக்கிறது. நாலு இடத்திற்குச் சென்றுவர அவர்களுக்குக் குழந்தை பிறப்பு அவசியமாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் பல நவீன சிகிச்சைகள்மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனைத்து சாத்தியக்கூறுகளும் நம்மிடையே இருக்கின்றன. ஆனால், அன்று நம்பிக்கைகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பரிகாரங்களும் மட்டுமே. இந்தப் புரிதல் இருந்தால் இந்நாவல் நமக்கும் பிடிக்கும். நாவலின் கதாபாத்திர வாழ்க்கையின் யதார்த்தங்களோடு நம்மால் பயணிக்க முடியும்.


நாவலின் எளிய நடையும்  அழகியக் காட்சி விவரிப்புகளும் உணர்ச்சிகளின் ஏந்தல்களும் தொன்மங்களின் முரண்களும் நம்மை இந்நாவலுக்குள் ஆர்வத்தோடு பயணிக்க வைக்கின்றன. நல்லையா சித்தப்பாவின்மூலம் இந்த வாழ்க்கைக்கான அவரின் வித்தியாசமான தரிசனத்தைப் பதிவுசெய்துள்ள இந்நாவல், அதன் உச்சத்தைத்த தொடும்போது நமக்குள் ஏற்படும் படபடப்பு, தவிப்பு போன்றவற்றை வார்த்தைகளில் சொல்ல இயலாதது.


பூக்குழி  – பெருமாள் முருகன்


என்னைவிட ஆழமான அறிவு படைத்தோரும் திறம் படைத்தோரும் சாதி பற்றிய புதிர்களை அவிழ்த்துவிட வேண்டுமென்ற பணிக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அது இன்னும் விளங்கிக்கொள்ள முடியாமல், விளக்கமுடியாத ஒரு பரப்பாகவே இருந்து வருகிறது என்றுக் கூறியுள்ளார் டாக்டர் அம்பேத்கார்.


மக்களைப் பற்றிய பன்முக அடையாளங்களின் பதிவுகளைப் பதிவதில் இன்றைய படைப்பிலக்கியங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. சாமானியர்களின் வாழ்வு நெருக்கடிகளையும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலுக்கான போராட்டங்களையும் வாழ்தலுக்காக மட்டும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் குண இயல்புகளையும் சாதிய பேரினவாதத்தையும் அதனால் உருவாக்கப்படும் வன்மங்களும்  தனித்தனிக் குழுக்களின் தொன்மங்களும் சடங்குகளும் பலதரப்பட்ட மனிதர்களின் பல்முரண் கலாச்சாரங்களின் தொகுப்புகளும் அபாயகரமான சூழ்நிலையில் எளிய மனிதர்கள் அடையும் உளமாறாட்டங்களும் இன்றைய கதைகளுக்கான கதைக் களங்களாகி, வாசிப்பின் படிநிலைகளைப் பன்முகப்படுத்துவது  இன்றையப் படைப்பிலக்கியத்தில் புதியதொரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது.


பூக்குழி என்ற நாவல் பிரதியின்மூலம் நாவலாசிரியர் பெருமாள் முருகன், வாழ்வை ஒரு கோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் இந்நாவலைப் படைத்துள்ளார். இந்நாவலில் சாதியத்தின்மேல் உள்ள பிடிமானத்தையும் அதைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒருவித வெறிநிலையையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். உலகம் எவ்வளவுதான் மாறியிருந்தாலும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் நவீன மயமாகியிருந்தாலும் மனம் மட்டும் இன்னும் மாறாமல் சாதியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்குவதை இங்கு எந்தச் சட்டத்தாலும் நிறுத்தமுடிவதில்லை. நாம் ஏன் வேறுபாடுகளை, இனக்குழுக்களை முன்னிலைப்படுத்துகிறோம்? என்று நாவலாசிரியர் கேட்பது நமது காதுகளிலும் விழுகிறது. நாம் அவற்றையெல்லாம் மிகவும் இயல்பாகக் கடந்து அன்போடு மகிழ்ச்சியோடு வாழ இயலாதா? நம் சிந்தனைகளின் குறுகலுக்குக் காரணம் என்ன? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை? நாமே நிலையில்லாதவர்கள், நாம் கொண்ட கருத்துகளுக்கு ஏது நிலைத்தன்மை? என பலவிதமான கேள்விக்கணைகளை இந்நாவல் நமக்குள்ளே தொடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை. மனிதமன இயக்கத்தில் உள்ள சாதிய வக்கிரங்களை மிக இயல்பாக இந்நாவலின்மூலம் நமக்குள் கடத்திவிடுகிறார் நாவலாசிரியர். இனி, நாவலுக்கு வருவோம்.


குமரேசன் யாருக்கும் தெரியாமல் சரோஜாவைக் கோயிலில் திருமணம் செய்துகொண்டு தோலூரிலிருந்து தனது கிராமமான ஆட்டூருக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறான். அவனின் அம்மா சீராயி மகனின் இந்தச் செயலைக்கண்டு கோபம் கொண்டு அழுது கத்திப் கூப்பாடு போடுகிறாள். ஊர்மக்களும் சீராயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, சரோஜா தான் தனித்து விடப்பட்டுவிட்டுமோ எனச் சஞ்சலப்படுகிறாள். தங்கள் இனத்தை விட்டு இன்னோர் இனத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஊர்மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குமரேசன் தோலூருக்கு வராமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே என சரோஜா நினைக்கையில், அடுத்து வரும அத்தியாயத்தில், முட்டைக்கார பாய் மூலமாக குமரேசன் எப்படி தோலூருக்கு வந்து சேர்ந்தான் என்ற பின்கதைச் சொல்லப்படும்போது சாரோஜாவை அவன் சந்தித்ததும் குறிப்பிடப்படுகிறது. அடுத்தடுத்துத் தொடரும் அத்தியாயங்கள் கிராம வாழ்வையும் நகர வாழ்வையும் சரோஜாவின் கதாபாத்திரம் மூலம் ஒப்பிட்டுப்  பார்த்து, குமரேசனின் ஊர், உறவு எனத் தொடர்ந்து எங்கும் எதிர்ப்பலைகள் தோன்றி, இறுதியில், குமரேசன் ஊரில் இல்லாத நேரத்தில் அவன் மணமுடித்து வந்த வேற்று சாதிப்பெண்ணான சரோஜாவைக் கொல்வதற்கு ஊரே திரண்டு நிற்கிறது. அவர்களுக்கு முழு ஆதரவாகச் செயல்படுகிறார் குமரேசனின் அம்மாவான சீராயி.


அந்த இரவில், கர்ப்பிணியான அவள் ஒளிந்திருக்கும் அந்த முட்புதர் குழிக்குள் நெருப்பூட்டி அதைத் தீப்பூக்குழியாக்கி விடுகிறார்கள் அந்த ஊர்மக்கள். அவளைச் சுற்றி எங்கும் வெளிச்சம் பரவுகிறது. இது கனவாக இருக்கக்கூடாதா என அவள் அக்கணத்தில் ஏங்குவதும் இந்தக் கணத்திலாவது குமரேசன் தன்னைக் காப்பாற்றிவிடமாட்டானா? என ஏங்கும் அந்தப் பெண்ணின் கடைசி நிமிட ஏக்கமும் நம் நெஞ்சத்தையும் ஈரக்குழியாக்கிவிடுகிறது. நாவலின் கடைசி அத்தியாயத்தின் முடிவை நெருங்க நெருங்க வாசிப்பை இத்துடன் நிறுத்திவிடலாமா என்று நம்மையே தடுமாற வைத்து, அந்தக் கதைக்களத்திற்குள்ளேயே நம்மையும் வசப்படுத்தி வைத்துள்ளார் நாவலாசிரியர்.


குமரேசன் – சரோஜா இருவரின் முதல் சந்திப்பு, முதல் பேச்சு, அவர்களுக்கிடையிலான தொடர் உரையாடல் என அந்தக் காதல் மிகவும் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்யாணத்துக்குப் பிறகும் தன் தாயும், உறவுகளும், ஊரூம் அவளை எதிர்த்து நின்றாலும் அவளோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றும், அம்மாவும் உறவுகளும் ஊரும் தங்களை நிச்சயமாக மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தனக்கு ஏற்படும் அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு நிற்கும் கதாபாத்திரம் தன்னை நம்பி வந்த பெண்ணுக்கும்  தன் உறவுகளுகும் பொறுப்பாக இருக்கும் இன்றைய இளையர்களின் உருவகமாக இருக்கிறது. சாதிய மாற்றத்திற்கு இன்றைய தலைமுறை தயாராகி வருவதை அதனை முந்தைய தலைமுறைக்கு ஓர் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.


சாதியைப் பிடித்துக்கொண்டு திரியும்  சமூகத்திற்கு அம்மா சீராயி மூலம் சாட்டையடி கொடுக்கிறார். குமரேசன் சிறுவனாக இருக்கும்போதே அவன் அப்பா இறந்துபோக, அவனை மிகவும் கஷ்டப்பட்டு ஆளாக்குவதாக அடிக்கடி கூறும் கதாபாத்திரம். புது மனைவி வந்ததும் தன்னை மறந்துட்டானே என புலம்பும் கதாபாத்திரம் நாவலின் இறுதி உரையாடல்களின்போது, இன்னொருத்தனை அவள் வைத்திருப்பது தெரியவருகிறது. இது இங்கு யாருக்கும் தப்பாகத் தெரியவில்லை. வேற்று சாதிப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தங்கள் சாதிக்குத் தீங்கு இழைத்திட்டான் என குமரேசனைக் குற்றம் சொல்லும் அவ்வூர் ஆண்கள் சரோஜா மேல் ஆசை கொண்டு அலைவது இங்கு யாருக்கும் தப்பாகத் தெரியவில்லை. அண்ணன் மனைவி சரோஜாவின்மேல் காமத்தோடு அலையும் தம்பி வெள்ளையன். அவனைச் சாதிய வீரனாகப் போற்றும் மக்கள். இப்படி ஒழுக்கமின்மை ஓங்கி நிற்கும் ஒரு சமூகம் சாதியை மட்டும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்துகொண்டிருப்பது இந்நாவலின்மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நாவலை ஒர் இயல்புவாத நாவலாக நாம் அணுகமுடியும். உள்ளது உள்ளபடி என்று கூறப்படும் புனைவுத் தோற்றத்தைக் கொண்டது இந்தப் பூக்குழி நாவல். வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம்  செய்துகொள்ளும் காதலர்கள்  எதிர்நோக்கும் சாதியச் சிக்கல் என அவர்களின் வாழ்க்கை இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. மிக இயல்பான புற நிகழ்ச்சிகளைச் சொல்லி அக ஓட்டங்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியப் படைப்பாக்கம் இது என்றும் கூறலாம்.


இந்த இரண்டு நாவல்களின்மூலம் நமது வாசிப்புத் தளத்தை இன்னொரு வெளியில் நிறைத்திருக்கிற நாவலாசிரியர் திரு. பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும். நம் நாட்டுப் படைப்பாளிகள் வாசித்து உய்த்துணர வேண்டிய இதுபோன்ற படைப்புகளை அடையாளம் கண்டு வாசித்தால், நமது நாட்டின் தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில் இன்றிருக்கும் வெற்றிடத்தையும் இடைவெளிகளையும் நிரப்பிவிட முடியும் என நம்புகிறேன். அதற்கான சிறு முயற்சியே இந்த வாங்க வாசிக்கலாம்.


- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக