திங்கள், 16 பிப்ரவரி, 2015

தங்கமீன் பதிப்பகத்தின் கைவிளக்குக் கடவுள் – நயனம் வார இதழ்

(தங்கமீன் பதிப்பகத்தின் கைவிளக்குக் கடவுள் – நயனம் வார இதழ்)

இன்னும் இன்னும் எழுதுங்கள்

அன்புள்ள சேகருக்கு,

கைவிளக்குக் கடவுள் கவிதை நூலினைப் படித்தேன். தேவதைகள் தேசம் தொடங்கி தொலைந்து போனவர்கள் வரை உங்கள் கவிதைகள் என மனத்தோடு ஊர்வலம் போனது.

நான் கடவுள் கவிதையில்,

என்னை நான் ஆசிர்வதிப்பதில்ல
நானே கடவுளாக இருப்பதால்....

என்ற வரிகள் உங்களின் உயரங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தன. மேலும்,

மாமலை நீ
கீழே விரியும்
பச்சை நிறப் பள்ளத்தாக்காய் நான்....

காதலையும் காதலியையும் எவ்வளவு உயர்வானவர்களாக இந்தக் காதல் உருவகப்படுத்தப்படுகிறது என்று வியந்தேன்.
நினைவின் குரலாக ஒலிக்கும்,

விடிந்தால் தீபாவளி
வீட்டைக் கழுவப்போகிறேன்
வரிசையாய் எறும்புகள்.....

@@@@

நாளை புது வீட்டுக்குப் போகிறேன்
இந்த இரவில்
தூங்க இயலாமல் தவிக்கிறேன்
வீட்டின் அழுகுரல்....

@@@@@


பூட்டிய அறைக்குள்
பத்திரமாய்க் கடவுள்
பூமியெங்கும் மனிதம் துறந்த பிணங்கள்

போன்ற வரிகள் மனத்தைத் தொட்டன. இது மட்டுமல்ல காலக்காதலி கவிதையில்,

ஒவ்வொரு பொழுதும்
உன்னை வென்றிட நினைத்து
உனக்குள் நானே மூழ்கிப்போகிறேன்...

உன் விசாலப் பார்வைக்குச்
சில ஒத்திகைகள்
ஒவ்வொரு பொழுதும் மீளாமல்
நீண்டுகொண்டேயிருக்கிறது...

இப்படியாக நீளும் வார்த்தைகள் கவிதை மழையில் நனைய வைத்தன.

மணிமேகலையின் அழுகை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்ற கவிதை மணிமேகலையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பல நூறு பெண்களின் கண்ணீரில் ஒளிந்திருக்கும் உண்மையைப் புலப்படுத்துகிறது. அந்தக் கண்ணீரின் நிறம் எத்தகையது என்பது மட்டும் காலத்தின் விடியலாக இருக்கும்.

என்னைத்தேடி, தப்பாய் அச்செடுக்கப் பட்டவர்கள், எனக்குள் மௌனத்தை எழுதினால், இப்படியும் பேசினேன் என்ற தலைப்புகளில் வந்த கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. மெதுவாகப் படித்து ரசிக்கையில் அதன் ரசிப்புகளிலும் வலிகளை உணர்ந்தேன்.

பொதுவாக உங்கள் எழுத்துகள் ரசனைக்குரியதாகவே இருக்கும். இந்தக் கைவிளக்குக் கடவுள் நூல் அத்தகையதொரு படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் சிங்கைச் சென்ற பிறகு, உங்கள் படைப்புகள் மேலும் தரமாக இருக்கிறது. இந்தக் கவிதை நூல் அதற்குச் சான்று. இடமும் சூழலும்கூட ஒருவரின் சிந்தனையை வெவ்வேறு கோணத்தில் ஆராய வைக்கிறது. முக்கியமாகத் தமிழை மறக்காமல் தமிழிலே அற்புதமான படைப்புகளைச் சிறுகதையாக, புதுக்கவிதையாக வழங்கி வருகிறீர்கள். தமிழ்கூறும் நல்லுலகில் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வது கண்டும் புகழப்படப் போவதும் கண்டும் மகிழ்கிறேன்.

பக்கத்திற்கு பக்கம் விமர்சித்தால் இடம் போதாது. கடைசியாக ஒரு கவிதையைப் பற்றி சொல்கிறேன். கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால் என்ற கவிதை உள்ளப்பூர்வமாக நீங்கள் உருகி எழுதிய கவிதையாக எனக்குத் தோன்றியது. காரணம் என்னை வெகுவாகக் கவர்ந்த கவிதை அது.

என் இருண்மையில் கனவுகளைக் கண்டிருக்கமாட்டேன்
அவை நிஜங்கள் ஆகாமல் போயிருக்கலாம்
கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்....

என்று முடித்திருப்பது அழகு. இது தவிர உங்கள் துளிப்பாக்களையும் படித்து ரசித்தேன்.

சிங்கையில் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, தமிழை இன்னும் எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்று அழகான வார்த்தைகளைச் செதுக்கித் தந்திருக்கிறீர்கள். உங்களின் இந்த ஐந்தாவது நூல் உங்களுக்கு இலக்கியத் துறையில் நிரந்தரமான முகவரியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

சிறுகதை, கவிதை, தொடர்கதை என மூன்றிலும் கால்பதித்து வெற்றிநடை போடுகிறீர்கள்.

நாளைய இலக்கியம் உங்களைப் பேசும்.

இன்னும் இன்னும் எழுதுங்கள்
கைவிளக்குப் கடவுளைப்போல

-          ப.ராமு


(நன்றி: நயனம் வார இதழ் 04 – 01 – 2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக