வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கவிதைகள்

நான் நானாக இருப்பதில்லை

எதுக்காகவோ
யாருக்காகவோ
சில சமயங்களில் சமரசங்கள்
வாழ்க்கையின் அத்தியாவசியத்
தேவையாய் போய்விடுகின்றன

சமரசம்
எதிலும் சமரசம்

நான் நானாக இருப்பதில்லை
மற்றவர்களாய் மாறுகிறேன்
மற்றவர்களுக்காக

கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம்
என் சுயத்தை நான் இழக்கிறேன்
என் முகத்தில்
என் முகம் தெரியவில்லை
வேற்று முகங்கள்தான் சிரிக்கின்றன

என் சந்தோஷம்
என் துக்கம்
மற்றும் எனக்குள்ளும்
நான் நானாக இல்லை
வேறு யாரோவாக நான் பிரதிபலிக்கிறேன்

பிறந்தவுடன் சொன்னார்கள்
நான் அம்மா மாதிரி என்று
வளர்ந்தவுடன் என் அத்தை சொன்னாள்
அவள் அண்ணன் மாதிரி நானென்று

இன்றோ
என் மகனைப் பார்த்து
என் மனைவி சொல்கிறாள்
அப்பா மாதிரியே பிள்ளன்னு

யாரின் முகத்தையோ குணத்தையோ
யார் மேலேயோ தினித்து தினித்து
தனி மனித அடையாளம்
இங்கு திவாலாகிவிட்டது



நினைவின் சாரல்கள்

முழுமையான நிலா ஒளியில்
ஒளிர்கிறேன்
சிறகடித்துப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளாய்

ஆறு மணல் காடென
சுற்றித் திரிந்த கால்கள்
நிறுத்தம் தேடி ஓய்கையில்
பார்க்கும் இடமெல்லாம்
சுண்ணாம்புக் கற்கூடுகளாய்
மனங்கள் திரிந்து கருகிக் கிடக்கின்றன

ரெண்டு எலி வெட்டின்
தாய்மையின் உருவகமான ரப்பர் மரக்காடுகளும்
குரங்குகளும் பாம்புகளும் சீயான்களும்
உயர்ந்து வளர்ந்த 'லௌடா' கொட்டை மரங்களும்
மழை ஓசை எழுப்பும்
பக்கத்து வெட்டுக்காரர்களின் ஒலிகளும்
காலைமழையால் வீட்டில் இருக்கும் அம்மாவை
'பாப்பாத்தி கெர்ஜா' என அழைக்கும்
'கப்பாளாவின்' பழைய 'யமஹா' மோட்டார் சத்தமும்

மேட்டுப் பகுதியில் பால்வாளியோடு
உருண்டு விழுந்த வலிகளும்
செம்மண் ரோட்டில்
பிரேக் இல்லாத சைக்கிளில்
தம்பியோடு பள்ளத்தில் விழுந்த தளும்புகளும்

ஒட்டுப்பால் வாடையும்
கட்டிப்பால் வாடையுமாக
உயிர் உள்ள வரை
நினைவின் சருகுகளாக
வாழ்ந்து விட்டுப் போகட்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக