செவ்வாய், 12 ஜூலை, 2011

மனசுக்குள் நிழல்




வாழ்க்கையைத் தேடி
ஒரு பயணம் தொடர்கிறது

அழுத விழிகளுடன்
சில காத்திருப்புக்கள்
யாருடைய மனசிலோ
யாருக்காகவோ

மரணபயம் வரும் வரை
இஷ்டத்துக்குத் தாவும்
மனசுக்கு எதுவும் புரிவதில்லை

சொல்வதை
மனம் கேட்பதுமில்லை
கேட்கும் அளவுக்கு
யாரும் சொல்வதுமில்லை

ஒவ்வொரு பொழுதும்
வெவ்வேறு ஆசைகள்

ஒவ்வொரு விழிப்பிலும்
வெவ்வேறு தேவைகள்

வெவ்வேறு தேவைகளுக்கும்
வெவ்வேறு போராட்டங்கள்

தன்னிலை மறப்பது மட்டும்
வழக்கமாகி
வாழ்க்கையாகிப் போனது

இரவை மட்டும் நேசித்து
பகலை வெறுப்பது
இப்பொழுதெல்லாம் புதுசல்ல

ஆசைகளுக்கும் தேவைகளுக்கும்
புதைபடுவதும்
மீண்டு எழுவதும்
இங்கு வாழ்வாகிப்போனது

அப்பா அம்மா
அண்ணன் தம்பி
அக்கா தங்கச்சி
மனைவி மகன் மகள்
உறவுகள்
தண்டவாளத்தைப் போல்
இரு நேர்க்கோடுகளாக விரிய

ஒற்றைத் தவமாய்
முதுமை வாழ்க்கையில்

தூசு படிந்த நினைவுகள்
மட்டும்
மனசுக்கு நிழலாய் நிற்கின்றன....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக