திங்கள், 24 ஜூன், 2024



ஞானக்கூத்தன் மதிப்புரை - எம். சேகர்

 

ஞானக்கூத்தன்

வகை – நாவல்

எழுத்து – இந்திரஜித் (சிங்கப்பூர்)

வெளியீடு – உயிர்மை பதிப்பகம்

 

 

குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்த சிங்கப்பூர்ப்  படைப்பிலக்கியத்தில்  சமீபக் காலமாகச் செம்பவாங், ரயில், சுண்ணாம்பு அரிசி, அம்மாவின் வாடகை வீடு, அம்பரம் என வேறொரு தளத்தில் கதைகளைப் புனைவதில் குறிப்பாக நாவல் புனைவதில் ஆர்வம் மேலிட்டுள்ளதைக் காணமுடிகிறது. மா. இளங்கண்ணனின், ‘வைகறைப் பூக்கள் நாவலுக்குப் பிறகு பலரின் கவனத்தை ஈர்த்த நாவல்களாக இவை அமைந்துள்ளன.  சமூக வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படும்போதுதான் படைப்பிலக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்படும் என்கிறார் கோவை ஞானி. ஆனால், இந்த நாவல்கள் அனைத்தும் அவை நடந்த கால கட்டத்தைக் கடந்து ஒரு மீள்பார்வையாக இன்று முன்னெடுக்கப்படுவது தமிழ்ச் சமூகம் இந்தச் சிங்கப்பூர் நிலத்தில் கடந்துவந்த வாழ்வியல் அனுபவங்களின் ஒருவகை முன்னெடுப்பாகவே தெரிகிறது.

 

செம்பவாங் நாவல் அன்றைய செம்பவாங் வட்டார மக்களின் சமூக வாழ்வியலை மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ரயில், மரண சயாம் ரயில் பாதையைக் கடந்து உடைந்தவர்களின் மன உணர்வுகளையும் சுண்ணாம்பு அரிசி, ஜப்பானியர் ஆட்சியில் இங்கு நடந்த கொடுமைகளையும் வாழ்வாதாரப் போராட்டங்களையும் அம்பரம் இரண்டாம் உலகப்போரில் சிதைந்த மனித வாழ்வின் சிக்கல்களையும் மன உடைப்புகளையும் வெளிப்படுத்துவதாகவும் எழுதப்பட்டுள்ளது.

 

இந்திரஜித்தின் அம்மாவின் வாடகை வீடுஅறுபது, எழுபதுகளில் சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலைப் பின்னி எழுதப்பட்டிருந்தாலும் அதில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்னமும் நம் சமூகத்தில் தீர்க்கப்படாதவைகளாகவே இருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

 

இவர் நவீன தமிழ்ப் புனைவுலகின் மிக முக்கியமான படைப்பாளர்களில் ஒருவராய்த் திகழ்பவர். அவருடைய கதைக்களன்களும் அதற்கேற்ற தேர்ந்த சொற்பயன்பாடுகளும் கவித்துவமான எள்ளல்களில் சிக்கித் தவிக்கும் மானுட வாழ்வின் அபத்தங்களையும் அதன் பக்கங்களையும் நமக்கு மிக அருகில் கொண்டுவருபவையாக இருக்கின்றன. சின்னச் சின்ன வாக்கிய அமைப்புகளளில் சொல்லவேண்டியவற்றை மிக இயல்பாக நம் மனத்தில் பதியம் செய்வதில் சிறந்த எழுத்தாற்றலையும் பெற்றவர்.

 

 

இந்திரஜித்தின் ரயில், அம்மாவின் வாடகை வீடு, ஞானக்கூத்தன் என மூன்று நாவல்களும் சிங்கப்பூரின் கடந்த வாழ்க்கையின் பிரதிகளாக பெரியப் பெரிய விருட்சங்களாக நம் முன்னே விரிந்து நிற்கின்றன. அவை சொல்ல மறந்த, சொல்லப்படாத, எழுத்தில் இல்லாத வாழ்க்கையை நம்மில் பலர் இன்று வாழாத ஒரு வாழ்க்கையின் பல பிரதிகளை நமக்குள் காட்சிப்படுத்திச் செல்லத் தவறவில்லை. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய அன்றைய வாழ்வியல் முரண்களை இணைத்து எதிர்காலச் சமூக மாறுதல்களுக்கான விதைகளைத் தமிழ் இலக்கியச் சூழலில் விதைத்துள்ளார்.

 

இந்த நவீன காலத்தில் சாமானியர்களுக்கு நிகழும் அகபுற வாழ்வியல் சிக்கல்களை அவர்களே நம்மோடு பேசத் துவங்குகின்றனர். இத்தகையப் போக்கு இதுநாள் வரையில் நாம் கடைப்பிடித்து வந்த மரபுகளை ஆராய்ந்து, மீள்பார்வை செய்து இதுவரை இலக்கியத்தில் பேசப்படாத சக மனிதர்களின் சிக்கல்களை அல்லது அவர்களின் புதிய மன இயல்புகளைப் பதிவு செய்ய வைக்கிறது. கருத்துச் சொல்வதற்காகவும் அவற்றைப் பதிவு செய்வதற்காகவும் எழுதும் எழுத்து இன்று வழக்கிழந்து வருகிறது. கண் முன்னால் நடக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் எழுதுகிறேன் என்று படைப்பாளன் சொல்வதையும் கேட்க முடிகிறது. இந்திரஜித்தும் அதைத்தான் இப்படிப் பதிவு செய்கிறார்.

 

நான் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன். அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்பதற்காக நான் இந்த நாவலை எழுதவில்லை.

இது இப்படி இருந்தது என்பதைச் சொல்கிறேன்.

 

ஞானக்கூத்தனும் அந்த வழியேதான் செல்கிறான். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அவனது பாணியில் மிக யதார்த்தமாக எளிய மொழியில் சொல்லிச் செல்கிறான். அந்த வாழ்க்கையில் அவனோடு பயணித்த அனைவரையும் ஒவ்வொரு சூழலிலும் மறக்காமல் சொல்லிச் சொல்லிச் செல்கிறான். அவனுடனான பயணம் டைம் குளோக்காக நம்மைப் பின்னோக்கி சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்துக்குள் அழைத்துச் செல்கிறது. ஊட்லண்ட்ஸ்ஸிருந்து பாசீர் ரீஸ்ஸூக்கு நேரடியாகச் செல்லாமல் ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் நின்று நின்று செல்வதுபோல் நாவலும் சிவாவின் வாழ்வில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்குள் நின்று நின்று நிதானமாகப் பயணித்துச் செல்கிறது.

 

அந்தப் பயணத்தினூடே அவன் சந்திக்கும் மனிதர்கள் கடை முதலாளி, வேலண்ணணன், அவரின் காதலி மைனா, செம்பி, பாரி, ரத்தினம், சரோஜா, வெரோனிக்கா, சடைமுடி குளத்தோர தாத்தா, ஜோதிடர், மாட்டு வண்டி முத்தையா அண்ணன், கோயில் பூசாரி குணாளன், இட்லி கடை கந்தையா, துக்கான் முருகன், எருமையின்மேல் வரும் சீனக்கிழவன், தாமோதரன், கருப்பையா, புரட்சியாளன் ராஜன், சடைமுனி, காசி, இனிப்புக் கடைக்கார பாய், கிளி ஜோசியர் குழந்தையப்பன், தாதி நீலவேணி அக்கா, சீனத்தாதி பெய்க்குவான், கேங்ஸ்டர் மைக்கல், கோபாலு, வண்டி உணவுக்கடை ராமன், மைக்கலின் காதலி ரெச்சல், கேங்ஸ்ட்டர் தலைவன் பத்மா, பத்மாவின் தல தடி ராமச்சந்திரன், இன்னொரு தல கிஷ்டா, பத்மாவின் அண்ணன் முகிலன், முடிவெட்டும் மலாய்க்காரர் மத்தாய், ரொட்டிக்கடை ரன்பீர் குமார், சிங்கப் பெருமாள் கோயில் தவமுனி என்று இவர்கள் மட்டுமல்லாமல் இரவின் நிலவும் நட்சத்திரங்களும் தென்றலும் காளி கோயிலும் நரசிம்மப் பெருமாள் கோயிலும் என நாவல் முழுக்க நிறைந்து அன்றைய சிங்கப்பூரின் ஒரு சாமானியனின் வாழ்க்கைச் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறது.

 

அம்மாவிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல் பிழைப்பைத் தேடி சிங்கப்பூருக்கு வந்து, தங்க ஓரிடமும் இல்லாமல் பல நாட்கள் சாப்பிடாமலும் இருந்த ஓர் இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் மன நெருக்கடிகள், உள்ளுணர்வுகள், சிக்கல்கள், பாதிப்புகள், குரூரங்கள், அவலங்கள், மாற்றங்கள், வாழ்வின் அர்த்தமின்மை என பலவற்றையும் தன் எழுத்தின் வாயிலாக அழகியல் தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார் இந்திரஜித். இந்த நாவல் அன்றைய சிங்கப்பூர் மனிதர்கள் அல்லது சமூகத்தின் வாழ்வியல் இயங்கியல் குறித்தான ஒரு சிந்தனையையும் வாசகர்களிடையே ஏற்படுத்துகிறது. இதன்வாயிலாக அன்றைய சூழலில்  நிகழ்ந்த பல்வேறு பிரச்சினைகளை அறியவும் வைக்கிறது.

 

நாவலில் வரும் சில அழகியல் சொற்றொடர்கள்:

வாகனங்கள் செத்துவிட்ட நல்ல ராத்திரி

பகலை எடுத்து ஒரு மூலையில் வைத்துவிட்டது இரவு

பழைய நாளின் புழுதிகள் வந்து கண்ணை மூடின

சுருட்டுக்கு ஒரு காலை முத்தம் கொடுத்து கனன்றது நெருப்பு. சுருண்டு எழுந்தது மோகப்புகை

ஜயாயிரம் வருடமாக நாங்கள் எந்தப் பெண்ணையும் தாலி கட்டாமல் தொடுவதில்லை

தமிழ் தெரியாதவர்கள்கூட அவரை நல்ல கவிஞர் என்று சொல்வார்கள்

சுட்டுப்போட்ட தோசை ஆறிப்போன மாதிரி வானம் வாடி இருந்தது

ராத்திரிப் பூ மாதிரி தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது நிலவு

நம்மள மதிக்காத ஒருத்தர மதிச்சு பதில் சொல்றது தப்பு

தமிழ்ல ஹொர்மாட் சம்பாய் கெரமாட்டுனு சொல்லுவோம் (இது மலாய் சொற்றொடர். வழக்கத்தில் தமிழாக மாறிவிட்டதைக் குறிக்கிறது. சமாதிக்கு செல்லும்ரை நமக்கு மரியாதை கிடைக்கும்)

 

நம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் தீனி போடும் நிறைய வாக்கிய அமைப்புகள் இந்நாவல் முழுக்க மகரந்தப் பூக்களைப்போல பரவிக் கிடக்கின்றன.

 

இந்திரஜித்தின் ரயிலில் பயணித்தபோதும் இந்த ஞானக்கூத்தனோடு உடன் சொன்றபோதும் வாசகனாய் என்னால் உணரமுடிந்தது ஒன்றுதான்.

இன்னும் கொஞ்சத் தூரம் பயணித்திருக்கலாமே என்பதுதான். ஒரு வாசகனின் மனத்தில் இத்தகைய ஏக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அவரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அடுத்த தலைமுறையினர் சிங்கப்பூரின் முந்தைய முகத்தை நம்பகத்தன்மையோடு இன்னும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள நிறைய எழுதுங்கள்.

உங்களின் தொடர் இலக்கியச் செயல்பாடுகளுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 


 

செவ்வாய், 7 மே, 2024



அம்மாவின் வாடகை வீடு

வகை: நாவல்

எழுத்து: இந்திரஜித்

நூல் மதிப்புரை: எம்.சேகர்

 

சிங்கப்பூரின் பிரமாண்டம் பல அடுக்குகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். வெளியில் இருந்து பார்ப்போரின் கண்களுக்குப் புலப்படாத பல கதைகள் இந்த அடுக்குகளின் கட்டங்களுக்குள் யார் பார்வைக்கும் படாமல் கிடக்கின்றன. அப்படிப்பட்டாலும் அதைப்பற்றி இங்கு யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இந்திரஜித்தின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பெருசாக ஏதும் நடக்காதவரை அதைப்பற்றி  யாரும் வாயைத் திறக்கப்போவதில்லை. வாழ்க்கையை அவர்கள் அதன் போக்கிலேயே விட்டு அதை வாழப் :பழகிக்கொள்கிறார்கள். அதுதான் அவர்களுக்கான வாழ்க்கை என்றாகிவிட்டது.

இத்தகைய வாழ்க்கைச் சூழலில் வாழும் பலரை நாம் தினமும் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறோம். மாறாக அவர்களும் நம்மைக் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த  அடிதட்டு மக்களின் ஒரு குறியீடுதான் இந்த அம்மாவின் வாடகை வீடு நாவலில் வரும் வாசுகி.

அம்மாவின் பிடிவாதத்தால் அவள் விருப்பத்திற்கு மாறான கல்யாணம்.

வாசுகிக்கு வந்த ஆத்திரத்துக்கு ஏழு பிள்ளைகள் பெற்றாள் இப்படித்தான் இந்திரஜித் நாவல் முழுக்கச் சொல்விளையாட்டுகள் புரிகிறார்.

அவளுக்குப் பிறந்தது ஏழும் ஆண் பிள்ளைகள். ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற சொலவடை ஒன்று உள்ளது. இதற்கு முரணான கதையமைப்பு இந்த அம்மாவின் வாடகை வீடு. சிங்கப்பூரில் வீடு வாங்க வசதியில்லாதவர்களுக்கும் ஆதரவற்றோருக்கும்தான் இத்தகைய  வீடமைப்புக் கழக வீடுகள் வாடகைக்குக் கிடைக்கும். 

இக்கதையில் வருபவர்கள் தங்கள் வாழ்க்கைக்குத்  தேவையானவை எவை எனக் கண்டறிந்து அதையே பற்றிக்கொள்ளப் போராடுகிறார்கள். சமூகத்தில் வாழ்க்கை எனும் நெருக்கடியைச் சந்திக்கும்போது  ஆற அமர சிந்தித்து முடிவெடுக் அவகாசமில்லை. சுனாமியில் சிக்கியவன் கிடைத்ததைப் பற்றிக்கொண்டு போராடுகிறான். இதுதான் இந்த வாழ்க்கையின் இருப்பு. தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்க காலகாலமாய்ப் பின்பற்றி வந்த மரபையும் பண்பாடுகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் சிந்திக்கவியலாமல் நடைமுறைகளை மீறி தன்னிச்சையாக முடிவெடுத்துக்கொள்கிறார்கள். மனிதர்கள் தங்களின் இருப்பை நிலைநிறுத்த தேர்ந்து எடுத்த இருப்பு நிலைதான் இருப்பியல் வாதம் அல்லது இருத்தலியல் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த நாவலை ஓர் இருத்தலியல் நாவலாக வகைப்படுத்தலாம். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களும் தத்தம் இருப்பைத் தேர்ந்தெடுத்து அதன்தன் வழியில் பயணிக்கின்றன. பல தங்கள் இலக்கை அடைகின்றன. சில தடம் புரள்கின்றன.

வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் செல்வங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உழைப்பே பிராதானமாக இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் அனைவரும் ஒரு புள்ளியில்  ஒன்றாகவே இணைகிறார்கள். அதுதான் ஏழு ஆண் பிள்ளைகளும் அம்மாவைப்பற்றிய எண்ணமே இல்லாமல் வயோதிக நிலைக்கு வந்துவிடுகிறார்கள். அம்மா பலபல வருடங்களுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கும்போது அம்மாவின் கூற்றை இப்படி அமைத்திருப்பார் இந்திரஜித்.

பூதம் பூதமாக ஆறு மகன்களும் நிற்பதைப் பார்த்துப் பயந்துவிட்டாள். குழந்தைகளைதான் பெற்றாள். இந்தப் பூதங்களை யார் பெற்றது? அதிலும் எல்லாமே கிழவர்கள்.

முதல் அத்தியாயத்தில் கடைசி மகன் ராஜாவின் வரவோடு தொடங்கும் கதை, இறுதி அத்தியாயத்தில் ஆறு மகன்களின் வரவோடு நிறைவுபெறுகிறது.

இங்கு நிறைவு பெறுவது நாவல் மட்டும்தான். வாசுகி, நளினாகுமாரி மற்றும் நளினாகுமாரியின் மூன்று பெண்பிள்ளைகள் வாழ்க்கை இன்னும் அந்த அடிதட்டு கட்டுக்குள்ளேயே சிக்கியிருக்கிறது.

ஒரு பொருளை உருவாக்குவதற்கு பலவேறு மூலப்பொருள்கள் தேவைபடும். அதுபோலத்தான் வாழ்வில் கண்டவை, கேட்டவை, அனுபவித்தவை என இவைகளோடு கற்பனைத்திறனையும் ஒன்றாகக் கோர்ப்பது இலக்கியப் படைப்பாகும். அத்தகைய இலக்கியப் படைப்பின் ஒரு வகை நாவலாகும். இந்திரஜித்தின் இந்த நாவல் கதையின் தொடக்கத்தில் வாசுகி என்ற ஒரு தாயின் ஆளுமையையும் பிடிவாதக் குணத்தையும் பிறகு அவளின் இயலாமையையும் அதனுடன் சேர்ந்த வைராக்கியத்தையும் முன்வைத்து புனையப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம் என்பது பெரிதும் கல்வியைச் சார்ந்துள்ளது என்பதை இந்த வாசுகியின் மனப்பான்மையின்மூலம் உணர்த்தியுள்ளார் நாவலாசிரியர். தன் பிள்ளைகளைப் படி படி என்று அவர் முரட்டுத்தனமாக முன்னெடுக்கும் பலவும் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது கல்வியின் அவசியத்தை உணர்த்த எடுக்கப்படும் முயற்சிகளாகவே பார்க்க முடிகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் ஆர்வமாகப் பயின்று வாழ்க்கையில் முன்னேறுவதும் ஆர்வமில்லாதவர்கள் தங்களுக்குப் பிடித்த வேறொன்றைப் பிடித்துக்கொண்டு நகர்வதும் இன்றைய கல்விச் சூழலில் இயல்பான ஒன்று. எது எப்படி இருப்பினும், வாழ்வின் விழுமியங்களின் நிலை என்ன? என்ற ஒற்றைக்கேள்வியை இந்த நாவலின் முழுக்கக் கேட்காமல் கேட்க வைத்துள்ளார் இந்திரஜித்.

பொதுவாகத் திறளாய்வாளர்கள் நாவலின் கதைப்பின்னலை நெகிழ்ச்சிப் பின்னல், செறிவுப் பின்னல் என இருவகையாகப் பிரித்துச் சொல்வார்கள். நாவலாசிரியர் இந்திரஜித் இந்த நாவலை நெகிழ்சிப் பின்னல் முறையில் அமைத்துள்ளார். கதைப்பின்னலைக் காரணகாரிய முறைப்படி அமைக்காமல் இடையறவுபட்டு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்து, கதை சொல்லலை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டேயிருக்கிறார். வசக மனங்களைத் தன் எழுத்தின் பக்கம் கவர்ந்திழுத்துக்கொள்கிறார்.

நாவலில் வருகின்ற வாசுகி, முன்வீட்டு காயத்ரி, இளைய மகன் ராஜா - நளினாகுமாரி, கணவர் முருகேசு கிராணி, வாசிகியின் மாமன் மகன் பகலே, மூத்த மகன் நாடய்யா -  முத்துலெட்சுமி, ஹென்றி, அவன் அப்பா சீன ராமர், குமார் மோகன் - பொன்னி, அப்பு - தாரகா, சீலன், துறவி சந்திரன், ஆறுமுகம் – சகுந்தலா என இவர்களோடு ரேட் ஹில் பகுதியில் வசித்து வந்த ஒரு சிட்டுக்குருவியையும் எலியையும்கூட இந்நாவலில் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தியுள்ளார் இந்திரஜித்.

கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக ஒவ்வொரு அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. சிக்கலில்லாத கதை சொல்லல். யாருடைய நியாயத்துக்காகவும் நாவலாசிரியர் வழக்காடாமல் அவரவர் போக்கில் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்திரஜித் எழுத்தில் வழக்கமாக இருக்கும் அங்கத மொழியும் எள்ளலும் துள்ளலுமான எழுத்து நடையும் இந்த நாவலிலும் இருக்கிறது. எளிமையான செல்லாடல்கள், சின்னச் சின்ன  வாக்கிய அமைப்புகள், இரண்டாம் மொழியாக தமிழைப் பயின்ற, பயிலும் சிங்கப்பூர் வாசகர்களுக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும் கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக:

அம்மாவால் படிப்பு கிடைத்தது. படிப்பால் வேலை கிடைத்தது. வேலையால் மத்திய சேமநிதியும் மனைவியும் கிடைத்தன

பாரு தம்பி, எனக்கு நாற்பது வருஷமா நெஞ்சு வலிக்குது. வலிச்சா உனக்கு நெஞ்சு இருக்குன்னு அர்த்தம்

ஹென்றியின் அப்பா பட்டப்பகலில் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டான்

அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் சிங்கப்பூருக்கு அயோத்தி என்று பெயர் வைக்க வேண்டி இருந்திருக்கும்

சிங்கப்பூர் வாழ்க்கையை சிங்கப்பூருக்கான மொழிநடையில் கொடுத்திருப்பதற்கும் சிங்கப்பூரின் அடிதட்டு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்தியதற்கும் எழுத்தாளர் இந்திரஜித்திற்கு அன்பான நன்றியும் வாழ்த்தும்.

இங்கு நான் சொன்னது கொஞ்சம்தான். நாவல் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நாவலை வாசியுங்கள். என்னைவிட நாவல் உங்களிடம் நிறையவே பேசும்.


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். 


 

திங்கள், 15 ஏப்ரல், 2024



சீனலட்சுமி – லதா  (சிறுகதைத் தொகுப்பு)

கற்பிதங்களுக்குள் இயங்கும் அக உலகும் புற உலகும் – எம்.சேகர்

 

ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வை கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. படைப்பாளியின் இதயம் விசாலமான பார்வை மனிதாபிமானம், முரண்நிலைகள் மற்றும் விளைவுகள் குறித்த தார்மீகக் கோபம், ஒரு சமூக நிகழ்வு அல்லது நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகள் மற்றும் தாக்கங்கள் போன்றவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிற உந்துதல் ஒரு படைப்பை உருவாக்கவைக்கிறது அல்லது உருவாக்கிக்கொள்கிறது.

 

படைப்பாக்கச் செயற்பாடென்பது குறிப்பிட்ட சட்டக எல்லைக்குள் முடங்கிவிடும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது. பரந்த பார்வையுடன் ஒரு கட்டறு வெளியில் சஞ்சரிக்கும் இயல்பினை ஒரு படைப்பாளி தன் இயல்பாய் வகுத்துக்கொள்ளவேண்டும். தனது அவதானப் பரப்பினை மேலும் விரித்துக்கொள்வதோடு நுணிகிய நோக்குடன் மனித இயல்பினைக் கவனித்துப் பதிவு செய்யும் தன்மையும் தேவைப்படுபகிறது.

 

தனக்கென ஒரு மொழிநடை, ஒரு சொல்முறை, ஒரு பார்வை என்பனவற்றைக் கொண்டிருக்கும் படைப்பாளி லதா, தான் முன்வைக்க விரும்பும் விஷயங்களைப் பரந்ததொரு விதத்திலான ஒரு மொழித்தளத்தில் தந்திருப்பது அவரின் இந்தச் சீனலட்சுமி சிறுகதைத் தொகுப்பை மேலும் அழகுடன் மிளிர்ந்திடவைத்திருக்கிறது.

 

வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அல்லது சங்கடங்களை எடுத்துக்காட்டுவதைத் தனக்கே உரித்தான பாணியில் கையாளுபவராக படைப்பாளி லதா விளங்குவதை இச்சிறுகதைத் தொகுப்பின்மூலம் அவதானிக்க முடிகிறது. தனது கதைகளில் ஆர்ப்பாட்டமோ கோஷமிடும் செயற்கைத்தன்மையோ இல்லாது மிக இயல்பாக தான் நேசித்ததையும் பார்த்ததையும் கேட்டதையும் அனுபவித்ததையும் பதிவிடுகிறார்.

 

லதாவின் சிறுகதைகளில் தனித்துத் தெரியும் சில பண்புகள் வாசகனின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர் படைப்பின் அழுத்தத்தை நடுநிலையானவையாகவும் வைத்திருக்க வழிசெய்கிறது. இத்தகைய உணர்வு வாசகனிடத்தில் தோன்றும் விதமாய் எழுதுவதற்கு ஒரு படைப்பாளியின் உண்மைத்தன்மை (Sincerity) மிக அவசியமாகிறது. இத்தகைய ஒரு நோக்கில் லதா வெற்றி பெறுகிறார் என்றே கூற வேண்டும்.

தான் வாழுகின்ற சூழலை, காலத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச் செல்கின்ற அரிய பணியினைப் படைப்பாளி ஆற்றுகிறான். ஒரு தலைமுறையினரின் வாழ்வியல் நடத்தைக் கோலங்களை மிக நுணுக்கமாகவும் அழகாகவும் பதிந்து வைக்கின்ற ஆற்றல் படைப்பாளிகளிடம் மட்டுமே இருக்கிறது. இத்தகைய வரைவிலக்கணங்களைச் சாத்தியப்படுத்துகின்ற ஆழமான பணியினை சிங்கப்பூரின் படைப்பாளியான லதா நிரூபித்து வருகிறார் என்பதற்கு அவரின் கதைகளே சாட்சி.

 

எட்கார் அலன் போவின், ‘சிறுகதையானது தன்னளவில் முழுமைபெற்றதாகவும் ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கக்கூடியதாகவும் அதே சமயம் சிறுகதை தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாகயிருக்க வேண்டும் என்னும் கூற்றுக்கமைய இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பான்மையான கதைகள் பதினொன்று தொடக்கம் பதினைந்து பக்கங்களுக்குள் தம்மை முடித்துக்கொள்கின்றன. சில கதைகள் பதினேழு, பத்தொன்பது பக்கங்கள்வரை நீடித்துக்கொண்டுள்ளன. இதில் பல கதைகளை ஏற்கனவே வல்லினத்தில் வாசித்தபோது இருந்த நீளம், தொகுப்பிற்காக எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

 

இத்தொகுப்பிலுள்ள கதைகள் நம் கண்ணில் விழுந்த அல்லது விழாத அனைத்தும் புனைகதைகளாக உருவகம் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைத்துள்ளது. அதிலும் அக நிலையிலும் புற நிலையிலும் என இரண்டு நிலைகளிலும் நின்று கதைசொல்லி  சிங்கப்பூரின் மண்மணத்தை புதிய பரிமாணத்தோடு நம்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரைச் சார்ந்து பல கதைகள் இதுவரையில் புனையப்பட்டிருந்தாலும் லதாவின் பார்வையில் அவை வேறொரு மனவெளியைப் பெறுகின்றன. சிங்கப்பூரில் எழுதப்படுவதற்கு நிறையவே இருக்கின்றன. ஆனால், ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஓடுவதுபோல் எழுதியதையே எழுதிக்கொண்டிருக்கும் அந்தப் போக்கில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்துவதாக இக்கதைகள் அமைந்துள்ளன. மண்ணும் மனம் சார்ந்த வலிகளும் கதைகளின் உயிர்நாடியாக விளங்குகின்றன. அலிசா, இளவெய்யில், காவடி, நிர்வாணம், வலி, சீனலட்சுமியின் வரிசை போன்ற கதைகள் தனிமனித உணர்வுகளை மையப்படுத்துகின்றன. தேக்காவில் ஒரு பாலம் இருந்தது, சிலந்தி கதைகள் சுதந்திர போராட்டம், நாட்டுக்கான போர் என சமூகம், வராலாற்று பின்புலத்துடன் புனையப்பட்டுள்ளன. பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் மறுபட்ட கதைக்களத்தில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள், நம்பிக்கைகள் என சிங்கப்பூரின் இன்னொரு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

 

அலிசா

 

நிலம் ஒரு குறியீடு. அது தன் பெறுமதியை எப்பொழுதுமே இழந்ததில்லை. அது ஒரு அடையாளம். ஒரு மக்கள் கூட்ட அடையாளத்தின் அடையாளம். சிங்கப்பூரின் பெருநிலத்திலிருந்து தள்ளி ஒரு குட்டித் தீவாயிருக்கும் பூலாவ் உபின் பழம்மக்களின் தனித்த அடையாளம். இன்றும் அன்றைய சிங்கப்பூர் வாழ்வியலுக்கான அடையாளமாகவே தன்னை இதுநாள்வரையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. சிங்கப்பூரின் பெருநிலத்திலிருந்து இங்கு வரும் அலிசாவை மையப்படுத்தி, பெருநகர வாழ்க்கைக்கும் கிராமத்து வாழ்க்கைக்கும் உள்ள உறவுகளையும் வேற்றுமைகளையும் விரிசல்களையும் இயல்பாக விவரித்துள்ளது. கடலுக்குள் நீச்சல் குளத்தைத் தேடும் அலிசாவையும் வலி கதையில் கடலை மீன் தொட்டிக்குள் அடக்கி, கடலுக்குள் செல்லும் தன் ஆசையை இப்படியாக நிறைவேற்றிக்கொள்ளும் அவளையும் தொடர்புப்படுத்தியும் பார்க்கும் வாய்ப்பை இரு கதைகளும் வழங்கியுள்ளன எனலாம்.

 

புலாவ் உபினில் சுதந்திரமாக உலாவும் அலிசாவோடு அங்குள்ள வாழ்வியற் சூழலோடு அம்மக்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் சார்ந்த தொழில்களோடும் மீன் பிடிக்கும் பல முறைகளோடும் சேர்ந்தே வாசகனாய் நானும் இணைந்து பயணிக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் கதை. பலமுறை புலாவ் உபினுக்குச் சென்று வந்திருப்பதால் அங்குள்ள சீனக்கோயில், ஐயா கோயில், குவாரி போன்றவை கதையில் வாசிக்கும்போது கதையை மனத்துக்கு நெருக்கமாய் கொண்டுவந்துவிடுகிறது. பெரும்நகரம், கிராமம் என இரண்டு முரண்களுக்கும் தொடர்பாடலாய் அலிசாவின் கதாபாத்திரப்படைப்பு நயம்பட படைக்கப்பட்டிருக்கிறது.

 

இளவெய்யில்

 

எந்த ஒரு படைப்பும் நியமிக்கப்பட்ட சமூக, பண்பாட்டு அம்சங்களைப் பிரதியீடு செய்யும் வகையில் அமையவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தன்னைப் பாதித்த விஷயங்களை கலைவடிவங்களாக வெளிப்படுத்தக்கூடிய நுண்ணுணர்வும் படைப்புச் சுதந்திரத்தின் எல்லைகளை அறிகின்றன பக்குவமும் ஒருங்கிணைந்திருத்தல் அவசியமாகிறது. இக்கூற்றை இளவெய்யில் கதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கதையில் நீலமலர், ‘மெக்டோனால்ட்ஸ் காபி அருந்துவதும் அதன் தொடர்பான விவரணைகளும் எனக்கும் உடனே ஒரு காப்பியை அருந்திவிடவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது. இப்படியாக வாசகனைத் தனது எழுத்துக்குள் கட்டிப்போடும் வித்தை லதாவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. தாய்மையின் உணர்வுகளையும் அதன் மகிழ்ச்சியோடு கூடிய வலிகளையும் நமக்கும் கடத்திவிடும் கதைப்போக்கு சிங்கப்பூரின் ஆசிரியர் தொழிலில் இருக்கும் பெண்களின் சிக்கல்களையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. இக்கதை நீலமலர் என்னும் பாத்திரத்தின் உணர்வு நிலையை உருக்கமாக உயிர்த்துடிப்புடன் பதிவு செய்கிறது.

 

காவடி

 

இக்கதையின் வாயிலாக முரண்தருணங்களின் இயல்பினையும் பொதுவெளியில் கட்டமைக்கப்படும் கொண்டாட்ட மனநிலையையும் மிக எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார். சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டாடி கடவுளை ஒதுக்கும்போக்கு தமிழகத்திலிருந்து இங்கு வந்தபோது, அது சிங்கப்பூரர்களின் வாழ்க்கையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தியது. கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவள், பின்னாளில் அவளுக்கு வாய்ந்த கணவனோ காவடி எடுக்கும் வழக்கமுள்ளவனாதலால் அவளும் காவடி எடுக்கும்போது விரதம் இருந்து அனைத்தையும் விருப்பத்துடன் செய்கிறாள். சிறுவயதில் நோரிஸ் ரோட்டில் தங்கியிருந்ததால், சிராங்கூன் சாலையில் செல்லும் தைப்பூசக் காவடிகளைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கும். வீட்டிற்குத் தெரியாமல் பார்க்கச் சென்றுவிடுவாள். வயதான காலத்தில் எழுந்து நடமாடக்கூட முடியாமல் இருக்கும் நேரத்திலும் சிலா காவடி பார்க்கவேண்டும் என அவள் அடம்பிடித்துக்கொண்டிருப்பதாய் கதை அமைகிறது. சிறுவயதில் நமக்குப் பிடித்த பல விஷயங்களை வயதான காலத்திலும் தீவிரமாய் காணவேண்டும் என்ற தனிமனித ஆசையைக் கதை விவரிக்கிறது.

 

சிலந்தி

ஒரு வரலாற்றுப் பின்புலத்துடன் கதை எழுதப்பட்டிருந்தாலும், சிலந்தியின் வலைபின்னலைப் போல் கதையைப் பின்னியுள்ளார் புனைவாளர். சிலந்தி தொடர்பான ஆழமான விவரணைகள் கதையின் மையமாக இருந்தாலும் அதற்கேற்ப ஒரு சூழலை உருவாக்கி கதையை நகர்த்தி சிலந்தியின் பின்னலைப்போல் போரின் அரண்களை உணர்த்தும் கதை. டைகர்’ ‘ஜோக்கர் என சிலந்திகளுக்குப் பெயிரிட்டு அவற்றைப் போட்டியில் இறக்கிவிடும் பிள்ளைகளின் விளையாட்டாக அது இருந்தாலும், அதனைப் போரின் ஒரு தந்திரமாகக் காட்டியிருப்பது பாராட்டக்கூடியது. சிறுவயதில் மற்ற பள்ளி மாணவர்களோடு சேர்ந்து சிலந்தியைக் காலியான நெருப்பட்டிப் பெட்டிக்குள் வளர்த்தது, சிலந்திகளைச் சண்டைக்கு விடுவது என என் சிறுவயது நினைவுகளையும் தட்டிப் பார்த்தது இச்சிறுகதை. சிலந்தி தொடர்பான பல தகவல்களை இக்கதையின் மூலம் பதிவு செய்துள்ளார். அதையும் தாண்டி உளவியல் சார்ந்த பல சித்தாந்தங்களையும் உணர்வுகளையும் இக்கதையின் வாயிலாக உணர்த்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

 

சீனலட்சுமியின் வரிசை

சிங்கப்பூரில் அனைத்திற்கும் வரிசையாக நிற்பது சிங்கப்பூரர்களின் வாழ்வியற் கலாசாரமாகவே மாறிவிட்டது. முதலில் பேருந்துக்காக வரிசையில் நிற்பது தொடங்கி இப்போது புதிதாக அறிமுகமாகும் பொருள்களுக்கும்கூட அதிகாலையிலேயே வரிசையில் நிற்கும் போக்கு இங்கு வாடிக்கையாகிவிட்டது. பலருக்கு இப்படி வரிசையில் நிற்பது பிடிக்காத ஒன்றாய் இருந்தாலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக தாங்களும் வரிசையில் நிற்பார்கள். அப்படி ஓரிருவர் வரிசையைத் தாண்டி முன்னால் சென்றுவிட்டால், அவர்களைத் திட்டுவதும் அல்லது வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் போடுவதுமாக இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி வரிசையில் நிற்பது இக்கதையின் சீனலட்சுமிக்குப் பிடிக்கும். பொதுத் தேர்தலுக்கு வரிசையில் நிற்பதாய் கதை தொடங்கி, அமரர் திரு. லீ குவான் யூ வின் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வரிசை வரையிலும் கதை நம்மையும் நெடுநேரம் வரிசையில் நிற்கவைத்து விடுகிறது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஓர் ஆசை இருக்கும். இது சீனலட்சுமியின் ஆசை. இக்கதையில் வரும், ‘சுதந்திரம் கெடைச்சி அம்பதாவது வருசத்துலதான் எல்லா தொகுதியிலயும் தேர்தல் நடக்குது சிந்திக்க வைக்கும் வரிகள்.

 

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

 

போராட்ட சூழலில் போராளியாக ஆக விரும்பி நேதாஜியின் ஐ.என்.ஏ வில் சேரும் திருமணமான அக்கா கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும், பழைய தேக்கா பாலம் தொடர்பான காட்சிப்பதிவுகள், நேதாஜி சிங்கப்பூருக்கு வந்தபோது ஏற்பட்ட சுதந்திர அலை, அதன் பரபரப்பு, இங்கிருந்த மக்கள் நகை, காசு என்று கையிலிருந்ததை நேதாஜியிடம் கொடுத்தது, சாப்பாட்டுக்காகவும் வேலையில்லாததாலும் படையில் சேர்ந்த கதையும் நமக்குத் தெரிய வருகிறது. ஜப்பான்காரன் ஜெயித்துவிட்டால் நாம் என்ன செய்வது? ஜப்பான் மொழிதான் பேசவேண்டும், படிக்க வேண்டும் கவலையாக இருந்தது எனவும் ஒரு சாராரின் கவலையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஐ.என்.ஏ வில் உள்ள நுண்அரசியலில் படையில் சேர்ந்துள்ள தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் இன்னல்களும் ஏற்றத்தாழ்வுகளும் கதையின் வாயிலாக உணர்த்தி, நாட்டுக்காக வெளியே போய் போராடுவதைவிட இச்சமூகத்தில் முதலில் பெண்களுக்ககாகப் போராடவேண்டும் என்ற உணர்வில் படையை விட்டு வெளியேறிய ஓர் அக்காவின் கதையாக இருந்தாலும், இன்றளவும் பெண்களுக்கான இடம், அவர்களின் குரல் நம் சமூகத்தில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் கதையாக இதை நான் பார்க்கிறேன். கதையை ஒரு நீட்சியான விசாரணையாக ஒருங்குவியமைத்து அழகுற நகர்த்தி விடுகிறார் கதாசிரியர்.

 

நிர்வாணம்

அம்மா, மகள் இருவருக்குமான இருக்கும் அந்தரங்க உணர்வலைகளைக் கதையின் வாயிலாக மிக அழகாகக் கட்டமைத்துக் கடத்தியுள்ளார் லதா.  மேலும், இன்றைய இளம் வயதினருக்கு எதிலும் அவசரம், எதையும் விரிந்த மனத்தோடு பார்க்கும் விசாலமான பார்வையும் குன்றிபோய்விட்டதையும் கதை உணர்த்துகிறது. புரிந்துணர்வு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயைப்போல நாளடைவில் நம் சமூகத்தையும் அழித்துவிடும். புரிந்துணர்வு ஆண், பெண் இருவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படை பண்பு என வலியுறுத்தும் கதையாக இருந்தாலும் ஓர் அம்மாவுக்கும் மகளுக்குமான அந்தரங்க உணர்வின் வெளிப்பாடே மனப்படிமங்களாக கதையில் மேலோங்கி இருக்கிறது. சமூக வாழ்வியற் புலத்தின் யதார்த்த வாழ்வை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தும் கதைகளில் இதுவும் ஒன்று.

 

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

 

காலத்திற்கேற்ற செறிவான மொழிநடையும் புதிய எடுத்துரைப்பு முறையும் கொண்ட கதையாக இதைக் கூறலாம். இக்கதையிலும் பூனைகளுக்கு உணவளிப்பதன் மூலமாக தாய்மையின் பண்புகளுக்கு மேலும் பெருமை சேர்க்கிறார். மேலும், தனிமையில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாகப் பூனைகளுக்கு உணவளிக்கிறார்கள் என்பதையும் பதிவிடுகிறார். நாம் அன்றாடம் பார்க்கும் செயல்கள்தான் இவை. ஆனால், இதற்குள் இத்தனை மனோவியல் கருத்துகள் இருக்கும் என்பதை இக்கதையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. நாம் படித்து தெரிந்துவைத்திருக்கும் பல அறிவியல் தகவல்கள் நடைமுறை வாழ்க்கையில் முரணாக இருப்பதையும் கதை உணர்த்துகிறது. மேலும், ‘வெங்சு என்ற மொழி பற்றியும் அம்மொழி இந்தப் கறுப்புப் பூனைக்கும் அந்த ரோத்தான் கிழவருக்கும் மட்டும் தெரிந்த மொழி என்பதையும் கதை தெளிவுபடுத்துகிறது.

ஒவ்வொரு கதைக்கும் கதாசிரியர் மிகவும் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் என்பதை அவரின் கதைகளை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

 

வலி

 

கையிழந்தவர்களின் வலியை கனத்த மனத்தோடு நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கதை. முன்பு சொன்னதுபோல அலிசா கதையின் தொடர்ச்சியாகவும் இக்கதை நகர்வினைப் பார்க்கலாம். கடலில் அனாவசியமாக மீன்களைப் பிடித்து பெரும் கடல் ஆளுமையாக இருந்தவள் ஒரு விபத்தில் தன் இரு கைகளையும் இழந்தபின், தான் பார்த்து மகிழ்ந்த கடலை தன் வீட்டின் மீன்தொட்டிக்குள் அடைத்து வைக்கிறாள். அந்த மீன் தொட்டியைச் சுத்தப்படுத்துவதற்குக் கூட மற்றவர்களின் உதவியை நாடும் அவளின் வலி நிறைந்த வாழ்க்கை நமக்குள்ளும் ஒரு வித வலியை ஏற்படுத்திவிடுகிறது. தனிமையில் உழன்று வெறுமையில் வெதும்பும் ஒரு வாழ்வைப் புடம் போட்டுக் காட்டுகிற இக்கதையில் யாருமில்லாமல் அவள் படும் நரக வலியும் வேதனையும் தார்மீக ஓலமாய் கதை நெடுகிலும் ஒலிக்கிறது.

 

பொதுப்பார்வையில் உலகின் முதல்தர நாடாக, செல்வம் கொழிக்கும் நாடாக சிங்கப்பூர் திகழ்ந்தாலும் இங்கு இன்னமும் தொடப்படாத  சொல்லப்படாத பல வாழ்வியற் கதைகள் ஒளிந்தேயிருக்கின்றன என்பதற்கு இக்கதையும் நல்லதோர் எடுத்துக்காட்டு.

 

அகமனத்தில் கட்டமைக்கப்படும் நிஜத்தின் பதிவுகளைச் சொற்குறியீடுகளில் உள்வாங்கி உரைநடையில் அமைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைகளை வாசிப்பது என்பது ஒரு சுகமான வாசிப்பு அனுபவமாகவே எனக்குள் இருக்கிறது. இச்சுகத்தை அனுபவிக்கின்ற பாக்கியம் வாசகனாய் இருந்து வாசித்தால் மட்டுமே சாத்தியமாகும். இவரின் மொழிநடை அழகானது, சரளமானது. சிங்கப்பூரின் வாசம் நிறைந்தது. இவர் வெறும் கற்பனைக்கதை எழுதுபவர் அல்ல. இவருடைய கதைகள் யதார்த்தம் நிறைந்தவை. தான் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் ஆய்வுநிலைக்கு உட்படுத்தி நல்ல சிறுகதைகளாக உணர்வுப்பூர்வமாக எழுதும் திறன் பெற்றவர்.

 

பாலபாஸ்கரன் தனது ஆய்வுக்கட்டுரை ஒன்றில் சிங்கப்பூரின் முதல் சிறுகதை 1924 ஆம் ஆண்டில்தான் வெளிவந்ததென்று குறிப்பிட்டிருப்பார். அதை வைத்துப் பார்க்கும்போது இந்த 2024 சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளில் நூற்றாண்டு விழாவாக அமையும். நூறாண்டு சிங்கப்பூரின் சிறுகதை வளர்ச்சி எப்படி இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு லதாவின் சீனலட்சுமியைத் தைரியமாக வாசிக்கக் கொடுக்கலாம்.

 


எம்.சேகர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

 

11 Feb 2024