எம்.சேகர்
வாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை
புதன், 20 ஜனவரி, 2016
இடர்படும் இடைவெளி
துன்பத்தின் வேர்க்கால்கள்
நமைச்சலின் புன்னகை
வீட்டைச் சுமந்தவாறு
மனம்
@@@@@@@@@@@@@
தென்னங்கிழிசல்களில்
நிலவின் ஒளி
வாழ்க்கையின் தடங்களில்
இடர்படும் இடைவெளி
பின்
நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன
மனப்பிரதி
எனக்குள் மீதமிருக்கும்
கொஞ்சநஞ்ச இரக்கங்களையும்
கழட்டிவிட்டு
தேசமிங்கும் சுற்றும்
மூச்சுக்காற்றாய்
அகழ்ந்துபோனேன் வாழ்க்கைக்குள்
ஓட்டுக்குள் புதைந்த
வெண்திரைகளாக......
@@@@@@@@@
என் மனப்பிரதிகளைத்
தெருவோரம் நின்று
விற்றுக்கொண்டிருந்தேன்
நீண்டதொரு வரிசையின்
கடைசி ஆளாக
நிற்கிறார் கடவுள்
@@@@@@@@@@
தனிமையில் நான்
தனிமையில் நான்
தனிமையின் நிழல்மரத்தின் கீழ்நின்று
எதுவும் செய்ய இயலாமல்
தோல்விகளை எனக்குள் தினித்துக்கொண்டேன்
என் சுவாசக்காற்றின் போதிமரம்
கிளைகள் எதுவும் இல்லாமல் தனித்திருந்தது
என்னிலிருந்து வெளியேறிய காற்று
என்னைக் கண்டுபிடித்துத் தந்தது
புத்தன் என் நண்பன் ஆனான்
இரவுக்கு வெள்ளை
அகழ்ந்தெடுத்த உணர்வுக்குமிழுக்குள்
உதிர்ந்த பனித்துகள்
அகன்றுதடித்த அந்த இரவுக்கு வெள்ளையடித்தது
பிடிமானமில்லா புதிய உழவு
சலனங்களை விழுங்கும் மயக்கத்தில்
உள்நீண்டு சுருங்கி விழுந்தது
விஷத்தை நக்கியப் பாம்பாய்
தீண்டத்தகாத புராதன உடல்
உஷ்ணத்தனல்களில் உயிர்ப்பிக்கப்படுகிறது
ஈரம் பிழிந்தெறியப்பட்ட கரும்புச்சக்கையாய்
ரகசிய இரவு
ரகசிய இரவுக்குள்
முகிழ்கிக்கும் புனைவு
தோயாத உணர்வுகளில் அரும்பிப் பூத்திருந்தது
சுய புணரல்
ஒற்றைக்கையில் நிறுத்தப்பட
ரகசிய அரங்கத்தின்
ஒற்றைக்கால் தூண்களின் வேர்க்கிளைகள்
புதைக்கப்பட்ட ஒன்றை
வீசியெறிந்ததாகப் பரவும் பிம்பம்
அசாதாரண உரசல்களின் மிச்சம்
ஐம்பது ஆண்டுகால இரவு
ஐம்பது ஆண்டுகால இரவு
ஒற்றைச்செம்புக்குள் அடைபட்டுப்போனது
சாவின் குரூரம்
தன்சார்ந்த உறவுகளைத் தீண்டும்போதுதான்
மனசை உடைக்கிறது
விருப்புகளும் வெறுப்புகளும்
ஒரே நொடியில் கைகுலுக்கிக்கொண்டு
உறவை விரித்துக்கொள்கின்றன
சுயமிழந்த உடல் பிணமாகக் கிடந்தது
வலமும் இடமும் - எம்.சேகர்
வலமும் இடமும்
நேற்றைய இரவின் ஈரம்
இன்றைய விடியலிலும் ஒட்டிக்கொண்டிருந்தது
விடியலில் ஒட்டிக்கொண்டிருந்த இருளில்
முன்நகர்ந்த என்னை மறித்துக்கொண்டிருந்தது
ஒரு பூனை
பூனை வலது புறமாகக் கடந்து சென்றால்
வாழ்க்கை முன்னகரும்
இடது புறமாகக் கடந்து சென்றால்
வாழ்க்கை பின்னகரும் என
நண்பனொருவன் சொன்னது
என் நினைவைப் பின்னிழுத்துப் பார்த்தது
குளிரில் தகித்துக்கிடந்த இறுக்கத்துடன்
அந்தப் பூனை
அதன் வலதுபுறமாக என்னைக் கடந்தது
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)