சனி, 17 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதை - அக்கினிக்குஞ்சு - கோ.புண்ணியவான்

அக்கினிக் குஞ்சு – கோ. புண்ணியவான்
மக்கள் ஓசை கடிகாரக்கதை – 21 ஆகஸ்ட் 2016


மலேசியச் சூழலில் போலீஸ் விசாரணைகளில் நம்மின இளையர்களுக்கு ஏற்படும் நிலைமையையும் இடர்களையும் அதனால் ஏற்படும் தனிமனித வாழ்வின் முரண்களையும் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது இச்சிறுகதை.


அண்மையில் வெளிவந்து மலேசியத் தமிழ் மக்களுக்குப் புதியதோர் அடையாளத்தைக் (என்ன அடையாளம் என்று நான் சொல்லத் தேவையில்லை) கொடுத்துச் சென்ற கபாலியைப்போல் இல்லாமல் நமக்கான கதையை நமக்கானவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.


காவல் நிலையத்தின் சூழலும் அங்கு நடக்கும் விசாரணைகளின் எதிர்மறையான போக்குகளையும் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர் கோ. புண்ணியவான் அவர்கள். இது போன்ற கதைப் பதிவுகள், இத்தககைய சூழலில் நம் சமூகத்தின் செயல்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் நாம் கூர்ந்து கவனிக்க ஏதுவாக இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.


உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ


என்ற எம்.ஜி.யார் படப்பாடல் வரிகள்தான் இக்கதையை வாசிக்கும்போது எனக்குக் கேள்விக்குறியாய் வந்து நின்றது. 59 ஆவது சுதந்திர தினத்தை விரைவில் கொண்டாடவிருக்கும் மலேசியத் திருநாட்டின் வளப்பத்திற்கும் வளமைக்கும் தன் முதல் தலைமுறையையே காவு கொடுத்து உழைத்த ஓர் இனம் இன்று அனைத்து ரீதியாகவும் தனக்கான நியாயமாகக் கிடைக்குவேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துகொண்டிருப்பதை இக்கதை பதிவு செய்திருக்கிறது.


இலக்கியச் சூழலில் வேறொரு மனவெளியில் திரிந்து அலைந்துகொண்டிருக்கும் நாம், ஒரு படைப்பாளனாக நம் இனத்திற்கான நமக்கான கடமையை நேர்த்தியாகச் செய்திருக்கிறோமா என்ற கேள்வி எனக்குள் வந்து விழுகின்றது. எழுத்து என்பது ஒரு சமூகத்தையும் அதன் சார்ந்த அனைத்தையும் பாதுகாக்கக்கூடியதாகவும் தேவையேற்படும்போது தட்டிக்கேட்கக் கூடியதாகவும் எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியதாகவும் பண்படுத்தக்கூடியதாகவும் மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். வேறொரு நாட்டில் வேறொரு சூழலில் அவர்கள் எழுதுவதை வாசித்துவிட்டு அந்தப் பாணியை அப்படியே இங்கு வாந்தியெடுப்பதால் நமக்கான நாட்டில், நமக்கானச் சூழலில், நமக்காக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. மாற்றமும் ஏற்படப்போவதுமில்லை.


இக்கதையின் முன்னெடுப்பானது, கதாசிரியர் இச்சமூகத்தின்மேல் அவர் கொண்டுள்ள அக்கறையைக் விளித்துக் காட்டுகிறது. கதையில் வரும் சொல்லாடல்களும் மிகவும் அடர்த்தியாகவும் இறுக்கமாகவும் அமைந்து எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு ஏற்ப எடுத்தியம்பப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது. லோக்காப்பின் சூழலை வர்ணிக்கும் அந்த எழுத்து, அந்த இடத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது. வாசிக்கும்போதே மூத்திர வாடையும் மல வாடையும் நம் மூக்கின்மேல் வந்து உட்கார்ந்துகொள்கிறது. சமம் இழந்துபோன தரையானது நம் உடலையும் கீறிப் பார்க்கிறது.


இது நமக்கான கதை. நமக்கான எழுத்து. தொடரட்டும் உங்கள் சீரிய இலக்கியப் பணி. நல்வாழ்த்து கோ.புண்ணியவான் சார்.


அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக