ஞாயிறு, 27 மே, 2018

விமோசனம் – முஹைதீன்




விமோசனம் – முஹைதீன்
தமிழ் முரசு 27 – 05 – 2018


கேள்விக்கணைகளுடன் நம்மை நோக்கிப் பாயும் கதையின் தொடக்கம். கதாபாத்திரமே நோக்குநிலை பின்னணிமூலம் நம்முடன் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்து பேசும் உரையாடல் உத்தி. கதையின் பின்புலமாகச் சிங்கப்பூர்ச் சூழலும் அதன் சிக்கலும் இச்சிறுகதைக்கு முக்கியப் பலமாக அமைந்திருக்கின்றன.


கதைப்பொருள்:


சொல்லப்படும் கதை எதைப்பற்றியது என்பது கருப்பொருள். இதன் அடிப்படையில்தான் ஒரு சிறுகதை எத்தகைய வகையைச் சார்ந்தது என்பதை அறிய முடியும். அவ்வகையில் இச்சிறுகதையை ஒரு சமூகச் சிறுகதையாக அணுகலாம். சிறுகதைகள் பெரும்பாலும் சின்னஞ்சிறிய வட்டத்துக்குள் நிகழ்வதால் மனித உணர்வுகள் அதன் உறவுகள் சார்ந்தே அவை அதிகம் பேசுகின்றன.


சிங்கப்பூர்ச் சூழலில் இங்குள்ள சமூகத்திற்குப் பொதுவாக அனைத்து சமூகத்திற்கும் இந்த ஆலோங் (கடன் முதலைகள்) பிரச்சினை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் இவர்களை நோக்கி சட்டங்களை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அவர்கள் போக்கில் அவர்கள் தங்களின் வியாபாரத் தந்திரங்களை ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு விதமாக மாற்றியமைத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் நிறைய உயர்நிலைப்பள்ளி மாணவர்களையும் பகுதி நேரமாக வேலை பார்க்கவும் வைக்கின்றனர். மேலும், பெற்றோர் பெற்ற கடன்களை அவர்களால் கட்ட முடியாவிட்டால் பிள்ளைகளை வற்புறுத்தி கட்டாயப்படுத்தி தங்களுக்காக வேலை செய்ய நிர்ப்பந்திப்பார்கள். இவர்களின் தொல்லைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் உண்மை வலி தெரியும். நிம்மதி இல்லாத வாழ்க்கை, பயத்துடன் வாழும் வாழ்க்கை என அந்த வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் நலத்தையும் நிம்மதியையும் சீர்குலைக்கும் ஒரு விஷயம் இது.


இக்கதை, கடன்முதலைகளிடம் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீள முடியாத ஒரு நடுத்தர குடும்பத்தின் வாரிசை எந்த அளவுக்கு இப்பிரச்சினைப் பாதித்து, வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது என்பதைக் கதைப்பொருளாகக் கொண்டிருக்கிறது.


கதைப்பின்னல்:


எவ்விதச் சிக்கலும் இல்லாமல் நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறது. கேள்விகளோடு தொடங்கும் கதை அதற்கான விடையைச் சொல்லி தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறது. இருப்பினும், தந்தை செய்த தவற்றிலிருந்து விடுபடமுடியாமல் அத்தவற்றைக்கொண்டே இச்சமூகத்தை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் மகனின் செயல்களில் எதிர்மறை எண்ணங்களே அளவுக்கதிகமாகக் குடிகொண்டிருப்பதும் கதைப்பின்னலில் அதற்கான சூழல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.


அப்பா – மகன் உறவை இன்னும் இடைவெளியோடு காட்டி, அம்மா – மகன் உறவவை இன்னும் அணுக்கமான ஓர் உறவாகக் காட்டிக் கதைக்கான பின்புலத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டமைத்திருக்கலாம். அப்படிச்செய்திருந்தால், கொலையையும் தற்கொலையையும் அவரவர் நியாயப்படி எப்படிவேண்டுமானாலும் அனுமானித்துக்கொள்ள போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.


பாத்திரப்படைப்பும் நோக்குநிலை பின்னணியும்:



மகன் குணசீலனின் கதாபாத்திரமே  இச்சிறுகதையை நகர்த்திச் செல்கிறது. அவனின் மனவோட்டத்திலேயே அவனது பார்வையிலேயே கதைசொல்லியும் தன் தடத்தைப் பதித்திருக்கிறார். கதாபாத்திரமே இக்கதையைச் சொல்லும் பாங்கு, வாசகர்களை இக்கதையினூடே இன்னும் அணுக்கமாக இணைந்துகொள்ள வைக்கிறது. கதாபாத்திரமே கதையை நகர்த்திச் செல்வதால் கதாசிரியரின் குறிக்கீடு இல்லாமல் கதை அதன் போக்கில்  கனக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.



நோக்குநிலை பின்னணி உத்தி கதைச்சொல்லிக்கு தன் கதையைச் சொல்வதில் போதுமான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், கதாசிரியர் முழுமையாக அச்சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. மேலோட்டமாகச் சொல்லப்படும் சின்னச் சின்னச் சம்பவங்கள் கதைக்களத்தை கனமாக்கத் தவறிவிட்டதுபோல் தோன்றுகிறது. குணசீலனின் கதாபாத்திரத்தின்மீது வாசகர்களிடையே ஓர் அணுக்கமான உறவை ஏற்படுத்த தவறிவிட்டதாகப்படுகிறது. குணசீலன் தன் பக்க நியாயங்களை எவ்வளவுதான் நியாயமாக முன்வைத்தாலும் முரண்பட்ட அவன் கதாபாத்திரம் அந்த நியாயங்களை எல்லாம் பின்தள்ளிவிடுகிறது.


குறியீடு:


பெரும்பாலும் கதாசிரியர்கள் சில விஷயங்களை நேரிடையாகச் சொல்லாமல் குறியீடாகச் சொல்வார்கள். ஒன்றைப் புலப்புடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கூறு குறியீடாகும். அவ்வகையில், இக்கதையின் தலைப்பே ஒரு குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இறுதியில் வரும்,
ஒரு வழியாகக் கரிசனப் பூமியில் விமோசனம் கிடைத்துவிட்டது’, என்ற வரிகளும்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’, என்று இருமுறை வரும் வரிகளும்
இனி எது நடக்கப்போகின்றதோ அது நன்றாகவே நடக்கும் என்ற வரிகளும்
ஒவ்வொரு நாளும் கடைசிக் காட்சியாக இரண்டு மீட்டர் மணிலா கயிறும் எனக்குச் சலாம் போட்டுவிட்டுச் செல்கிறது போன்ற வரிகளும் இக்கதையில் ஒரு வகை குறியீடுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.


நிறைவாக, சிங்கப்பூர்ச் சூழலில் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் ஒரு சவாலான கதைக்கருவை வைத்துக் கதை பின்னி, அதை நமக்குள் கடத்திச் செல்ல பெரிதும் முயன்றுள்ளார் கதாசிரியிர் முஹைதீன். அதில் ஓரளவும் வெற்றியும் பெற்றுள்ளார். நம் நிழல்கூட ஒளி இருந்தால்தான் நம் அருகே துணை நிற்கும் போன்ற வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வெள்ளைச் சுவரில் என் கடந்தகால வாழ்க்கையின் பிம்பங்களைக் கண்டுகொண்டே இருக்கிறேன் என்கின்ற காட்சிப் படிமமும் நம் கண்முன்னே மீண்டும் கதையைத் தொடக்கத்திலிருந்து கொண்டு வந்து நிறுத்துகிறது. நல்ல கதை. படிப்பினைத் தரும் கதை. இளையோர்களுக்கு அறிவூட்டி வழிகாட்டும் கதை. பெற்றோர்களுக்கு எச்சரிக்கைக் கொடுக்கும் கதை. நம் வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.


வாழ்த்துகள் முஹைதீன் சார்.


அன்புடன் எம். சேகர்

செவ்வாய், 8 மே, 2018

பிரியமுடன் – முஹைதீன் (தமிழ் முரசு – 06-05-2018) ஒரு பார்வை – எம்.சேகர்





பிரியமுடன் – முஹைதீன் (தமிழ் முரசு – 06-05-2018)
ஒரு பார்வை – எம்.சேகர்


ஒரு சிறுகதைக்கு ஒரு சம்பவம் அல்லது ஒரு மனநிலை முக்கியமானது. மேலும், சிறுகதைக்கு இருக்கவேண்டிய முக்கியப் பண்பு ஒருமைப்பாடு ஆகும். ஏதேனும் ஒன்று, மனச்சலனமாகவோ, மாற்றமாகவோ, பார்வையாகவோ, கணிப்பாகவோ ஏதாவது ஒன்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு சிறுகதையின் சம்பவங்கள் அமைந்திருக்கவேண்டும். மன நிலைகள், மன உணர்வுகள் என்று கூறப்படும் நிலையும் சுவைபடக் கதைசொல்லும் முறையும் சிறுகதையின் வடிவச் சிறப்பை மெய்ப்படவைக்கின்றன. அத்தகையச் சிறுகதைகளே விரைவில் மக்களின் மனத்தைச் சென்றடைகின்றன.


அவ்வகையில், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படும் சிறுகதைகளை உணர்வுக் கதைகள் என்கிறோம். குறிப்பிட்ட ஓர் உணர்வைச் சொல்லும் சூழல், அந்த உணர்வு தரும் விளைவு, அந்த உணர்வு தரும் அனுபவம் என கதைச்சொல்லல் திட்டமிட்டு மிகத் துல்லியமாகப் படைக்கப்படும் படைப்புகளில் ஒன்றாக இவ்வாரம் தமிழ் முரசில் வெளிவந்த சிங்கை எழுத்தாளர் திரு. முஹைதீன் அவர்கள் எழுதிய பிரியமுடன் சிறுகதையை வகைப்படுத்தலாம்.  இக்கதையில் சிறுமி காவேரி @ பிரியதர்ஷினியின் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிக இயல்பாக அமைந்து கதைக்குச் சிறப்பைச் சேர்த்து வாசக நெஞ்சங்களை ஈரக்கசிவுகளால் நனைத்துவிட்டுச் செல்கிறது.


கதைக்கரு:


மாப்பஸான் இலக்கியம், ‘வாழ்வின் ஒரு சிறு துண்டினைக் காட்டினாலே போதும் என்கிறார். அவரின் கூற்றுக்கு ஏற்பவே இச்சிறுகதையும் அமைந்துள்ளது. அன்பு மடம் என்ற சிறுவர்களுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்துவரும் காவேரி என்ற எட்டு வயது சிறுமியின் கதை மிகவும் நேர்த்தியான ஒரு நேர்க்கோட்டில் அதற்கே உரிய சம்பவங்களின் துணையோடு நகர்த்தப்பட்டுள்ளது. தன்னைத் தத்து எடுத்தப் பெற்றோர்களுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, பின் வேறொரு சூழலால் உந்தப்பட்டு மீண்டும் தன் பழைய அன்பு மடத்திற்கே திரும்பிச் செல்லும் ஓர் இறுக்கமான சூழலில் கதை நிறைவுபெறுகிறது. மேலும், சமூக யதார்த்தத்தின் தர்க்கரீதியான முடிபுகளை நேரிடையாக எதிர்நோக்கி, எடுத்துக் காட்டப்படும் சமூக யதார்த்த உண்மையை  அடித்தளமாகக் கொண்டு இந்த வாழ்வின் நோக்கையும் வாழ்க்கை முறைமையையும் மாற்றியமைக்க முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது இக்கதை.


வாழ்க்கையை அதன் அடித்தளத்தை உள்ளது உள்ளவாறு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் சிறுகதைகள் அமைக்கப்படலாம். அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமூகப் பொதுவான பிரச்சினைகளைக் காட்டாது வெறும் தனிமனிதப் பிரச்சினையாகக் காட்டலாம். அல்லது சமூக யதார்த்தத்தைக் காட்டுவதுபோல காட்டிவிட்டு பிரச்சினைகளைத் தனிமனிதப் பிரச்சினைகளாக மாத்திரம் சித்தரிக்கலாம். பாத்திர வார்ப்பு, பாத்திரங்களின் சமூக உறவு நிர்ணயம் ஆகியன மூலம் இவை சாதிக்கப்பெறலாம். இக்கதையில் இவையனைத்தும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது அதன் பலம்.


கதைப்பின்னலும் பாத்திரப் படைப்பும்:


சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சி  என்பது யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைச் செய்வதாகும். அதாவது, சம்பவம், செயல் என்பதன் அடிப்படையிலிருந்து தோன்றுவதாகும். இங்கே செயல் என்பது கதாபாத்திரத்தின் இயக்கமாகும். அச்செயல் ஏதோ ஒரு சிக்கலைத் தீர்க்கவோ அல்லது தீர்க்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகும். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஒரு செயல் உண்டாகிறது. அந்நிகழ்ச்சியினால் இன்னொரு நிலை தோன்றுவது இயல்பானது. இச்செயல்கள் யாவும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றதாகவும் படைப்பாளன் ஆய்ந்து பார்க்கும் வாழ்க்கைச் சூழலை அல்லது சிக்கலை விளக்குவதாக இருக்கும். எனவே பாத்திர வளர்ச்சிக்கு கதைப்பின்னல் மிகவும் அவசியமாகும்.


தர்ஷன் – பிரியா இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், காவேரியைத் தத்து எடுக்கிறார்கள். காவேரியின் பெயரைக்கூட தங்களுக்குப் பிறக்குப்போகும் குழந்தைக்காக வைத்திருந்த பெயரான பிரியதர்ஷினி என மாற்றி அழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் பிரியா கர்ப்பமுற, கதையின் சிக்கல் இங்கு தனிமனித ஆசைகளின் பிரவகமாக உருவெடுத்து, பிரியதர்ஷினியை மீண்டும் காவேரியாக்கிச் சென்னைக்கே திருப்பி அனுப்பிவைக்கிறது.


காவேரியின் மனவோட்டமே கதையின் பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் அவள் சார்ந்த உணர்வுகளின் சாரல்கள் கதையை ஈரமாக்கிவிட்டுச் செல்வதை மறுப்பதற்கில்லை. எட்டு வயது சிறுமி, கதைச்சொல்லி சொல்வதுபோல் வயதுக்கு மீறிய தெளிவு கொண்டவள் என்பதால் அவளின் இறுதி முடிவும் தெளிவாகக் கதையில் தெளிக்கப்பட்டுள்ளது. காவேரி கதாபாத்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் சம்பவங்கள் கதைக்கேற்றார்போல் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது படைப்பாளனின் படைப்பாற்றல் திறனை மிகவும் சிறப்பாக நிறுவியுள்ளது. பெற்றோரின் அன்பை அனுபவிக்காமல் இருந்தாலும் மற்ற பிள்ளைகளிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளவள் என்ற அவளின் அறிமுகமும் காவேரி அக்காவின் சார்பில் என் தங்கச்சி பிரியதர்ஷினி பாப்பாவுக்கு இரண்டு முத்தங்களைக் கொடுத்துவிடுங்கள் என ஒரு தாளில் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதிலும் அவளின் பாத்திரப்படைப்பு எங்கும் மாசுபடாமல் மிகவும் இயல்பான போக்கில் படைக்கப்பட்டுள்ளது.


அன்பு மடத்தின் மேற்பார்வையாளராக வரும் அண்ணாமலை அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு அமைத்துத் தருவதில் மிகுந்த அக்கறையுள்ளவராகச் சமூக நேயமிக்க ஒரு மனிதராகப் படைக்கப்பட்டிருப்பது ஒரு முன்னுதாரண கதாபாத்திரமாக இருக்கிறது. இதுபோன்ற சிறுவர் இல்லங்களின் பொறுப்பில் உள்ளவர்களுக்காகப் பொறுப்புணர்வைக் கொடுக்கும் ஒரு கதாபாத்திரம்.


கதையின் முரண்:


கதையின் பல இடங்களில் இந்த முரண் உத்திகளைக் காண முடிகிறது. சமூக உணர்வுகளின் பிரதிபலிப்பாக இவை இக்கதையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொன்றிலும் தனிமனித ஆளுமையே மிஞ்சியிருக்கிறது என்பது கதைக்குள் ஆழமாக உள்நுழையும்போது நமக்கும் புரிகிறது. தனி மனித உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளே சமூகத்தின் விருப்பு வெறுப்புகளாக நம் முன்னே அலை அலையாய் துள்ளி எழுகின்றன என்பதை உணர முடிகிறது.


மேடம் என்று காவேரி அழைக்கும்போது, இனி என்னை அம்மா என்றே அழைக்கவேண்டும் எனப் பிரியா கவேரியிடம் அன்பாகக் கூறுவதும், தங்கள் பிள்ளைக்கு வைக்க நினைத்த பெயரை காவேரிக்கு வைப்பதும் என காவேரியிடம் அன்பைப் பொழிந்த பிரியா – தர்ஷன் இருவரும் தங்களுக்குக் குழந்தைப் பிறக்கப்போகிறது என்றதும் காவேரியிடம் கொடுத்திருந்த அனைத்து அன்பின் வளையங்களையும் ஒவ்வொன்றாகக் கழட்டி எடுத்துக்கொள்வதுமான சம்பவங்கள் கதையின் முரணை இன்னும் வலிமையாக்கிக்காட்டுகின்றன.


தான் விருப்பப்பட்ட வாழ்க்கை, தான் கனவு கண்ட வாழ்க்கை, இனி அனைத்தும் வசப்படும் என்ற நிலையில் இருந்த பிரியதர்ஷினி பழையபடி காவேரியாகச் சென்னைக்குத் திரும்புவது என கதை முரண் அந்தச் சிறுமியின் வாழ்வை மீண்டும் பழைய இடத்தை நோக்கியே நகர்த்தியிருக்கிறது. இது தனிமனித குற்றமா? அல்லது சமூகத்தின் குற்றமா? என வாசகனை நோக்கித் தோட்டாக்களாகப் பாய்கின்றன சில கேள்விகள். கல்வி கற்பதால் மானுடம் நற்பண்புகளில் சிறக்கும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், இன்றைய சூழலில் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகள் அத்தகைய கூற்றை பொய்ப்பித்துவிடும் வகையிலேயே பலவும் இங்கு தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்பது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மைகளாகும். படித்தவர்களிடம் காவேரி வைத்த மதிப்பு எதிர்பார்ப்பு என்பது இச்சமூகம் அவர்கள்மேல் வைத்திருக்கும் மதிப்பம் எதிர்பார்ப்பும் ஆகும். படித்தவர்களான தர்ஷனும் பிரியாவுமே அந்தச் சின்னப் பிள்ளையின் நம்பிக்கையை உடைத்தெறிந்து சமூகத்தையும் உடைத்தெறிகிறார்கள்.


நிறைவாக,


சிறுகதையில் குதிரைப்பந்தயம்போல் தொடக்கமும் முடிவும் இருக்கவேண்டும் என்பார் திறனாய்வாளர் செட்ஜ்விக். இக்கதை இதற்கு ஏற்றார்போலவே தொடங்கிய இடத்திலேயே நிறைவை நோக்கி ஓடுகிறது. சிறுகதைகளில் செயல், பாத்திரம், கருத்து ஆகியவற்றிற்கிடையே தக்க இயைபு இருத்தல் அவசியம். இவையும் இக்கதையில் இயைந்தே செயல்பட்டிருக்கின்றன. இவை மூன்றும் நன்கு இணையப்பெற்றிருப்பதையே கலையம்சம் என்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி. கதை சொல்லும் முறை, கதாபாத்திர வார்ப்பு, மொழிநடை வருணனை, அமைப்பாக்கம் போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தான் சொல்ல வந்த கருத்துநிலைத் தெளிவு முஹைதீனிடம் உச்சமாக இச்சிறுகதையில் வெளிப்பட்டுள்ளது.


கதை முடிவிற்குப் பிறகும் இக்கதையாடலின் மொழியின் பின்னால் உள்ள ஒருவகை மௌனம் ஒரு மாபெரும் தாக்கத்தை வாசகரிடத்தில் ஏற்படுத்திவிடுகிறது. வாசிப்பின் சாத்தியங்களின் எல்லை இன்னும் அகலப்பட்டிருக்கலாமோ எனத்தோன்றும் சாத்தியக்கூறுகளையும் இங்கு நிராகரிப்பதற்கில்லை.


அடுத்து இக்கதையை வாசித்து முடித்தவுடன் மனத்தில் பட்ட இரண்டு விஷயங்கள்.


முதலாவது, இக்கதைக்கான கதைக்களம், கதையின் பின்புலம் தமிழ்நாட்டுப் பின்னணியில் இருக்கிறது. ஆனால், இக்கதைக்கருவைச் சிங்கப்பூர்ச் சூழலிலேயே மிகச் சிறப்பாக எழுதியிருக்கலாம்.


இரண்டாவது, கதைச்சொல்லி மூன்றாம் நபராக நின்றுகொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார். காவேரியின் கதாபாத்திரமே கதைச்சொல்லியாக வந்திருந்தால் இச்சிறுகதை இன்னும் நெருக்கமாக வாசகர்களைத் தன் பக்கம் ஈர்த்து கதைக்கான தாக்கத்தை வாசகரிடையே அதிகப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன்.


வாழ்த்துகள் முஹைதீன். தொடர்ந்து எழுதுங்கள்.


அன்புடன்
எம்.சேகர்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அன்புடன் ஆசைத்தம்பி - கீழை அ. கதிர்வேல் (தமிழ் முரசு 29-04-2018) – ஒரு விமர்சனப் பார்வை – எம்.சேகர்





அன்புடன் ஆசைத்தம்பி - கீழை அ. கதிர்வேல் (தமிழ் முரசு 29-04-2018)

– ஒரு விமர்சனப் பார்வை – எம்.சேகர்


முன்னுரை:


மனிதன் தனிமனிதனாக வாழ்வதில்லை. ஒரு குடும்பமாக ஒரு சமூகமாக ஒரு நாடாக வாழ்கிறான். இந்தப் பரந்த உலகில் அவன் விழிகளில் படும் அனைத்தும் இங்குப் புனைகதைகளாகப் பதியப்படுவதில்லை. இந்தச் சமூகம், நாடு என்ற கட்டமைப்புக்களில் அவ்வப்போது விதி மீறல்கள் நடைபெறும்போது அவன் எழுதுகோல் சமூக விழுமியங்களை நினைவுபடுத்தப் போராடுகிறது. அவ்வகையில் சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்படுபவைகளாகும். சமூகத்தில் காணும் குறைபாடுகளையும் சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்த முனைந்து அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றன. அவை மக்களுக்குச் சமூகமும் நாடும் சார்ந்த அறிவினைக் கொடுத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சமூகச் சிந்தனைகளுக்கு வித்திடுகின்றன.

சிக்கல்கள்:


சமூகம் என்பது ஒரு சீரான தன்மையைக் கொண்டதல்ல. அடிப்படையிலேயே சமூகம் அதன் அமைப்பிலே பல முரண்களைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே இங்குச் சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒரு சமூகத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளத் தகாதவைகள் ஒரு நீண்ட காலமாகத் தன் இருப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு இன்னல்களை விளைவிப்பது சிக்கல் எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வறுமையைக் குறிப்பிடலாம். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருக்கும்போது  அதனால் வரக்கூடிய குற்றங்களின் வாயிலாக வறுமையானது ஒரு சிக்கலாக இங்குக் காணப்படுகிறது. இந்த வறுமை என்பது தனி மனிதச் சிக்கலாகவும் சமூகத்தில் வறுமைத் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கும்போது அது சமூகச் சிக்கலாகவும் மாறிவிடுகிறது.


மேலும், சமூகச் சிக்கல்கள் குறித்து,


ஒரு சமுதாயத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் விரும்பத்தகாதவையாகவும் வெறுத்தொதுக்கப்பட வேண்டியனவாகவும் கருதப்படும் நடத்தை முறைமைகள் அல்லது சூழல்கள் சமூகச் சிக்கல்களாகக் கருதப்படும். இச்சிக்கல்களைப் போக்குவதற்குப் புனரமைப்புத் திட்டங்கள், சீர்திருத்தக் கோட்பாடுகள், செயல்முறை தேவை என அனைவரும் எதிர்பார்ப்பர்


என்று வாழ்வியல் களஞ்சியத்தில் குறிப்பிடப்படுகிறது.


சிக்கல்கள் நாட்டுக்கு நாடு, சமூகத்துக்குச் சமூகம் மாறுபட்டுக் கிடந்தாலும் பல சிக்கல்கள் உலகத்துக்கே பொதுவானதாகவும் இருக்கின்றன. சிக்கல்களைச் சமூகவியலாளர்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கூறுவர்.


1.     குடும்பச் சிக்கல்கள்
2.     திருமணச் சிக்கல்கள்
3.     சமயச் சிக்கல்கள்
4.     பொருளாதாரச் சிக்கல்கள்
5.     அரசியல் சிக்கல்கள்
6.     கல்விச் சிக்கல்கள்
7.     சாதிச் சிக்கல்கள்
8.     இனச் சிக்கல்கள்


சமூகச் சிக்கல்கள் பிறவற்றுடன் கொண்ட தொடர்பைப்பற்றி,


சமூகக் கட்டுப்பாடு, சமூகச் சிக்கல்கள், சமூக நிலையமைப்புச் சிதைவு, சமூக மாற்றம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகவும் ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கின்றன
என்று சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதன் அடிப்படையில் குடும்பம் சார்ந்த சிக்கல் ஒன்றை இக்கதையின்மூலம் முன்னெடுத்துள்ளார் கதாசிரியர் கீழை. அ. கதிர்வேல் அவர்கள். வெளிநாடுகளில் தங்களின் குடும்பங்களுக்காக அயராது உழைக்கும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் பிறருக்காகவே உழைத்து உழைத்துத் தம் இளமைக்காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமூகச் சிக்கலை இக்கதையின்மூலம் பதிவுசெய்ய முனைந்துள்ளார். இதுபோன்ற சிக்கல்களை அதிகப் பொறுப்புணர்வுடன் களைவதற்குச் சமூகம் தாயாராகாவிட்டால் இதனால் விளையப்போகும் தாக்கங்கள் சமூகத்தில் விபரீதமான ஒரு சூழலை உருவாக்கிவிடும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இனி, கதைக்கு வருவோம். 


பதினெட்டு ஆண்டுகள் தன் குடும்பத்தைப் பிரிந்து சிங்கையில் பிழைப்பு நடத்தும் ஆசைத்தம்பி தன் அப்பாவுக்கு எழுதும் மடல்கள் மூலம் கதை நம்மோடு உறவாடுகிறது. குடும்ப உறவுகளில் மிகுந்த பற்றுள்ளவர்களைக் குடும்பத்தைச் சார்ந்த உறவுகள் அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதையும் அவரவர் சார்ந்த வாழக்கைக்கே முக்கியம் கொடுப்பதையும் கதை எடுத்துரைக்கிறது.


கதைத் தொடக்கம்:


1994 இன் கடிதம் மூலம் கதைத் தொடங்குகிறது.  ஆசைத்தம்பி தன் அப்பாவுக்குச் சிங்கப்பூருக்குத் தொழில் நிமித்தமாக வந்த பிறகு எழுதும் கடிதம் அது.

கருப்பொருள்:


தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்கு வருபவர்களின் குடும்பத்தினர்களில் ஒரு சிலர் இவர்களைக் கறவை மாடுகளாகவும் பொதி சுமக்கும் கழுதைகளாகவும் பயன்படுத்திக் கொள்வதைக் கதைக் கரு சுட்டிக் காட்டுகிறது.

கதையின் போக்கு:


கதைச்சொல்லியின் கூற்றாக, தெளிந்த நீரோடையாகக் கதையின் போக்கு அமைந்திருக்கிறது.

கதைப்பின்னல்:


வறுமையின் காரணமாக தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்கு வந்தவர்களின் நிலையும் அவர்களின் குடும்பத்தார் இவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதாகக் கதைப் பின்னல் தொடர்கிறது.

பாத்திரப்படைப்பு:


ஆசைத்தம்பி எழுதும் கடிதங்கள் மட்டும் நம்மோடு பேசுவதால் ஆசைத்தம்பியின் பாத்திரப் படைப்பு மிகக் கச்சிதமாகப் படைக்கப்பட்டுள்ளதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. மற்ற கதாபாத்திரங்கள் ஆசைத்தம்பியின் மூலமாக ஓரிரு வரிகளில் சொல்லப்படுவதால் அக்கதாபாத்திரங்களின் நியாயத் தன்மைகளை அறியமுடிவதில்லை.

கதையின் முரண்:


குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும் பண்புடைய ஆசைத்தம்பி இறுதியில் அப்பாவின் விருப்பத்திற்கு எதிராக   முடிவு எடுத்திருக்கும் விதம் முடிவில் முரணாக வருகிறது.

கதை உத்தி:


கடித உத்திமூலம் கதை முழுவதுமாக ஆசைத்தம்பியின் கடிதங்கள். கதைச்சொல்லி இவ்வுத்தியை மிக இயல்பாக தன் கருவை முன்வைக்க பயன்படுத்தியிருக்கிறார்.

சமூகப் பார்வை:


தமிழ்நாட்டு ஊழியர்களுக்கு இருக்கும் சிக்கல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளால் அவர்களின் சுயவாழ்வு பலவேளைகளில் பாழாகிப் போவதையும் கதை அவர்கள் சார்ந்த சமூகப் பார்வையாக முன்வைக்கிறது.


குடும்பங்களில் சுயநலவாதம் கொண்டவர்கள் சந்தர்ப்பங்களை அவர்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பொதுநலவாதியைப் போல இயங்கிக் கொண்டிருப்பதைக் கதை மறைமுகமாகச் சுட்டுகிறது. உறவுகள் சில வேளைகளில் நிஜமான அன்புணர்வோடு குடும்பத்துக்காக உழைப்பவர்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதும் அவர்களின் ஆசாபாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையும் கதை பதிவு செய்கிறது.


மொழி நடை:
எடுத்துக்கொண்ட மையத்திற்கு ஏற்ற கதையின் மொழிநடை மகன் அப்பாவிற்கு எழுதும் கடிதம் என இயல்பாக அமைந்திருக்கிறது.


கதைத் தலைப்பு:


கதைக்கு ஏற்ற தலைப்பு. அன்புடன் ஆசைத்தம்பி. சிறப்பு.


நிறைவாக, நல்தொரு கதையை கொடுத்திருக்கிறார் கீழை. அ. கதிரவேல். சிங்கையில் வாழும் தமிழ்நாட்டு ஊழியர்களின் வலியை இக்கதையின்மூலம் உணர்த்த முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். மகன் தந்தை கடித உத்தி கதைக்குள் இன்னும் ஆழமாக உள்செல்ல இயலாமல் தடுப்புச் சுவராக இருப்பதுபோல ஓர் உணர்வு எம்பிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.


மேலும், பல படைப்புகளைப் படைக்க அன்பு வாழ்த்துகள் நண்பரே.


அன்புடன்
எம்.சேகர்.

வியாழன், 28 செப்டம்பர், 2017

எம்.கருணாகரன் அவர்களின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய அணிந்துரை






சிறகு முளைத்த சொற்கள் எம்.சேகர்

எம்.கருணாகரன் அவர்களின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய அணிந்துரை



வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தான் கண்ட உக்கிரத்தில் சற்றும் குறைக்காமல், சமரசம் செய்யாமல், அனுபவத்திற்கும் பொருந்திப் போகிற வார்த்தைகளைத் தேர்வு செய்யும் கவிஞனைப் புரிந்துகொள்ள வாசகன் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும் என்ற பிரம்மராஜனின் வரிகளைக் கவிஞர் கருணாகரனின் கவிதை மொழிக்குள் நுழைவதற்குமுன் மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.


ஒரு கவிதையின் புரியாத்தன்மை என்பது, அந்தக் கவிதையைப் படைத்த கவிஞனிடத்திலும் இல்லை. அந்தக் கவிதையிலும் இல்லை. அதற்கு மாறாக, வாசகர்களாகிய நம்மிடையேதான் இருக்கிறது என்ற புரிதல் முதலில் இங்கு அவசியமாகிறது. மேலோட்டமான நமது பார்வையும் துல்லியமிழந்த நமது தெளிவும் தர்க்கமும்தான் நம்முடைய புரிதலுக்குச் சவாலாக இங்கு விளங்குகின்றன. சமகால கவிதைப் படைப்பாக்கங்களின் புதிய பரிமாண வளர்ச்சியில் போதுமான நுகரல்கள் இல்லாமையும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம்.


ஒரு கவிஞன், தன் உணர்வு நிலையிலிருந்து சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முழுமூச்சாக நுண்ணியமான ஒன்றை மொழியிலும் சிந்தனையிலும் தேடிப்போகிறான். இந்தத் துல்லியமான பார்வையின் நிர்ப்பந்தங்கள் சம்பிரதாயமான மொழி வெளிப்பாட்டு எல்லைகளைத் தாண்டி விரைந்துசென்று புத்தம்புதுச் சொற்களையும் சொல்லாடல்களையும் அதற்கான புதிய அர்த்தங்களையும் கண்டு சொல்வதில் நிறைவு கொள்கின்றன. மேலும்,  கவிஞன் தன் சுயத்திற்காகப் புதிய வடிவங்களைத் தேடிச் செல்லும்போது சமூக வெளி (Social Space) தனிமனித வெளி (Private / Inner Space) ஆகிய இரு வெளிகளுக்கும் இடையில் நிலவும் சொல் வெளியை (Verbal Space)  நாடி அவனுக்குள்  அவனே நுழைந்து உள்ளிருக்கும் மொழிக்கிடங்குகளில் தனக்கான இயல்பு மொழியோடு சரணடைகிறான். இந்தச் சொல் வெளியில்தான் கவிஞன் தன் புலனறிதல் பார்வைகளைத் தனக்கே உரித்தான வகையில் அமைவுகளாக (Pattern) ஆக்கிக்கொள்கிறான்.


கவிதையும் மனிதனின் அறிவுத் துறைகளில் ஒன்று என்பதைப் பலர் அறிவதில்லை. கவிதை என்றால் படித்த அடுத்த நிமிடமே புரிந்துகொள்ளப்படவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். கவிதை செய்தித் தாளில் வரும் ஒரு செய்தியல்ல. வாசித்தவுடனேயே புரிந்துகொள்வதற்கு. அது ஒரு தவ உச்சத்தின் பிறப்பு. அதன் புற அமைப்புகளான வாக்கியத் தொடர்களில் முழு ஈடுபாடில்லாமல் வாசிக்கப்பட்டால் அக்கவிதையின் ஆரம்ப அர்த்தம்கூட புரிந்துகொள்ள முடியாததாய்ப் போகும். அந்நியப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களின் கவிதைகளைப் புரிந்துகொள்ள அவர்கள் எழுதிய மனோநிலைக்கு அருகாமையில் வாசகன் செல்வது இங்கு அவசியமாகிறது.



நவீன கவிதை என்பது ஒரு நவீன ஓவியத்தைப் போலவே பற்பல அர்த்தங்களையும் புரிதல்களையும் விளக்கங்களையும் தர வல்லது. கவிதையின் ஒரு வரியில் இடம்பெறும் இரண்டு சொற்களுக்கு முன்பு இல்லாத அர்த்தத் தொடர்புகள் வாசகனின் வாசிப்பில் அந்தச் சொற்களைப் பற்றிச் சேமித்து வைத்திருக்கும் அனுபவத் தொடர்புகளால் கிடைக்கின்றன. இதனால், கவிதையின் பொருள் அடுக்குகளில் தீவிரம் ஏற்படுகிறது.


கவிதையின் அழகியலைப் பற்றிக் குறிப்பிடுகையில் கவிதையின் தன்மையும் அதன் செயல்பாங்கும் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கவிதை புரிந்துகொள்ளப்படும் விதமும் கவிதையின் மொழியும் வாசக மனத்திற்குள் அக்கவிதை இயங்கும் இயல்பும் பாடுபொருள் சாத்தியப்பாடுகள் என பலவும் இணைந்து மனக்குவியத்தின் சொற்கோவைகளை நவீன கவிதைகளின் அழகியலாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. இவ்வகைக் கவிதைத் தோரணங்களே இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் உங்களின் வாசிப்பிற்காகவும் புரிதல்களுக்காகவும் நம் மண்சார்ந்த அடையாளத்தோடு வரிசைப்பிடித்து நிற்கின்றன.


இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் அதற்கென உரிய சுதந்திரமான வாழ்க்கையைக் கொண்டு புனையப்பட்டுள்ளது என்பதும் மேலும், இக்கவிதைகள் உணர்த்துவது நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பல வாசிப்புப் படிநிலைகளில் சொற்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வாசகனுக்குள் நுழைந்து வாழ்வின் அனுபவ அடுக்குகளுக்குள் பிரவேசிக்க வைக்கின்றன. இக்கவிதைகள் வெறும் மொழியின் விளையாட்டுகளை மட்டும் சார்ந்து நிற்காமல் ஆழ்ந்த தெளிவாகவும் ஆழ்மன உணர்தலாகவும் எல்லா விதமான நுண் அரசியலின் புரியாமைகளாகவும் எளிமையான அழகியலாகவும் நவீன தமிழ்க் கவிதையின் வடிவங்களாக நமக்கு அறிமுகமாகின்றன.


அடுத்து இத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அடுத்தடுத்த கவிதைகளை உங்கள் பார்வையில் நீங்கள் புரிந்துகொள்ள இது ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.


வாழ்வின் நிலையாமையை மிகவும் எளிய கவிதை மொழிநடையில் சொல்லிச் செல்லும் கவிதை இத்தொகுப்பிலுள்ள, தொலைந்து போன நான் எனும் கவிதை. இக்கவிதையை யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான சர்ரியலிசக் கவிதையாக வகைப்படுத்தலாம். படைப்பாளன் தன் உணர்ச்சி மேலிட்டால் உருவமைக்கும் சொற்களுக்குப் பொருள் தேடுவது என்பது மிகவும் எளிதல்ல. சிலருக்கு அது எளிதில் சென்றடையும். பலருக்கு பல வாசிப்புகளின் மூலம் சென்றடையலாம். சிலருக்கு விளக்கம் கொடுத்த பிறகு சென்றடையலாம். ஓரிருவருக்குக் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாததாகவே போகலாம். எது எப்படி இருப்பினும் படைப்பாளனின் அந்தக் கணநேர உணர்ச்சிப் பிழம்புகள் வெவ்வேறு புரிதல்களை வாசிப்பவனுக்கக் கொடுத்துச் செல்வது நவீன படைப்பாக்கத்தின் ஓர் உச்சக் கூறாகும்.


இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும்? இதுவரை விடை தெரியாத ஒரு கேள்வி இது. இக்கேள்விக்கு விடை காண பல ஞானிகளும் சித்தர்களும் தீவிரமாக முயன்றிருக்கிறார்கள். புத்தரும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி ஞானம் பெற்றார். வாழ்க்கை நெறிக்கான பல விசயங்களைப் போதனையாகச் சொல்லிச் சென்றார். மறுபிறப்பு என்பது கர்மவினைகளுக்கு ஏற்ப விளையும் என்பதும் பலரின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும், இறப்புக்குப் பிறகு என்ன? என்பது இந்த நிமிடம்வரை புரியாத புதிர்தான். ஆனால் அந்தப் புதிருக்கு ஒரு கவிமனம் விடை காணத்துடித்துத் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு தானும் பறக்க ஆரம்பித்துவிட்டது ஒரு விடுதலை உணர்வேந்தலுடன்.


சிறகுகள் முளைக்கப் பறந்து கொண்டிருக்கிறேன்/இதமாக வருடிப்போகும் காற்று/மேகக் கூட்டத்தில் குளிர்/நட்சத்திரக் கூட்டத்தில் நான்/வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்/ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி/நான் பறந்துகொண்டிருக்கிறேன்/


இவ்வரிகளே இக்கவிதையின் உச்சங்கள். காட்சிப் படிமக்கூறுகள் இறப்பிற்குப் பின்னும் முன்னகர்ந்து விரிகின்றன. இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வாழாத வாழ்க்கைக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன இவ்வரிகள்.


பறக்கும்போது ஏற்படும் அந்த உணர்வை இதமாக வருடிப்போகும் காற்றோடு ஒப்புமைப்படுத்திச் சொல்லியிருப்பதும் மேகக் கூட்டத்தில் குளிர் என்பது மழையை மடியில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் மேகங்களுக்கு இடையில் நாம் பறக்கும்போது ஏற்படும் சில்லென்ற உணர்வையும் நட்சத்திரக் கூட்டத்தில் நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன் என்பது ஆத்மா இப்பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து விடுவதைக் குறியீடாகக் காட்டுவதாக நான் புரிந்துகொள்கிறேன். இறப்பிற்குப் பின் இருக்கும் அந்த இருண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விடயமாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.


பறக்கப் பறக்க/ இறகுகள் உதிர/ பறந்துகொண்டே கீழே பார்த்தேன்/


பறக்கப் பறக்க இறகுகள் உதிர்வது எதை உணத்துகிறது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இறுதிவரை பறக்க இயலாத ஒன்றாகவும் தன் இலக்கை நோக்கி அடைய முடியாத ஒரு மயக்க நிலையாகவும் இவ்வரிகள் தோன்றம் அளிக்கின்றன. இறகுகள் எல்லாம் உதிர்ந்துபோனால் அதன் பிறகு எங்கணம் பறப்பது? அதையம் மீறி பறப்பதுதான் கவிஞனின் கற்பனா சக்தி. இங்கேதான் கவிதையும் வாழ்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படாத அல்லது நிறைவேற்ற இயலாமல் போனவற்றிலிருந்து விடுபடுவதின் குறியீடாகவே இவ்வரிகள் புலப்படுகின்றன.


ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கவிதையின் ஆரம்பம் தொட்டு மிக இயல்பாகப் படம்பிடித்துக் கொண்டு போகும் கவிஞனின் கவிமனம், மெல்ல மெல்ல தனக்கான இலக்கை, தன் அனுபவம் சார்ந்த வாழ்வியலோடும் அது சார்ந்த நெருடலுடன், தான் சொல்ல வந்ததை நோக்கி மிக நேர்த்தியாக நகர்ந்திருப்பது இக்கவிதையின் சிறப்பாகும். எளிய சொல்லாடல்களும் காணோம்’, ரொம்ப கிட்டத்தில் போன்ற பேச்சு வழக்குச் சொற்களும் கவிஞன் வாசகனைத் தன் வசப்படுத்தவும் நெருக்கமாக உரையாடவும் மேற்கொண்ட ஓர் உத்தியாகவே அமைந்திருக்கிறது எனலாம். மேலும் இதுபோல பல கவிதைகளிலும் பேச்சு வழக்கு மொழியாடல் கையாளப்பட்டுள்ளது இந்நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளது.


ஒவ்வொரு கவிதைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட, ஏன் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருக்கமுடியும் என்று தனது கவிதை பற்றிய உரையில் கூறியுள்ளார் Scotus Eregena என்கிற ஐரிஷ் இயற்கை இறையியல் வாதி. நாம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதே இங்கு நிதர்சன உண்மையாகும். நம்மிடையே ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் கவிதைகளின் அர்த்தங்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்கிறார்கள். எனவேதான், கவிதையின் புரிதல் என்பது ஒருவர் உணர்ந்தறிய வேண்டிய ஒன்று என்றும் கூறப்படுகிறது.


இவ்வாறாக, ஒவ்வொரு கவிதைக்குமான தங்களின் சுயமனப் புரிதலோடு தம் சுய அனுபவம், வாழ்பனுபவம் சார்ந்து நுணிகி அணுகினால் எம். கருணாகரனின் ஒவ்வொரு கவிதைகளையும் வாசகர்கள் மிக எளிதாகச் சென்றடையலாம். இனிய நண்பர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் எம். கருணாகரன் அவர்கள் இலக்கிய வானில் தனி அடையாளத்துடன் மேன்மேலும் சிறப்பாகத் திகழ்ந்திட அன்பு வாழ்த்துகள்.


நவீன கவிதைகளின் புதியதொரு வடிவங்களோடு மலேசிய இலக்கிய உலகில் வலம் வரும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நமக்காகப் பேசுகின்றன. நமக்காகக் கோபப்படுகின்றன. நமக்காக அழுகின்றன. நமக்காகக் காயப்பட்டுக்கொள்கின்றன. நமக்காக நம்மையே சில வேளைகளில் நையாண்டியும் செய்கின்றன. நமக்காக நம்மை நோக்கியே கேள்விகளையும் எழுப்புகின்றன.  நம் இயலாமையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. நம் அறியாமையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நம் சுயத்தை நோக்கியும் நம் அடையாளத்தை நோக்கியும் நம் தேடலை நகர்த்துகின்றன.


நிறைவாக, கவிதைகளில் வரும் ஒவ்வொரு சொற்களும் சிறகு முளைத்துப் பறக்கின்றன. அவைகளுடன் நாமும் பயணிப்போம். ஒவ்வொரு சிறகும் ஒரு சரித்திரம் சொல்லும்.

நாளைய பொழுது நமக்காக விடியட்டும்

அன்பு வாழ்த்துகளுடன்

எம். சேகர்