ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் ஓர் உரையாடல்

எம். கருணாகரனின் கவிதை மொழிகவிதைகளுடன் ஓர் உரையாடல்எம்.சேகர்


தொடர் (2)

வேண்டுதல்

கடவுளிடம் கேட்டுப் பார்க்கலாம்
புண்ணிய ஆத்மாக்களின்
வருகைக்கானக் கால அளவை
நீட்டி வைக்காமல்
வேண்டுதலை நிறைவேற்ற
சீக்கிரம்
வருகையை துரிதப்படுத்தலாம்
என்று


வந்து போகின்றவர்களின்
ஆத்ம பரிவர்த்தனை
ஆக்கத்தையழித்து ஆழிவுகளைக்
கொடுத்துக் கொண்டிருக்கிறது


மனிதம் அழித்து மனிதம் வாழ
உபாசனைகள் தொடர்வதைத்
தடுக்க முடிவதில்லை


கடவுளைத் தேடிப் போனேன்


அவர் மழுங்கியக் கத்தியைத்
தீட்டிக் கொண்டிருந்தார்


சமுதாயத்தின் ஓர் அங்கமாக அதனோடு இணைந்தும் முரண்பட்டும் இசைந்தும் மோதியும் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் சூழலில் வாழ்பவன் மனிதன். மனித குலத்தின் வாழ்க்கை நடைமுறைகளினால் அவனுக்கு ஏற்படும் உணர்வுநிலையின் ஒரு வெளிப்பாடாக அவனுக்குள் குமுறிக்கொண்டிருப்பதை எழுத்துகளாக உருமாற்றி வெளிக்கொணருகின்றான். அவன் வெளிக்கொணரும் அத்தகைய எழுத்துகளில் அவனும் இருக்கிறான். அவனைப்போன்ற பிறரும் இருக்கிறார்கள். அவனைப் போன்ற பிறரும் அதனை எதிர்கொள்கின்றனர். எனவே ஒரு படைப்பானது அதன் தோற்றம், அதன் பொருள், அதன் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதனோடு தொடர்புடையதாக விளங்குவது இங்குத் தவிர்க்க இயலாததாகிவிட்டது.


இக்கவிதையின் முதல் வாக்கியமும், 

 /கடவுளிடம் கேட்டுப் பார்க்கலாம்/

இறுதி வாக்கியமும்,

 /அவர் மழுங்கியக் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தார்/

என இக்கவிதையின் ஆதியும் அந்தமும் முரண்பட்டு நின்று சமகால வாழ்வியலின் சமூக, பொருளாதார, சமய தார்மீக நியாயங்களின் முரண்களைச் சுட்டி நிற்கின்றன. கூடவே நம்மவர்கள், கொடுமை கொடுமைன்னு கோயிலிக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுதுன்னு சொல்வதுபோலத்தான் இக்கவிதையும் இயலாமையின் எதார்த்தத்தை மிகவும் இயல்பாகச் சொல்லிச் செல்கிறது.


புண்ணிய ஆத்மாக்களின் வருகையை வேண்டி கவிதை நகருகிறது. எவை இந்தப் புண்ணிய ஆத்மாக்கள்? அவைகளின் தேவைகள் என்ன? இப்புவியில் அவை ஜனிக்கவேண்டிய அவசியம்தான் என்ன? இப்படிப் பல கேள்விகள் இவ்வரியை உள்வாங்கியபோது தோன்றுகிறது. சமகால உலக நடப்புகளும் போர்களும் தீவிரவாதத் தாக்குதல்களும் உள்நாட்டின் இன, மத பேதங்களும் அதனாலான ஒரு சமூகத்தின் பேரிழப்புகளும் மன உளைச்சல்களும் அதற்கான காரணிகளாக இருக்கலாம். இந்து மத நம்பிக்கையின்படி உலகம் மனித உறவு, மரபார்ந்த வாழ்க்கை முறை, பண்பாடு, அரசியல் என அனைத்திலும் சீரழியும்போது கடவுள் கல்கி அவதாரம் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அந்தக் கல்கியைக்கூட இக்கவிதை வேண்டி அழைத்திருக்கலாம்.


தாங்க இயலா மனவேதனையோடு விரக்தியின் எல்லையில் பல நெருக்கடிகளுக்குள்ளே சிக்கித்தவித்து நின்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனின் இயல்பான எண்ணவோட்டங்களையும் இயலாமையையும் இக்கவிதை பதிவு செய்திருக்கிறது.


/மனிதம் அழித்து மனிதம் வாழ உபாசனைகள் தொடர்வதைத் தடுக்க முடிவதில்லை/ என்ற வரியும் /கடவுள் மழுங்கியக் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தார்/ 

என்ற வரியும் மனிதனால் மனிதனுக்கே ஏற்படும் உபாதைகளையும் அழிவுகளையும் உயிர்ச்சேதங்களையும் உலக நடப்பியலையும் உணர்த்துகிறது. மனிதனை நல்வழிப்படுத்த அவனால் உருவாக்கப்பட்ட மதங்களாலேயே அவன் இன்று தன்னையும் அழித்துக்கொண்டு மற்றவர்களையும் அழித்து, கஷ்டப்பட்டு நிர்மாணித்துள்ள இந்த அழகிய உலக வாழ்க்கையையும் அழித்துக்கொண்டு திரிகிறான் என்பதைப் பாடுபொருளாகக் கொண்டு இக்கவிதை பயணிக்கிறது என்றால் அது மிகையாகாது.


ஒரு கவிஞனின் எழுத்தானது வெளிப்பட்டுக் கிடப்பதைக் கவிதைக்குள் மறைத்துக் காட்டுவதாகும். வாசகன் என்பவன் கவிதைக்குள் மறைந்துகிடப்பதைத் தன் வாசிப்புத் திறன், கருத்தறிதல் திறன், பொருட் திறன் கொண்டு அறிந்துகொள்பவனாகவும் வெளிக்காட்டுபவனாகவும் இருக்கவேண்டும். இவ்விரண்டு புரிதல்களும் ஒரு கவிதைக்குள் நிகழ்கின்றபோதுதான் கவிதை இங்கு முழுமையடைகிறது.


-    தொடரும் 

சனி, 18 பிப்ரவரி, 2017

கவிதைகளுடன் ஓர் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர்

எம். கருணாகரனின் கவிதை மொழிகவிதைகளுடன் ஓர் உரையாடல்எம்.சேகர்






நாவல்களை ஒரு முறை படித்தவுடன் அதன் கதை தெரிந்துவிடுகிறது. அவற்றை நான் திரும்பப் படிப்பதில்லை. இதற்கு மாறாக, கவிதை நூல்களை நான் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். ஏனெனில், கவிதை என்பது ஒவ்வொருமுறை படிக்கும்போதும் உங்கள் மனநிலைக்கேற்ப அது தரும் உணர்வுகள் மாறுகின்றன என்கிறார் கியாரெஸ்தமி. அவரின் கூற்றுக்கு இசைவாக இந்தக் கவிதைகள் தரும் மொழியும் அதன் புரிதலும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வேறுபட்டு புதியதொரு மொழியாடலையும் புத்தம் புதிய புரிதல்களையும் கொடுத்துக்கொண்டிருக்கும் வல்லமை வாய்ந்தவையாகும்.


மலேசிய எழுத்துலகில் தவிர்க்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமையான திரு. எம்.கருணாகரன் அவர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை என இயங்கிக்கொண்டிருப்பவர். 1980 களில் சுபன், சுங்கைவே என்ற பெயரில் எழுதி வந்தவர் பின்னாளில் சிரம்பானுக்குத் தகவல் இலாகவில் பணிநிமித்தமாக மாற்றலாகி வந்த பிறகு, எம். கருணாகரன் என்ற பெயரில் தொடர்ந்து எழுதி வருகிறார். தேசிய அளவிலான சிறுகதை, கவிதை போட்டிகளில் பல பரிசுகளையும் வென்றுள்ளார். சென்ற ஆண்டு மழைச்சாரலின் 2016 க்கான இலக்கிய விருதினையும் பெற்றுள்ளார்.


அண்மைய காலமாக அவர் எழுதிய சில கவிதைகள் என் பார்வைக்கு வந்தபோது, அந்தக் கவிதைகளின் மொழியும் சொல்லாடல்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவ்வகையில் எம்.கருணாகரனின் கவிதைகளுடன் எனக்கான புரிதலை அதன் உரையாடலை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே இக்கட்டுரைத்தொடராகும்.

(1)

தொலைந்து போன நான்

இன்றைய நாளின் நகர்வு
விசித்திரமானது


காலையில் தேடி வந்து
உணவு முடித்துப்போகும்
ஆறுமுகத்தைக் காணோம்
கடன்கள் மூச்சு முட்ட முண்டியடித்தும்
முகம் வாடாமல் சிரிக்கும்
பொன்னையா எங்கே
நீண்ட நாள் பழகியும் இன்னமும்
நண்பனாய் முகம் காட்டாத
தாடிக்கார முகமது
கணினி திரையில்
காலையில் முகம் புதைத்து
மாலையில் கோபம் காட்டும்
ஷாஹருடின்
விடியற்காலை கனவில்
திடீரெனக் காட்டுக் கத்தலாய்க்
கத்தும் அவளும்
இன்னும் கொஞ்ச நேரமெனும்
மகனின் வேண்டுதலும்
இல்லாதது விசித்திரமானது


சிறகுகள் முளைக்கப் பறந்துகொண்டிருந்தேன்
இதமாக வருடிப்போகும் காற்று
மேகக்கூட்டத்தில் குளிர்
நட்சத்திரக் கூட்டத்தில்
நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்


ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி
நான் பறந்துகொண்டிருக்கிறேன்


புற்றுநோயில் உயிர் பிரிந்த
அம்மாவின் கடைசி நிமிடம்
முதல் காதலில் திரும்பிப்போன
காதலியின் கண்
நட்பு முறித்த நண்பனின் முகம்
வாழ்வில் தோற்றதால்
காரி உமிழ்ந்த
அவளின் கடைசி சொல்


இன்னும் எல்லாம்
பறக்க பறக்க இறகுகள் உதிர
பறந்துகொண்டே கீழே பார்த்தேன்


எனது கார்
என்னைக் காணோம்

 - எம்.கருணாகரன்


வாழ்வின் நிலையாமையை மிகவும் எளிய கவிதை மொழிநடையில் சொல்லிச் செல்லும் கவிதை எம்.கருணாகரனின், தொலைந்து போன நான்’. இக்கவிதை யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான சர்ரியலிசக் கவிதையாக வகைப்படுத்தலாம். ஒரு படைப்பாளன் படைப்பாளனாக மட்டும் இருந்துகொண்டு எழுதும் படைப்புகளை இதுபோன்ற ஆய்வுகள்தான் முன்னெடுத்துச் சொல்லக்கூடியதாக இருக்கும். அப்போதுதான் இக்கவிதை மற்றவர்களாலும் பேசப்படும். இலக்கிய ஆய்வுக் களங்கள் மிகவும் குறைந்து இருக்கின்ற நம் நாட்டில் இதுபோன்ற ஆய்வுகள்தான் நம் படைப்பை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக அமையும். உலக இலக்கிய அரங்கில் நமக்கான அடையாளங்களாக அடுத்தடுத்த கட்டங்களில் முன்னகரவும் இதுபோன்ற ஆய்வுகள் உதவும் என ஆணித்தரமாக நம்புகிறேன்.


படைப்பாளன் தன் உணர்ச்சி மேலிட்டால் உருவமைக்கும் சொற்களுக்குப் பொருள் தேடுவது என்பது மிகவும் எளிதல்ல. சிலருக்கு அது எளிதில் சென்றடையும். பலருக்கு பல வாசிப்புகளின் மூலம் சென்றடையலாம். சிலருக்கு விளக்கம் கொடுத்த பிறகு சென்றடையலாம். ஓரிருவருக்கு கடைசிவரை புரிந்துகொள்ள முடியாததாகவே போகலாம். எது எப்படி இருப்பினும் படைப்பாளனின் அந்தக் கணநேர உணர்ச்சிப் பிழம்புகள் வெவ்வேறு புரிதல்களை வாசிப்பவனுக்கக் கொடுத்துச் செல்வது நவீன படைப்பாக்கத்தின் ஓர் உச்சக் கூறாகும்.


இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும்? இதுவரை விடை தெரியாத ஒரு கேள்வி இது. இக்கேள்விக்கு விடை காண பல ஞானிகளும் சித்தர்களும் தீவிரமாக முயன்றிருக்கிறார்கள். புத்தரும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி ஞானம் பெற்றார். வாழ்க்கை நெறிக்கான பல விசயங்களைப் போதனையாகச் சொல்லிச் சென்றார். மறுபிறப்பு என்பது கர்மவினைகளுக்கு ஏற்ப விளையும் என்பதும் பலரின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும், இறப்புக்குப் பிறகு என்ன? என்பது இந்த நிமிடம்வரை புரியாத புதிர்தான். ஆனால் அந்தப் புதிருக்கு ஒரு கவிமனம் விடை காணத்துடித்துத் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு தானும் பறக்க ஆரம்பித்துவிட்டது ஒரு விடுதலை உணர்வேந்தலுடன்.


சிறகுகள் முளைக்கப் பறந்து கொண்டிருக்கிறேன்/இதமாக வருடிப்போகும் காற்று/மேகக் கூட்டத்தில் குளிர்/நட்சத்திரக் கூட்டத்தில் நான்/வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்/ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி/நான் பறந்துகொண்டிருக்கிறேன்/


இவ்வரிகளே இக்கவிதையின் உச்சங்கள். காட்சிப் படிமக்கூறுகள் இறப்பிற்குப் பின்னும் முன்னகர்ந்து விரிகின்றன. இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வாழாத வாழ்க்கைக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன இவ்வரிகள்.


பறக்கும்போது ஏற்படும் அந்த உணர்வை இதமாக வருடிப்போகும் காற்றோடு ஒப்புமைப்படுத்திச் சொல்லியிருப்பதும் மேகக் கூட்டத்தில் குளிர் என்பது மழையை மடியில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் மேகங்களுக்கு இடையில் நாம் பறக்கும்போது ஏற்படும் சில்லென்ற உணர்வையும் நட்சத்திரக் கூட்டத்தில் நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன் என்பது ஆத்மா இப்பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து விடுவதைக் குறியீடாகக் காட்டுவதாக நான் புரிந்துகொள்கிறேன். இறப்பிற்குப் பின் இருக்கும் அந்த இருண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விடயமாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.


பறக்கப் பறக்க/ இறகுகள் உதிர/ பறந்துகொண்டே கீழே பார்த்தேன்/


பறக்கப் பறக்க இறகுகள் உதிர்வது எதை உணத்துகிறது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இறுதிவரை பறக்க இயலாத ஒன்றாகவும் தன் இலக்கை நோக்கி அடைய முடியாத ஒரு மயக்க நிலையாகவும் இவ்வரிகள் தோன்றம் அளிக்கின்றன. இறகுகள் எல்லாம் உதிர்ந்துபோனால் அதன் பிறகு எங்கணம் பறப்பது? அதையம் மீறி பறப்பதுதான் கவிஞனின் கற்பனா சக்தி. இங்கேதான் கவிதையும் வாழ்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படாத அல்லது நிறைவேற்ற இயலாமல் போனவற்றிலிருந்து விடுபடுவதின் குறியீடாகவே இவ்வரிகள் புலப்படுகின்றன.


ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கவிதையின் ஆரம்பம் தொட்டு மிக இயல்பாகப் படம்பிடித்துக் கொண்டு போகும் கவிஞனின் கவிமனம், மெல்ல மெல்ல தனக்கான இலக்கை, தன் அனுபவம் சார்ந்த வாழ்வியலோடும் அது சார்ந்த நெருடலுடன், தான் சொல்ல வந்ததை நோக்கி மிக நேர்த்தியாக நகர்ந்திருப்பது இக்கவிதையின் சிறப்பாகும். எளிய சொல்லாடல்களும் காணோம்’, ரொம்ப கிட்டத்தில் போன்ற பேச்சு வழக்குச் சொற்களும் கவிஞன் வாசகனைத் தன் வசப்படுத்தவும் நெருக்கமாக உரையாடவும் மேற்கொண்ட ஓர் உத்தியாகவே அமைந்திருக்கிறது எனலாம்.


நிறைவாக, எனது தனிப்பட்ட கருத்து இது.
எனது கார்/என்னைக் காணோம்


இவ்வரிகள் இல்லாமல் இருந்திருந்தால் இக்கவிதை இன்னும் சிறந்திருக்கும் என்றே தோன்றுகிறது.



-    தொடரும்  - ( நன்றி மக்கள் ஓசை - 19 - 02 - 2017)

(
(

திங்கள், 6 பிப்ரவரி, 2017

எம்.கருணாகரனின் காத்திருப்பு கவிதையோடு ஓர் உரையாடல்

காத்திருப்புஎம்.கருணாகரன்


இப்போதெல்லாம் இருட்டு
பயம் மூட்டுவதாக
இல்லை


முன்னால் நிற்பவனின் கண்களில்
கலந்திருக்கும் கயமை
பின்னால்  நிற்பவன் கூர்ந்து பார்ப்பதில்
கவிழ்ந்திருக்கும் ஏளனம்


நான் அங்கு இல்லாத போதும்
உடுத்தியிருக்கும் ஆடைகளைக் களைந்து
நிர்வாணமாக்கிச் சிரித்து நிற்கும்
நான் அறிந்த முகங்கள்


ஒத்தையாகிப்  போன எனக்கு
சுவாசமாய் கலந்திருக்கும்
இந்த இருட்டு ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொடுக்கிறது


கழன்று போனப்பின் நான் காத்திருக்கும்  இருட்டுக்குள்
என்னைத் தவிர
யாரும் நுழைந்திட இயலாது

காத்திருக்கிறேன்……..



கவிதைத் தொடர்பான எனது பார்வை

இப்போதெல்லாம் இருட்டு /பயமூட்டுவதாக இல்லை

என்ற வரிகளில் இருட்டு என்பதை அன்றைய வாழ்க்கைச் சூழலில் இருள் கலந்த பயம் நிறைந்த ஒன்றாகவும் சிறுபிள்ளைகளாய் இருக்கும்போது அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவும் நாம் அணுகலாம். ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் வழி அந்த இருளையும் இருட்டையும் நாம் வென்றிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். வென்றுவிட்ட ஒன்றின்மேல் நமக்கு எப்போதும் பயமோ அல்லது சலனமோ ஏற்படப்போவதில்லை. நம் வாழ்நாள் சார்ந்த அனுபவங்களும் நம்மை வளப்படுத்தி, எண்ணங்களை மேம்படுத்தி விடுவதாலும் இந்தப் பயம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் நம்மை விட்டுத் தூரச் சென்றுவிடுகிறது. ஒரு கட்டதில் இரவும் பகலும் இயற்கையின் சுழற்சி என்ற புரிதல் மனத்திற்குள் ஊடுறுவும்போதே இருள் பற்றிய நமது அனைத்து அவதானிப்புகளும் தவிடுபொடியாகிவிடுகின்றன. இதுநாள் வரையில் மாய யதார்த்தங்களின் கூடாரமாக இருந்த இருள் அதன் தன்மையை இழந்து வெறுமையாகிவிடுகிறது.


சமகால வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இடர்களும் வேதனைகளும் எள்ளல்களும் கேலிகளும் நம்மை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விரட்டியடித்தாலும் நாம் சந்தித்தவைகள் நம்மை மேலும் இறுக்கமாக்கி இந்த வாழ்க்கைக்குள் நம்மைப் பதப்படுத்திவிடுகின்றன. போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி துற்றுவார் தூற்றட்டும் என்ற ஒரு மனநிலைக்கு இதுபோன்றவைகள் நம்மைத் தயார்படுத்திவிடுகின்றன என்பதையே,


முன்னால் நிற்பவனின் கண்களில் / கலந்திருக்கும் கயமை / பின்னால் நிற்பவனை கூர்ந்து
பார்ப்பதில் / கவிழ்ந்திருக்கும் / ஏளனம்


என்ற வரிகளும் அதைத் தொடர்ந்து வரும் வரிகளும் சுட்டுகின்றன.


இருட்டு என்பதை வாழ்க்கையின் அனுபவமாகப் பார்க்கும் நோக்கில், அது கற்றுக்கொடுக்கும் பாடம் நமக்கு மிகவும் இன்றியமையாததாகிவிடுகிறது. வாழ்க்கையை நாம் அதன் நோக்கில் வாழ்வதை விடுத்து நமக்கான வாழ்வை எப்படி வாழ்வதென்பதை நாம் கற்றுக்கொள்ள இந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. இருட்டை விலக்க ஒளி நமக்குத் துணையாக இருப்பதுபோல் வாழ்வின் அனுபவங்கள் நம் இன்னல்களைப்போக்க நமக்குத் துணையாக நிற்கின்றன.


தனக்கான வாழ்க்கை தனக்கானதுதான் என்ற நம்பிக்கை நிறைந்த மனத்தையும் தனக்கான இந்த வாழ்க்கையைத் தன்னைத் தவிர வேறு எவராலும் இனியும் நிர்ணயிக்கமுடியாது என்பதையும் இக்கவிதை இறுதியில் பதிவு செய்கிறது.


கவிதையில் தற்புலம்பல் சாயல் இருப்பினும், கவிதை இன்னொரு விதத்தில் தன்முனைப்பு ஊட்டுவதாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு படைப்பும் அந்தப் படைப்பாளியின் சுயவாழ்க்கையை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்திச் செல்லும் என இன்றைய நவீன இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்பட்டும் சுட்டப்பட்டும் வருகிறது. புனைவுகள் நம்மை மீட்டெடுக்கின்றன என்பதற்கு இக்கவிதை நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வாழ்த்துகள் கரு.


அன்புடன் எம்.சேகர்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

அவளும் நிமியும் கடவுளும் – பொன்.சசிதரன்

அவளும் நிமியும் கடவுளும் – பொன்.சசிதரன்

 (மக்கள் ஓசை 22 ஜனவரி 2017)

ஒரு விமர்சனப் பார்வை


இலக்கியம் ஒரு படைப்பாளியின் எழுத்துத் திறனால் மட்டுமல்லாமல், அவனின் மன எழுச்சியினாலும் அமைவதாகக் கூறப்படுகிறது. ஒரு மனத்தின் வழியாக இன்னொரு மனத்துடன் அது உரையாடலை நடத்துகிறது. இந்த மனித வாழ்வின் அனுபவங்களையும் மனிதனின் பழக்கவழக்கங்களையும் நடத்தைகளையும் இச்சமூகத்துடனான அவனுக்கான உறவுகளையும் விருப்பு வெறுப்புகளையும் ஆழமாகவும் அழகாகவும் இயல்பான உணர்வுடனோ அல்லது மிகை உணர்வுடனோ சித்தரிக்க முயலுகிறது.


ஒரு குறிப்பிட்ட படைப்பில் காணப்பெறும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் செயல்களையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றின் செயல்பாடுகளின் மூலம் அக்குறிப்பிட்ட படைப்பு எந்த வகைமையைச் சார்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அவ்வகையில் பொன். சசிதரனின், அவளும் நிமியும் கடவுளும் என்ற இக்கதை, உளவியல் அணுகுமுறையிலான ஒரு படைப்பாகப் பார்க்க முடிகிறது.


முதன்மை கதாபாத்திரமான சந்தியாவுக்கும் அவள் வயிற்றில் வளரும் சிசுவான நிமிக்கும் நடக்கும் உரையாடல்களும் கடவுளுக்கும் நிமிக்கும் நடக்கும் உரையாடல்களும் சந்தியாவுக்கும் அவள் கணவனுக்குமான உரையாடல்களும் இக்கதையினை  உரையாடல் உத்தியின் மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.


உணர்வுகளின் உற்சாகத்தில் அனுபவத்தை உள்வாங்கிப் புலப்படுத்தும் இத்தகைய மனஎழுச்சியைக் கொண்ட கதைகள் இங்கு அடிக்கடி எழுதப்படுவதில்லை. உணர்வு வயப்படுதலை நனவிலி மனத்தின் (Unconscious mind) ஒரு வெளிப்பாட்டு முறையாக இக்கதையை நாம் அணுகலாம். தான் பார்த்த, கேட்ட அல்லது தனக்கான சுய அனுபவத்தையோ நேரிடையாகச் சொல்லாமல், அவற்றை சாதாரண இயல்பாகப் பார்க்காமல் ஓர் அற்புதமான, மாயமான, ஆற்றலாகவும் பொருளாகவும் ஒரு கனவுத் தோற்றத்தின் தன்மையோடு பார்க்கும் விநோதமான (fantasy) மனப்போக்கை இத்தகைய எழுத்து நமக்கு அறிமுகப்படுத்துகிறது.


இக்கதையின் முதன்மை கதைமாந்தரான சந்தியாவைச் சுற்றியே இக்கதையின் மையக்கரு சுழன்றாலும் நிமியின் பாத்திரப்படைப்பு நமது படைப்பிலக்கியத்திற்குப் புதியதாகத் தோன்றினாலும் ஏற்கனவே வந்த கவிஞர் அறிவுமதியின் உயிர் விடும் மூச்சு கவிதையில் இதுபோன்ற முயற்சியைக் காணலாம். இக்கதையை வாசித்தபோது அக்கவிதை என் நினைவைத் தொட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலவில்லை. அக்கவிதை, தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை தன் தாயிடம் உரையாடுவதைப்போன்று முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கதை தாய், மகள், கடவுள், கணவன் என முப்பரிமாணங்களில் பயணிக்கிறது.


சந்தியா நிமியின் உரையாடல்கள் கதையின் மையக்கருவிற்குத் துணையாக அதற்கான காரணகாரியங்களை ஆராய்கிறது. சந்தியா மற்றும் அவள் கணவனுக்கு நடக்கும் உரையாடல்,  இன்றைய கணவன் மனைவி உறவுகளுக்கு இடையில் தோன்றும் முரண்களை முன்னெடுக்கிறது. ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் விருப்பு வெறுப்புகளையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது. கடவுளுக்கும் நிமிக்கும் இடையில் நடக்கும் உரையாடலானது மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதிகளைப் பற்றி ஆராய்கிறது. ஊழ்வினையைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட படியே நடக்கும் எனவும் அப்படி ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலும் அதுவும் அவர்களுக்கான விதிப்படியே நடப்பதுதான் என்பதை உணரவைக்கிறது.


யதார்த்தத்தின் திரிபுகள், பிறழ்வுகள் வெவ்வேறு குறியீட்டு வடிவங்களாக நமக்குள் விழுகின்றன. நடப்பில் சந்திக்கின்ற அல்லது விரும்புகின்ற ஆசைகள் அல்லது கற்பனைகள் இயலாமை காரணமாகவோ, சமூக உறவுகளின் மறைமுகமான அல்லது மரபார்ந்த தடைகள் காரணமாகவோ நிகழமுடியாமல் போகின்றபோது, அவை அடிமனத்தில் குழம்பியும் கலந்தும் இருக்கின்றன. வெளிமனம் அல்லது நனவுடை மனம் தூங்குகிறபோது, இந்த நனவிலிமனம் விகாரங்களோடும் விநோதங்களுடனும் கனவுகளாக வெளிப்படுகின்றன என ஆய்வாளர் ஃபிராய்டு விளக்கம் தருகிறார். இதற்கு ஏற்றார்போல, இக்கதையினூடே செல்லும்போது, சந்தியாவும் இத்தகையான ஒரு சூழல் கைதியாக உலாவருவதைக் காண முடிகிறது. இல்லற வாழ்க்கையின் ஏமாற்றம், குழந்தை மனவளர்ச்சியின்றி பிறக்குமோ என்ற அச்சம், அப்படி நலமாகப் பிறந்தாலும் அக்குழந்தை தன்னுடன் இருக்காது என்ற எண்ணமும் குழந்தை பிறந்த பிறகும் விவாகரத்து முன் நிற்பதும் அவளுக்குள் இத்தகைய ஒரு பிறழ்வை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அவளுக்கான மன ஆறுதல்தான் நிமியுடனான அவளது உரையாடல் என்ற கனவு. தனித்துப் பேசிப் பழகிப்போனவள், தனக்குத் துணையாக நிமியை உருவாக்கிக்கொண்டு பேசுகிறாள்.


கடவுளுக்கும் நிமிக்குமான உரையாடலும் அத்தகையதே. தனிமையின் வெப்பத்தனல்களில் தவித்துக் துடித்துக் கருகிக்கொண்டிருக்கும் ஓர் ஆத்மாவின் மன அழுத்தங்கள் அவை. இத்தகையச் செயல்களைத் தனக்கான காரண காரியங்களைச் சுயமாகவே தேடிக்கொண்டு மன ஆறுதல் காணும் ஒரு சூழல் கைதியின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.


இக்கதையில் வரும் நிமியும் கடவுளும் சந்தியாவின் மறுபதிப்புகள்தான். அவளுக்காக அவளே உருவாக்கிக்கொண்ட கதாபாத்திரங்கள் அவை. அதிக அளவுக்கான தனிமையும் கணவனின் கைவிடலும் அவளின் செயல்பாடுகளில் இத்தகையதொரு மன திரிபுகளை எற்படுத்தி வைத்திருக்கிறது.


கதையின் முடிவு எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தாலும், இயல்பான உரையாடல்களும்  காட்சிப்படுத்துதலும் கதையின் நடையைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. மன உணர்வுகளின் சிக்கல்களைப் பற்றி பேசியிருக்கும் இக்கதையில் ஆண் பெண் உறவுகளுக்கிடையேயான சமூகச் சிக்கல்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


நல்லதொரு கதையை ஒரே நேர்கோட்டில் வித்தியாசமாகப் புனைந்திருக்கும் நண்பர் பொன். சசிதரன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.



அன்புடன் எம்.சேகர்.