ஞாயிறு, 22 மே, 2011

கும்பகர்ணனின் பண்புநலன் - இலக்கியப் பகரல்

முன்னுரை

நுண்கலைகள் பலவற்றிலும் தலை சிறந்தது கவிதை. கவிதைகளால் இயற்றப்பட்ட நூல்களில் தலைசிறந்தது கம்பராமாயணம். வால்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தின் கதையை எடுத்துத் தள்ளுவன தள்ளிக் கொள்வன கொண்டு, உருக்கொடுத்து உணர்ச்சியூட்டி ஒப்பற்ற உயர் பேரிலக்கியமாக வடித்துள்ளப் பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். இப்பெருமையை உணர்த்தவே,

‘வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு’

என இயற்கையோடு கம்பனையும் சேர்த்துப் பாடினார் கவிமணி. கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்க, நீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பதுமன்றி தனக்கு முதல் நூலான வால்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்கிறார் பன்மொழிக் காப்பியங்களைக் கற்ற வ.வே.சு.ஐயர்.

கம்பனின் காவிய மாளிகையில் தந்தையின் ஆண்மையும், தாயின் பேறும், கற்பின் வீரமும், மனைவியின் மங்கலமாட்சியும், மக்கட் பாசமும், நட்பின் பொலிவும், உடன் பிறப்பின் உயர்க்கொள்கையும் சிறப்புற்று விளங்கும். இத்தகைய சிறப்புமிக்க கம்பன் பாடல்களில் தென்படும் கும்பகர்ணனின் பண்புநலனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யுத்தக் காண்டத்தில் வருகின்ற கும்பகர்ணன் வதைப்படலத்தில்தான் கும்பகர்ணனின் கதாபாத்திரம் கம்பனின் புனையாற்றலால் உயரியப் பண்புள்ள கதாபாத்திரமாக வானுயர உயர்ந்து நிற்கிறது.

கும்பகர்ணன் ஓர் அறிமுகம்

காவிய உலகின் கதைச்சக்கரத்தில் மனிதப் பண்பு களிமண். அதை வைத்துக் கவிஞன் சுழற்றுதலால் பாத்திரம் என்னும் மட்பாண்டம் உருவாகிறது . கம்பனால் புனையப்பெற்றக் காப்பியத்தின் கதாபாத்திரங்களில் மிக உயர்ந்தக் கதாபாத்திரம் கும்பகர்ணன். கம்பராமாயணத்தில் கம்பனின் கைண்ணத்தில் மென்மேலும் தமிழ் மணம் வீசும் மண்வாசனையுடன் மெருகூட்டப்பட்டிருக்கிறது இக்கதாபாத்திரம். கம்பர் காப்பியம் கதையால் தழுவலாயினும், மொழியாலும் நடையாலும் பண்பாலும் உணர்ச்சியாலும் அன்பாலும் தமிழ் மண்ணில் பிறந்த நிலக்காப்பியம் எனக் குறிக்கின்றார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள். எனவே அரக்கக் குலமாகச் சித்தரிக்கப்பட்டாலும் தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களின் அடிப்படையில் அறக்கோட்பாடுகளுக்குக் கட்டுண்ட ஒரு கொள்கைப் பிடிப்புள்ள உன்னதக் கதாபாத்திரமாக கும்பகர்ணனை கம்பர் படைத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கம்பராமாயணத்தின் துணைப் பாத்திரமான கும்பகர்ணன் இராவணனுக்குத் தம்பியாகவும், வீடணனுக்கு மூத்தவனாகவும் வருகிறான்.

கும்பகர்ணன் வதைப்படலம்

இராமனோடு முதல் நாள் போர் புரிந்து மீண்ட இராவணன் இராமனை வெல்லும் திறம் உடையவன் கும்பகர்ணனே எனக் கருதி அவனைத் துயிலெழுப்ப வீரர்களை அனுப்புகிறான். எழுந்து வந்த கும்பகர்ணனை இராவணன் போருக்குச் செல்ல ஏவுகின்றான். அச்சமயம் கும்பகர்ணன் கூறும் ஆற்றல் வாய்ந்த அறிவுரை விழலுக்கு இறைத்த நீராகின்றது. இவன் பேச்சைப் புறக்கணித்து இராவணன் சினந்தபோது, அண்ணனிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் போருக்குப் புறப்படுகிறான்.
போருக்கு வந்த கும்பகர்ணனைத் துணைவர்களின் அலோசனைப்படி வீடணனை அனுப்பி அறஞ்சார்ந்த தன் அணிக்கு வருமாறு இராமன் அழைக்கச் செய்கிறான். ஆனால் இராவணனைப் பிரிந்து இராமனுடன் அணி சேர்வது தனக்கு அறமாகாது என மறுத்து தன் தம்பி வீடணனை வாழ்த்தி அனுப்புகிறான்.

இனி வரும் பகுதிகளில் மேலே கூறப்பட்டுள்ள கதையோட்டத்தை ஒட்டிய கும்பகர்ணனின் பண்புநலனை சில பாடல்கள் மூலம் ஆராய்வோம்.

உருவச்சிறப்பு

கம்பனின் ஈடு இணையற்ற படைப்புகளில் அனுமனைப் போல் கும்பகர்ணனும் ஒரு சிறந்த படைப்பாவான். அவனின் உடலமைப்புப் பல மலைகள் ஒன்றிணைந்தது போல் இருக்கும் எனப் போற்றப்படுவதுண்டு.

‘.....................................
கோயில் எய்தினான் குன்றன கொள்கையான்’

எனும் கம்பனின் இலக்கிய நயமும் பொருள் நயமும் கொண்ட வரிகள், கும்பகர்ணனின் குன்று போன்ற மாபெரும் தோற்றத்தை நம் முன்னே விரிக்கின்றது.

‘.............பொம்மென்று இரைத்தெழ....’

என வரும் வரிகள் அண்ணன் அழைத்தான் என்றவுடன் மலை போன்றத் தோற்றம் உடையவனான கும்பகர்ணன் ‘பொம் பொம்’ என்று மாபெரும் இரைச்சல் ஓசையுடன் அண்ணனைக் காண வரும்போது கும்பகர்ணனின் உடல் வனப்பை உணர்த்துகிறது.

அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது என கம்பர் வர்ணிப்பதும், வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் என கம்பர் உருவகப்படுத்துவதும் கும்பகர்ணனின் உருவச்சிறப்பை நம் கண்முன்னே முன்னிறுத்துகின்றது.

பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன் என அவன் உருவச்சிறப்பை இராமனின் கூற்றின் மூலம் மறுஉறுதிப்படுத்துகிறார் கம்பர்.

‘தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நாள்பல கழியுமால்..........’

கும்பகர்ணனைக் கண்ட இராமன் அவன் உருவத்தைப் பார்த்து,

‘இவனது ஒரு தோளோடு இன்னொரு தோளையும் பார்க்க வேண்டுமாயின் பல நாள் ஆகுமே, பூமியின் நடுவே நிற்கும் மேரு மலைக்கு கால் முளைத்து வந்தது போல இருக்கிறதே’ என வியக்கின்றான். இப்படியாகக் கும்பகர்ணனின் உருவச்சிறப்பைப் பல இடங்களில் நேரிடையாகவும், மற்றக் கதாபாத்திரங்களின் கூற்றாகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார் கம்பர். கும்பகர்ணன் வதைப்படலத்துக்கு முன்பாகவே, அனுமன், சூர்ப்பணகை போன்ற கதாபாத்திரங்களின் மூலம் கும்பகர்ணனை அறிமுகப்படுத்தியுள்ளார் கம்பர்.

கொள்கைச்சிறப்பு

‘குன்றன்ன கொள்கையான்’

என்பது கும்பகர்ணனின் உருவச்சிறப்புக்குப் பொருள் தருவது எனப் பார்த்தோம். ஆனல் அதே சொல்லாடல், குன்று போல் உயர்ந்தக் கொள்கை உடையவன் எனவும் பொருள் தரும். இராவணன் சீதையைச் சிறையெடுத்தது தவறு என்பதை இராவணனிடம் துணிந்து சொன்னதாலும், இனிமேல் மீண்டும் போய்க் கூறப்போவதாலும் கும்பகர்ணன் ‘குன்றன்ன கொள்கையான்’ எனச் சிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கும்பகர்ணன் அறநெஞ்சினன் ஆவான். அதன் வழி நிற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அறத்தை உணர்தல், அதன்படி நிற்க விரும்புதல் என்ற இரு துறைகளிலும் ஒரே நிலையில் நின்றவர்கள் கும்பகர்ணனும் வீடணனும். அதை நிலை நிறுத்த முடியாதச் சூழலில் அதனோடு வீழ்ந்து இறக்கத் துணிந்தான் கும்பகர்ணன். வீடணன் அதை விட்டுவிட்டு அறவழியில் நிற்கும் இராமனோடு சேர்ந்துவிட்டான். உணர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை வெளிப்படுத்துவதில் மட்டுமே மனிதன் வேறுபட்டு நிற்கின்றான் என்பதற்கு கும்பகர்ணன் நல்ல உதாரணம்.

‘…………….இரங்கலை என்றும் உள்ளாய் ‘

செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தயாரான கும்பகர்ணன் அதே போல் வீடணன் செய்யத் தவறியது தவறு என நினைக்கவில்லை.

‘ தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்குத் தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை’,
எனத் தம்பியிடம் உளம் உருகிக் கூறுவது கும்பகர்ணனின் உயர்ந்தப் பண்பினுக்கும் கொள்கைச் சிறப்பினுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

கற்புடைச் சானகியை விடுவித்தாலன்றி வெஞ்சமர் விளைந்தே தீரும் எனவும், வெஞ்சமரில் வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் அழிந்தே தீரும் எனவும் அஞ்சாது இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான் கும்பகர்ணன் .

‘............இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
புல்லலாம் என்பது........’

மிகவம் வெளிப்படையாக, இராமனை வெல்லலாம், சீதையைத் தழுவலாம் என்பதெல்லாம் முடியாத ஒன்று என எடுத்துரைக்கிறான். சீதையை விட்டு விடுமாறும், இராமன் சரணம் தொழுமாறும் வேண்டுகோள் விடுத்து, வீடணனை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறும் அறநெறியில் வாழ இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். அவன் நெஞ்சின் ஆழத்திலிருந்து எழும் இக்கூற்றுகள் யாவும் மனித நேயப் பண்புகளைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளன.

‘………………………..
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே’

கடுமையான விஷமான அந்தக் கற்புக்கரசியை நீ இன்னம் விட்டு விடவில்லையா? இது விதியின் செயல்தான் எனக் கூறுவது கும்பகர்ணனை விதியின் மேல் நம்பிக்கைக் கொண்டவனாகக் காட்டுகிறது. மேலும் இன்னொரு கட்டத்தில்,

‘வென்று இவன் வருவன் என்று உரைத்தி லேன் விதி
நின்றது பிடற்பிடித்து உந்த நின்றது.....’

என்பதும் விதியின்பால் அவன் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

‘நான் போரிற்குச் சென்று வென்று வருவேன் என்று சொல்லமாட்டேன். விதி வென்றது. என் பிடரியைப் பிடித்துப் போருக்குத் தள்ளி நிற்கிறது. நான் போரில் இறப்பேன். அப்படி நான் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு அண்ணா...’ எனக் கல்லையும் கரைக்கும் வண்ணம் உரைக்கின்றான்.

இறப்பது உறுதி என்றறிந்த பின்னும் போருக்குப் புறப்பட்டதும்,

‘நான் இறந்த பின்னாவது அவளை விட்டு விட்டு நன்றாக இரு’

எனக் கூறுவதும் அவனுடைய கொள்கையின் சிறப்பினையும், அறநெஞ்சினையும், பண்பின் உயரத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

வீடணன் கும்பகர்ணனை இராமனின் பக்கம் வந்து விடுமாறு உள்ளம் தழைக்க எதிர்ப்பார்ப்புடன் வேண்டுகோள் விடுக்க, பாசமுள்ள தம்பிக்கு பாசமுள்ள அண்ணன் பதிலுரைக்கிறான் இப்படி.

‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்குகோலம் செய்துவிட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன்.......’

நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்தப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த அண்ணனுக்காக தன் உயிரைத் தராமல் இராமன் பக்கம் போகமாட்டேன் எனக் கூறும் கும்பகர்ணனின் நெஞ்சுரம் அவனை உயர்ந்த கொள்கைவாதியாகவும் இராவணனுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக அமைத்துக் கொண்டவன் எனவும் காட்டுகிறது.
நீர்க்கோல வாழ்வு எனக் கும்பகர்ணன் கூறுவது இந்த வாழ்வின் நிலையாமையை எடுத்துரைக்கிறது. இதனையை வள்ளுவரும்,

‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை’

என்கிறார். அதாவது நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானது என்பதாகும்.

‘…………………………………
புலையுறு மரணம் எய்தல் எனக்கிது புகழ தேயால்’

இராவணன் பக்கம் நின்று இழிவான மரணத்தை அடைந்தாலும், அதுவும் எனக்கு ஒரு வகையில் புகழே எனக் கும்பகர்ணன் கூறுவதும் அவனின் பண்புநலனுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இன்றளவும் சான்றோர்களால் சிறந்த பண்பாளனாக, அறநெஞ்சினனாக, பாசமுள்ளத் தம்பியாக, பாசமுள்ள அண்ணனாக, இராமனே வியந்த வீரனாகப் போற்றப்படுவதும் அவனின் தனிச்சிறப்புகளேயாகும்.

அண்ணனின் நலனில் அக்கறையோடு அறிவுரை சொல்லவும் கும்பகர்ணன் தயங்கவில்லை. அறிவுரைகள் பலன் தராத போது வீடணன் போல் இராமன் பக்கம் போய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் கும்பகர்ணன் முனையவில்லை. கடைசிவரை அண்ணன் பக்கமே நின்று உயிர் பிரியும் நேரத்திலும் தன்னிலைக்கு வருந்தாமல் அண்ணனுக்கு நேரப் போகும் அழிவுக்கு வருந்திய கும்பகர்ணனின் கொள்கைச் சிறப்பிற்கு நிகராக, அன்புக்கு நிகராக நாம் எதைச் சொல்ல முடியும். கும்பகர்ணனின் கதாபாத்திரம் சமத்துவ அன்புக்கும், மனித நேய உணர்வுகளுக்கும் ஒர் உரைகல்லாகும்.

வீரச்சிறப்பு

இராமனோடு முதற் போர் புரிந்து தோல்வியுற்ற இராவணன் இராமனை வெல்லும் திறம் உடையவன் கும்பகர்ணனே எனக் கருதி அவனைப் போருக்குப் போகச் சொல்வது, இராவணனை விட கும்பகர்ணன் வீரத்தில் சிறந்தவன் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பகைவனின் உண்மையான வீரத்தை நன்கறிந்தவனாலேதான் அவனுக்கெதிராகச் சிறப்பாகப் போரிட முடியும். இராமனின் வீர ஆற்றலை நன்குணர்ந்தவன் கும்பகர்ணனே ஆவான். இதை அறிந்திருந்த இராவணன்,

‘…………………………….
ஏனை உற்றனர் நீயவர் இன்னுயிர்
போன கத்தொழில் முற்றுதி போயென்றாள்’

‘வானரப் படைகளும் மானிடர் இருவரும் இலங்கையை முற்றுகையிட்டுள்ளனர். முதல் நாள் போரில் வென்றும் விட்டார்கள். நீ அவர் இன்னுயிர் உண்கின்றச் செயலை இன்று போர்க்களம் போய் முடிப்பாய்’ என்கிறான். இதன் வாயிலாகக் கும்பகர்ணனின் வீரப் பண்பினை கம்பர் நேரிடையாகச் சொல்லாமல் இராவணனின் மூலமாக எடுத்தியம்புகிறார்.

‘என்னைவென்று உளர்எனில் இலங்கை காவல
உன்னைவென்று உயர்தல் உண்மை......’

என்னை அவர்கள் வென்றுவிட்டார்கள் என்றால், உன்னையும் வென்று விடுவது நடக்கத்தான் போகிறது எனக் கும்பகர்ணன் உரைப்பது அவனை இராவணனை விடச் சிறந்த வீரனாக நமக்கு அடையாளம் காட்டுகிறது.

‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டுநீ இருந்து தேம்புதல்.......’

எனத் தொடங்கும் பாடல் வரிகள், கும்பகர்ணனைச் சிறந்த போர்த்தலைவனாகவும், ராஜதந்திரியாகவும் நமக்குக் காட்டுகிறது. வரிசை வரிசையாகப் படைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி அவை அழிவதைக் காட்டிலும், நமது வலிமை முழுவதையும் ஒரு சேரப் பகைவர் மேல் செலுத்தி வெற்றிக்கு முயல்வதே சிறந்தது எனப் போர் ஆலோசனை வழங்கும் பண்பினையும் காணலாம்.

உள்ளச்சிறப்பு

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தவன், நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் கும்பகர்ணனின் பண்பும் யதார்த்த அறிவும் அறநெஞ்சமும் வெளிப்படுகிறது.

‘ஆனதோ வெஞ்சமர் அலகில் கற்புடைச்
சானகி துயர் இனம் தவிர்ந்து இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே’

சீதையின் துக்கம் இன்னும் தீரவில்லையா? வானமும் பூமியும் வளர்ந்து நின்ற உலகளாவிய புகழ் அண்ணனின் இச்செய்கையால் போய் விட்டதே, என வருந்தும் பண்பாளனாகவும் அறநெஞ்சினனாகவும் வருகிறான் கும்பகர்ணன்.

‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’

என்கிறது கலித்தொகை. பாடு என்பது தன்மை. பிறர் தன்மை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுதலே பண்பாகும் . இது கலித்தொகை என்ற சங்க நூல் காட்டும் பண்புக்கான இலக்கணம். பாடறிந்து ஒழுகும் பண்பு நமக்கு வேண்டும். இல்லையேல் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும்.

வீடணன் கும்பகர்ணனிடம் தன்னைப் போலவே இராமனிடம் வந்து சேர்ந்து கொள்ள வேண்டுகிறான். கும்பகர்ணன் வீடணின் கூற்றை மறுக்கிறான்.

‘இராவணன் தீமை செய்கிறான். நான் தடுக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் அவனுக்கு முன் சாகவே விரும்புகிறேன்’ என்கிறான்.

‘...............
திருத்தாம் ஆகில் நன்றே
திருந்துதல் தீராதாயின்
..................
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா’

என்பது கும்பகர்ணனின் பேச்சாக, பண்பின் பிம்பமாக கம்பன் தருவது.

இராவணன் தீமையைத் திருத்தி அறிவுரை தந்தான் கும்பகர்ணன். இராவணன் இசையவில்லை.
என்ன செய்கிறான் கும்பகர்ணன்?
தீமைக்கு உடன்படாமல் போரில் சாவதற்காக வருகிறான். செத்தாலாவது அண்ணன் திருந்துவான் என நினைக்கிறான். தன் சொந்த இயல்பை இழக்காமல் அண்ணன் செய்யும் தீங்கையும் சுட்டி விட்டு இறப்பு நிச்சயம் எனத் தெரிந்தும் போர்க்களத்தில் தன் அண்ணனுக்காக நிற்பது அவனின் உளப்பண்பை மிக அழகாக உணர்த்துகிறது.

‘ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா’

எனும் வரிகள் மூலம் கும்பகர்ணனின் கதாபாத்திரம் மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடனுக்காகத் துரியோதனன் பக்கம் நின்ற கர்ணனின் கதாபாத்திரத்துக்கு ஒப்பானதாகும் என உரைக்கப்படுகிறது.

‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா...கர்ணா....’

என்றப் பாடல் வரிகள் கர்ணனின் கதாபாத்திரத்தை நமக்கு உணர்த்தும்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு’

எனத் திருவள்ளுவர் கூறும் செய்ந்நன்றியறிதல் பண்பானது கும்பகர்ணனின் பண்புகளில் மிளிரக் காண்கிறோம்.

வீடணன் வழியே உணர்த்தப்படும் சிறப்புகள்

மேரு மலையே கால் முளைத்து நடந்து வருவதுபோல் இருந்த கும்பகர்ணனின் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், ‘போருக்கு வந்த வீரனாக என்னால் நினைக்கமுடியவில்லை. இவன் யாரோ? என வினவுகிறான். வீடணனும், கும்பகர்ணனும் தன்னைப் போல் இராவணனுக்கு நல்ல உபதேசங்கள் சொன்னதையும், இராவணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்ததையும், இப்போது இராவணனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் உதவிக்கு ஓடி வந்திருப்பதையும் தெரிவிக்கின்றான்.

‘காரியல் காலன் அன்ன கழற்கும்ப கர்ணன் என்னும்
கூரிய சூலத் தான்.........’

கும்பகர்ணன் கருமை நிறம் வாய்ந்த எமனுக்கு ஈடானவன் என்றும் கூர்மையான சூலப்படைக்குச் சொந்தக்காரன் என்றும் கூறுகிறான்.

‘காலன் ஆருயிர்க் காலனால்
காலின் மேல்நிமிர் காலினான்
மாலி னார்கெட வாகையே
சூல மேகொடு சூடினான்’

கும்பகர்ணன் எமன் உயிரைப் பறிப்பதில் இன்னொரு எமன் போன்றவனாவான். காற்றைக் காட்டிலும் வேகமாக செல்லும் கால்கள் உடையவனாவான். இந்திரனைத் தோற்கடித்து வெற்றிமாலையைத் தன் சூலப்படையால் சூடியவனாவான்.

‘…………………………
தானு யர்ந்த தவத்தினான்
வானு யர்ந்த வரத்தினான்’

மேலும் அவன் உடல் வலிமை மிக்கவன், மனஉறுதி மிக்கவன், தவத்தினால் மேம்பட்டவன், அத்தவத்தால் பல வரங்களைப் பெற்றவன் எனவும் வீடணன் கும்பகர்ணனின் பண்பு, வீரம் போன்றத் தன்மைகளை விவரிக்கின்றான்.

‘நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான்....’

பிறர் மனையைக் கவர்ந்து வைத்திருப்பது அறமுடையோர் செயலல்ல என்ற உயரிய நீதியை இராவணனுக்கு எடுத்துச் சொன்னவன் கும்பகர்ணன். ஆயினும் இவன் பேச்சை இராவணன் கேட்காததால், இன்று இறப்பு நிச்சயம் எனத் தெரிந்தும் எமன் முன் வந்து நிற்கின்றான் என வீடணன் மூலம் கும்பகர்ணனின் பண்புநலன்களையும், சிறப்புகளையும் நமக்கு நயமுடன் எடுத்தியம்புகிறார் கம்பர்.


முடிவுரை

கம்பன் படைத்த காப்பியமான கம்பராமாயணத்தில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் ஆழ்கடல் முத்துக்களாக இருப்பினும் அவற்றில் நல்முத்துக்களான ஒரு சில பாத்திரங்கள் மக்கள் முன் பொதுத் தன்மையுடன் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இராமனின் கதாபாத்திரத்தைத் தெய்வத்துக்கு ஒப்புவித்தவர்கள் கும்பகர்ணன் போன்ற துணைப் பாத்திரங்களை மனித அளவில் கூட ஒப்புவமை காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான் இங்கு வருந்தத்தக்கதாக இருக்கிறது. மனிதநேயப் பண்புகளில் தலை சிறந்து விளங்கிய கும்பகர்ணன் இன்று வெறும் தூக்கத்திற்கு மட்டுமே முன்னுதாரணமாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் வருந்தக்கூடிய ஒன்றாகும்.

‘கும்பகர்ணச் சகோதரனே
நிம்மதியின் நாயகனே
தூங்குகின்ற கலையதனை
எங்களுக்கும் போதிப்பாய்....’ – பெ. கருணாகரன்

அண்மையில் படித்த ஒரு புது கவிதை இது. மனித வாழ்வின் உன்னதப் பண்புகளின் களஞ்சியமாக வாழ்ந்த கும்பகர்ணனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது வெறும் தூக்கத்தை மட்டும்தானா?
குன்றன்ன கொள்கையுடையான், அறநெஞ்சினன், பகைவரின் ஆற்றல் உணர்ந்த மாவீரன், செய்ந்நன்றி மறவாதவன், உடன் பிறப்பின் உயர் கொள்கையுடையான் என இன்னும் எவ்வளவோ சிறப்புகளால் போற்றத்தக்க பண்புநலன்களைக் கொண்டவன் கும்பகர்ணன். கும்பகர்ணனைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்து விட்டால் இராமனுக்கு அவ்வளவு மதிப்பு இராது. இராமன் அப்படி இருப்பது அவனது பாத்திரத்துக்குத் தேவையானது. மனம் என்பது நிமிடத்துக்கு நிமிடம் மாறக்கூடியதுதான். கும்பகர்ணன் நினைத்திருந்தால் வீடணைப் போல இராமன் பக்கம் போயிருக்கலாம். இலங்கை வேந்தனாக ஆகியிருக்லாம். ஆனால் அவன் போகவில்லை. இராவணனுக்காக வாழ்வதையே தன் வாழ்வின் நெறியாகக் கொண்டு அவனுக்காகவே தன் உயிரையும் விருப்பப்பட்டு இழக்கிறான். கம்பராமாயணத்தில் கும்பகர்ணனின் கதாபாத்திரம் தன் பண்புநலனால் தலைநிமிர்ந்து நிற்கிறது. எதிர்காலச் சமூகம் கும்பகர்ணனின் பண்புநலன்களுக்காக அவனைப் போற்றும்.


துணை நூல்கள்
1. தமிழ் வீரம், டாக்டர் மு. அப்துல் கறீம், முதற் பதிப்பு 1994, வானதி பதிப்பகம், சென்னை.
2. கம்பர், மூதறிஞர்வ.சுப. மாணிக்கம், மறுபதிப்பு 1994, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. ஆய்வுக்கோவை, இலக்கியவியல், முதற்பதிப்பு 2004, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தமிழாய்வுத்துறை, பிக்ஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
4. காப்பிய இலக்கியமும் நீதி இலக்கியமும், டாக்டர் பாலவராயன் & டாக்டர் தமிழண்ணல், சிம் பல்கலைக்கழகம், TLL005/SG/REVISED/08, சிங்கப்பூர்.
5. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் பாக்யமேரி, முதற்பதிப்பு 2008, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
6. குளம்பொலி ஞானங்கள், பெ. கருணாகரன், முதற்பதிப்பு 2009, குன்றம் பதிப்பகம், சென்னை.
7. தன்னம்பிக்கை, இரா. சண்முகவடிவேல், இணையக்கட்டுரை, 09 - 2002

தேவைகள்

இலட்சக்கணக்கில் மடிந்தான்
தமிழன்
ஊமை உலகம்

ஆயிரம்பேர்கள் மடிந்தனர்
லிபியாவில்
கூவும் உலகம்

தமிழீழமண்ணில் மனிதத்தைத் தவிர
வேறொன்றுமில்லை

லிபியாவின் மண்ணில்
எண்ணெய் வளம்
வியாபார மனம்

நேயங்கள் உறவுகளாகத்
தேவைகளுக்கேற்பத் தன்னைப்
புதுப்பித்துக் கொள்ளும் பொழுதெல்லாம்
மனிதம் இங்கே தூக்கிலிடப்படுகிறது.

செவ்வாய், 10 மே, 2011

தமிழர்களின் வெளிநாட்டுக் குடியேற்றங்களும், அவற்றின் விளைவுகளும் - ஒரு பார்வை.

முன்னுரை

உலகிற்கே நாகரீகம் கற்றுத்தந்த ஓர் உன்னத நாகரீகத்திற்குச் சொந்தக்காரன் தமிழன். ஈராயிரம் ஆண்டுகளாய் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது தமிழினம். மக்களின் நாகரீகம் பண்பாடு பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால் மிகச் சிறந்த அரசியல், பொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ என்ற உன்னத தத்துவத்தை உலகுக்கு எடுத்தியம்பியதும் தமிழினம்தான்,

‘’சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’’,

என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் அயல்நாடு சென்று அழகு கலைகளைத் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

மகாகவியின் கூக்குரலுக்கு முன்பே சங்க காலம் முதற் கொண்டே தமிழனின் வெளிநாட்டு உறவுகள், பயணங்கள் குறித்தச் செய்திகள் சங்க காலப் பாடல்கள் வாயிலாக நமக்குத் தெரியவருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழரிடம் நடைபெற்ற வெளிநாட்டுக் குடியேற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் இனி வரும் பகுதிகளில் விரிவாகக் காண்போம்.

புலம்பெயர்வு

அன்றிலிருந்து இன்றுவரை உலக மாந்தரிடையே புலம் பெயர்தல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு தமிழினமும் விதிவிலக்கல்ல. போர் நடத்தவும், பொருள் தேடவும், வணிகத் தொடர்பாகவும் தமிழர்கள் கடல் கடந்து சென்றதும் தமிழ் இலக்கியங்களில் செய்திகளாத் தொகுக்கப்பட்டுள்ளன.

‘’கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’’ என்ற பெயரால் கடலில் இறந்த செய்தியும்,

‘’கடல் பிறக் கோட்டியவன்’’ என்ற சிறப்பால் கடலுள் சென்று வென்ற செய்தியும் குறிக்கப்பட்டுள்ளன.

‘’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்பதும்,

‘’ முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை’’ என்பது போன்றவையும் தமிழன் கடல் கடந்து சென்ற செய்திகளை நமக்குக் குறிக்கின்றன.

கப்பற்படை, நாவாய் ஓட்டம், நெய்தல் வாழ்க்கை இவையெல்லாம் தமிழரின் கடல் வெல்லும் ஆற்றலைக் காட்டுகின்றன.

‘’அலையோட போன மச்சான்
அலையை மட்டும் அனுப்பி வைச்சான்’’

என்ற நாட்டுப்புறப் பாடல், ஒரு நெய்தல் நிலத் தலைவியின் துயரத்தை இரண்டே அடிகளில் கூறிவிடுகிறது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் சோழ நாட்டிலிருந்து சேர நாட்டிற்குப் புலம் பெயர்ந்து செல்வதைக் காணலாம்.

தென்கிழக்காசிய நாடுகளையெல்லாம் தன் குடையின் கீழ் வைத்திருந்த தமிழினம், காலத்தின் வேகத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு, வாழ்வு தேடி கூலிகளாகப் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய தாழ்நிலை எற்பட்டது. தமிழர்கள், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அடிமைத் தொழிலாளியாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ், பீஜி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கடல் கடந்து சென்று குடியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
‘’கரும்புத் தோட்டத்திலே...
வீட்டை நினைப்பாரோ நாட்டை நினைப்பாரோ
விம்மி விம்மி அழும் குரலைக் கேட்டிருப்பாய் காற்றே..’’
என பீஜியில் அடிமைத் தொழிலாளியாக வேலை செய்தோரின் துயரைப் பாடினார் பாரதி.

"வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

- மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்

- இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்

- பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்

- கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்

- பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள்

என தனது புயலில் ஒரு தோணி நாவலில் பதிவு செய்துள்ளார் திரு ப.சிங்காரம். புயலில் ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகிய இரண்டு நாவல்களும் தென்கிழக்காசியாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலின் பின்னனியில் படைக்கப்பட்ட படைப்புகளாகும்.

எழுத்தாளர் அகிலனும் தனது, ‘’பால்மரக் காட்டினிலே’’ என்ற நூலில், மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் படும் துன்பங்களையும், அவலங்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக உலகமெங்கும் உள்ள நாடுகளில் குடிபுக வேண்டியதாயிற்று. யாழ்ப்பாணப் பகுதி தமிழர்களே பெரும்பாலும் வெளிநாடுகளில் குடியேறினர். இவர்கள் இலண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய, பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், நார்வே என பல் வேறு நாடுகளில் புனர் வாழ்வு மேற்கொண்டிருக்கின்றனர்.

காலங்களின் வகையறை

தமிழர்களின் வரலாற்றில் காலந்தோறும் நடைபெற்ற வெளிநாட்டு உறவுகளையும் குடியேற்றங்களையும் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தலாம்.
1. சங்க காலம்
2. பல்லவர், பிற்காலச் சோழர் காலம்
3. ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியின் காலம்
4. இன்றையக் காலக்கட்டம்

சங்க காலம்

எகிப்தில் தாமிழி எழுத்திலான வாணிப ஒப்பந்தப் பட்டயம் தமிழ் வணிகனுக்கும் யவன வணிகனுக்குமிடையில் செய்த வாணிப ஒப்பந்தமாகும் . கிறிஸ்துவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்துக்கும் மேலைநாட்டவர்களுக்கும் வாணிபத் தொடர்பிருந்ததை பிற ஆதாரங்கள் காட்டுவதை இப்பட்டயம் மேலும் உறுதி செய்கிறது. பாபிலோனியாவுடன் தமிழர் நிகழ்த்திய வணிகத்திற்குச் சான்றாக இது அமைந்துள்ளது. அங்கேயே தமிழர்கள் குடியேறியிருந்தனர் என டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தனது தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் குறிக்கின்றார்.

பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையில், கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

‘கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்..’

பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் பாடுகிறார். இவ்வரிகளில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை மலாயாவில் உள்ள காடாரத்தைக் குறிப்பதாகும். முற்காலச் சோழ அரசர்களில் ஒருவனான கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சியில் தென்கிழக்காசியாவரை சோழர்களின் வணிகப் பரப்பு விரிந்துள்ளதைக் காணலாம்.

தென்னிந்தியப் பண்டைத் தமிழர்கள் வீரம் மற்றும் அறிவு நிலைகளில் புதியன காணும் ஆர்வம் உடையவர்கள். புதிய இடங்களைக் காணுத் துடித்த அவர்களின் ஆர்வ நோக்கத்தில், பிற நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் உதிக்கவில்லை. மாறாக புதிய வாணிக நிலையங்களைக் காண்பதே உயரிய நோக்காக இருந்தது என புலவர் கா. கோவிந்தன் தனது தமிழர் தோற்றமும் பரவலும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். தமிழர்களின் வாணிகப் பொருள்களுக்கு, அன்று வரை தெரிந்திருந்த உலகில் பெரிய தேவை இருந்தது. அவை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மிக முக்கியமான நகரங்களில் தமிழர்கள் நிலைத்த குடியினராகி, அங்கு தம் மொழியையும் பண்பாடுகளையும் புகுத்தினர் எனவும் புலவர் கா. கோவிந்தன் விவரிக்கின்றார்.

பல்லவர், பிற்காலச்சோழர் காலம்

தென்கிழக்காசியாவின் பல்வேறு பாகங்களில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியுள்ளமை குறித்து மலேசிய தமிழர் என்ற நூலில் பின்வரும் குறிப்புகள் காணப்படுகின்றன.

‘’………இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கெடா, மர்பஸ் நதி, பூஜாங் நதி, பேரா நதி, பெர்ணம் நதி, முவார் நதி ஆகியவற்றின் முகத்துவாரக் குடியிருப்புகளில் தமிழர் ஆட்சி நடைபெற்றதாக டான்ஸ்ரீ உபைதுல்லா என்ற தமிழ்ப் பெரியார் எழுதியிருக்கிறார் . 9ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டு வரையிலும் சோழ மன்னர்கள் மலாயாவின் பல பகுதிகளை ஆண்டார்கள். அதில் ஒரு பகுதி கடாரம் என அப்பொழுது அழைக்கப்பட்டு இன்றைய மலேசியாவில் கெடா என்ற மாநிலமாக இருக்கிறது. மேலும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நிகோபார், அந்தமான், சாவா, இந்தோனேசியா, வட மலேயா போன்றபகுதிகளை தமது ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.

இவ்வாறே பல்லவ மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ஈப்போ, சுங்கைசிப்புட் பகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்லவர்களுடைய கப்பல்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு கடல் மல்லையில் இருந்து சென்று வந்தன என வால்டர் எலிபயட் குறிப்பிடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பேரா நதி சங்கமத்திற்கு அருகில் கங்காநகரினை (இன்றைய கோலாகங்சார் – பேரா மாநில அரச நகர்) கங்க பல்லவன் என்ற அரசன் ஆட்சி புரிந்ததாக வின்ஸ்டெட் எனும் அறிஞர் தெரிவிக்கின்றார். (H. Winstedt, A Cultural History of Malaysia, P.P. 48-50) .

காலனித்துவ ஆட்சிக் காலம்

சோழப்பேரரசின் காலத்திலிருந்து எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் (18 ஆம் நூற்றாண்டின் பின்னர்) உலகின் மேற்கு மூலையிலுள்ள கரிபியன் தீவுகள் முதல் கிழக்கு மூலையிலுள்ள பிஜி தீவு வரை உள்ள பிரெஞ்சு, ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிலும் வாழ்வைத் தேடியும், வலுக்கட்டாயமாகவும் குடியேறினர் அல்லது குடியேற்றப்பட்டனர். சோழப் பேரரசு காலத்தில் ஆளும் இனமாகக் குடியேறிய தமிழன் ஐரோப்பியர் காலத்தில் கூலி தொழிலாளியாகப் புலம்பெயர்ந்து வாழும் அளவுக்கு தமிழனின் வரலாறு கறுப்புப் பக்கங்களால் தன்னை நிறைத்துக் கொண்டது.

சுயதேவை பொருளாரத்தை மிக எளிமையான கருவிகளைக் கொண்டே உற்பத்திச் செயலில் ஈடுபட்டிருந்தது தமிழர்களின் கிராமங்கள் சுயேச்சையாக இயங்கிக்கொண்டிருந்தன. நீர்ப்பாசனம் அரசின் நடவடிக்கையாக இருந்ததால் ஒவ்வொரு கிராமமும் தமது பொருளுற்பத்திக்கு அரசைச் சார்ந்தே இருந்தன. இவ்விதத்தில் அரசு சமூக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இதனை காலனித்துவ அரசின் வருகை உடைத்தெறிந்ததால் விவசாயம் சீர்குலைக்கப்பட்டு விவசாயிகள் நடுத்தெருவிற்கு வர பிரிட்டன் காரணமாக இருந்தது .

இக்காலக்கட்ட புலம்பெயர்வுக்கு வித்திட்ட முக்கியக் காரணிகள் சிலவற்றை அடுத்துக் காண்போம்.

1. தென்னிந்திய தமிழ் கிராம மக்கள் வேலையின்மை
2. சாதிய அடக்குமுறை
3. நிலப்பிரபுத்துவ பொருளாதாரச் சுரண்டால்
4. தமிழர்களின் வறுமை
5. ஐரோப்பியத் தொழில் புரட்சி
6. பிரிட்டனின் காலனித்துவ ஆதிக்கம்
7. பிரிட்டனின் காலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கு தேவைப்பட்ட தொழிலாளர் வர்க்கம்.
8. பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்கு இந்நியக் கைதிகளை நாடு கடத்துதல் அல்லது வேலைக்குக் கொண்டு செல்லுதல்.

தற்காலப் புலம்பெயர்வு

வணிக நோக்கோடும், போர் நோக்கோடும், அடிமைத் தொழில் நோக்கோடும் காலத்தின் தேவைக்கேற்ப உலகநாடுகள் பலவற்றில் குடியேறியத் தமிழினம், இன்றையத் தேவைக்கேற்ப கல்விக்காகவும், தொழிலுக்காகவும், நிபுணத்துவ வல்லுனர்களாகவும், தொலைத்தொடர்பு வித்தகர்களாகவும், கல்விமான்களாகவும், அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, புலம் பெயர்ந்த நாடுகளில் தலை நிமிர்ந்து வாழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

இலங்கையின் அரசியல் காரணங்களினால் 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகிறது எனக் குறிக்கின்றார் சு. குணேஸ்வரன். இன்றையக் கணிப்புப்படி ஏறத்தாள ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, வட அமெரிக்கா, கனடா மற்றும் அஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறியுள்ளனர்.

நிபுணத்துவ திறனாளர்களாகத் தமிழர்கள் இன்றையக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதுமாய் வியாபித்திருப்பதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
இனி வரும் பகுதிகளில் தமிழர்களின் வரலாற்றில் காலந்தோறும் நடைபெற்ற வெளிநாட்டுக் குடியேற்றங்களால் விளைந்த விளைவுகளைக் காண்போம்.

மலேசியா, சிங்கப்பூர்

மலேசியாவில் மலைகள் நிறைந்திருந்தமையால் அக்காலத் தமிழர்கள் மலை நாடு எனப் பெயரிட்டனர். காலப் போக்கில் மலை நாடு என்னும் பதம் திரிந்து மலாயா என வழங்கலாயிற்று என்று சரித்திரச் சான்று கூறுகின்றது. இதனின்றே மலேசியா மலர்ந்துள்ளது. (தமிழ்த் தொண்டன் அ. கந்தன், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும். பக். 10) . இதன் மூலம் மலாயாவிற்கு பெயர்ச்சூட்டி அழகு பார்த்தது தமிழினம் என அறியமுடிகிறது.

மலேசியாவிலே நிலையாகக் குடியேறி வாழத் தொடங்கிய முதல் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்களும், மலாக்கா செட்டியார்களும் ஆவார்கள் எனக் கூறலாம் என தனது அயல்நாடுகளில் தமிழர்கள் என்ற நூலில் முனைவர் எஸ். நாகராஜன் குறிப்பிடுகின்றார்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் போதும் மலாக்கா அரசரோடு தமிழக வணிகர்களுக்குத் தொடர்ந்து தொடர்பு இருந்தது. மலாக்காவில் தமிழர்கள் குடியேற்றங்கள் இருந்தன. இவ்வாறு குடியேறிய தமிழர்கள் உள்ளூர் மலாய்க்காரர்களுடன் நெருங்கிப் பழகி, திருமண உறவு கொண்டனர். உள்ளூர் பழக்க வழக்கங்களைத் தழுவினர். முன்பே பல்லவர், சோழப்பேரரசு காலங்களில் தமிழர்களின் மொழி, பண்பாட்டு மலாய்க்காரர்களின் வாழ்க்கை நெறிமுறைகளினால் உள்வாங்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்ததால், உள்ளூர் மலாய் மரபு வழிமுறைகளில் தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் கலந்திருந்தன. மலேயாவின் வரலாற்றை உற்று நோக்கையில், தமிழ் வழி தோன்றிய இந்து அரசர்களே பிற்காலத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவினர் என்ற உண்மை நமக்குப் புலப்படும். மலாக்காவைத் தோற்றுவித்தவன் பரமேஸ்வரன் என்ற இந்து அரசன் பின் இஸ்லாம் மதத்தைத் தழுவினான்.

காலத்தால் முந்திய தமிழ் எழுத்துக் கடிதம் ஒன்றின் படியொன்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுருந்தது. கி.பி 1527 ஆம் ஆண்டில் எழுதப் பெற்ற இக்கடிதம் மலாக்காவில் கண்டெடுக்கப்பட்டது. இதனைக் கொண்டு நாம் ஆராய்வோமானால், வெகு காலத்திற்கு முன்பே மலாயா மண்ணில் தமிழ்மொழி நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

மலாய் நவீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் முன்க்ஷி அப்துல்லா (1796-1854) அவர்கள் தனது சுயசரிதையில் தமிழ்மொழியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
‘ தமிழ் மொழி எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது வணிக மொழியாக இருந்ததால் என் தந்தை என்னைத் தமிழ் கற்கச் செய்தார். மலாக்காவில் உயர்நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் தமிழ் கற்றிருந்தனர்..’

இத்தகைய தேவையின் பின்னனியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. அவ்வகையில் தோன்றிய முதல் தமிழ்ப்பள்ளி 1816 ஆம் ஆண்டில் பினாங்கில் கிறிஸ்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்றளவும் தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரை தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பும் இருக்கிறது.

இப்படி குடியேறிய தமிழர்கள் வயிற்றுப்பசியைத் தணித்துக்கொண்டதோடன்றித் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் வாழ்க்கைக்கு வேண்டிய பண்பாட்டு சமூக விழுமியங்களையும், கலைகளையும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வகையில் வளர்ந்த கலைகளில் ஒன்று இலக்கியக்கலை. காலத்தின் தேவைக்கேற்ப வெவ்வேறு வடிவங்கொள்வது இலக்கியத்தின் இயல்பு. கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் போன்ற படைப்பிலங்கியங்களும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தோன்றியுள்ளன.

சிங்கை நேசன் என்னும் இதழின் ஆசிரியர் மகதூம் சாயது அவர்களின் ‘வினோத சம்பாஷணை’ (1888) என்ற பெயரில் எழுதிய சிறுகதைகள் சிங்கப்பூர் புனைகதைத் துறையில் தோன்றிய முதல் முயற்சி என நா. கோவிந்தசாமி பதிவு செய்துள்ளதை முனைவர் ஸ்ரீலட்சுமி தனது புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை என்ற நூலில் குறிப்பிடுகிறார். தமிழ் சிறுகதையில் முன்னோடி எனக் கருதப்பட்ட வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ (1917) என்னும் சிறுகதைக்கும் முன்பே சிங்கப்பூரில் சிறுகதை பற்றிய தெளிவான இலக்கியக் கோட்பாடுகளுடன் சிறுகதை உதயமாகியுள்ளதை நா.கோவிந்தசாமி தக்க ஆதாரங்களுடன் தம் கட்டுரையில் நிறுவியுள்ளார். அயல்நாட்டில் தமிழ் இலக்கியக் குழந்தைகளில் ஒன்றான சிறுதையின் முதல் கதை பிறந்திருக்கிறது என்பது பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். (குறிப்பு – 1965 க்கு முன்பான சிங்கப்பூரின் வரலாறு மலாயாவைச் சார்ந்திருந்ததால் சிங்கப்பூர் பற்றிய தகவல்கள் தனியாகக் குறிப்பிடப்படவில்லை)

சவால்களும் சமாளிப்பும்

அந்நிய நாட்டில் வாழும் தமிழர்களிடையே மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் நேரிடையாகவே ஏற்பட்டுள்ள சில தாக்கங்களை நேரிடையாக நம்மால் இலகுவாக அடையாளம் காண இயலும்.

1. தமிழில் பேச, எழுத ஆர்வமின்மை.
2. மேலைநாட்டின் மோகம் உள்ளதால் நடை, உடை, பழக்கவழக்கங்களில் மாற்றங்கள்.
3. தமிழர் பண்பாடு தொடர்பான அறிமுமின்மையால் வாழும் நாட்டின் கலாசாரத்தைச் சார்ந்து இருத்தல்.
4. உணவு வகைகளில் ‘விரைவு உணவுகளின்’ மோகம். ‘உணவே மருந்து மருந்தே உணவு’ தொலைந்து போனது.
5. தமிழ் மொழி வேலை வாய்ப்புக்கு உரியதாக இல்லை என்ற எண்ணத்தில் கல்வித்துறையில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுப்பதில்லை.

ஆயினும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்னமும் தங்கள் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை தமிழ்நாட்டினரைப் போலவே போற்றியும் பின்பற்றியும் வருகின்றனர்.

‘தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
‘தமிழ்தான் தமிழருக்கு முகவரி’

எனத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்த சிங்கப்பூர், மலேசியா தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வாளர்களும், இந்நாடுகளில் தமிழுக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டு தமிழுக்கு ஒரு நிலையான இடம் கிடைப்பதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். இதில் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் அரும் பணி இன்றியமையாததாகும். தமிழ் முரசு பத்திரிக்கையின் மூலம் அன்றையத் தமிழர்களின் மனங்களில் தமிழினத்தின் எழுச்சியை ஏற்படுத்தினார். நீலகண்ட சாஸ்திரிகளால் பரிந்துரைக்கப்பட்ட சமஸ்கிருத மொழியை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி, தமிழருக்கு எழுச்சியூட்டி, தமிழ் மொழியை பல்கலைக்கழகங்களில் அலங்கரிக்க வைத்தார்.

சிங்கப்பூரில் தமிழ் மொழி அதிகாரத்துவ ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளைப் போன்று தமிழுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் தர நாடுகளின் ஒன்றான சிங்கப்பூரில் தமிழ் மொழி அதிகாரத்துவ ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பது உலகத் தமிழருக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்று. தாய் தமிழ்நாட்டில் சாதிக்க இயலாதவற்றையெல்லாம் அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது.

9.7.1943 இல் சிங்கப்பூர் முனிசிபல் கிரவுன்டில் மாலை நான்கு மணியளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன் முதலில் பங்கு கொண்ட ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மலேயா, சிங்கப்பூர் சார்ந்த 60,000 மக்களுக்கு மேல் திரண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில்தான் ‘இந்திய தேசிய இராணுவம்’ (INA ) மற்றும் ‘இந்திய இடைக்கால அரசு’ ஆகியவை நேதாஜியால் பிரகடனப்படுத்தப்பட்டது . இச்செய்தியின் மூலம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அயல் நாட்டுத் தமிழரின் பங்களிப்பையையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

பர்மா

பர்மாவில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் திராவிடக் கட்டடக் கலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுறது. பாகன் என்ற ஊரில் கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் , அங்கு நானாதேசி வணிகர் கட்டிவைத்த திருமால் கோயில் இருந்தது என்றும் அவ்வூரில் தமிழர்கள் குடியேறியிருந்தனர் என்றும் தெரியவருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்த வணிக உறவினாலும், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலத்தினாலும் தமிழரகளின் குடிபெயர்ப்புகள் பர்மாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. 1938 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரியும் வரை பர்மா தமிழர்களின் வாணிகப் பகுதியாக பெரும் பங்காற்றியது எனக் கூறப்படுகிறது.

பர்மாவின் அன்றைய தலைநகரான இரங்கூன் பெரிய நகரமாக வளர்ச்சியடைந்ததில் தமிழ்த் தொழிலாளிகளுக்கும், தமிழ் ஒப்பந்தக்காரர்களும் சிறப்பான பங்கு உண்டு என முனைவர் எஸ். நாகராஜன் குறிப்பிடுகிறார். மேலும் இன்றைய பர்மாவை உருவாக்கியதில் குறிப்பாக ஆங்கிலேய ஆட்சியின் போது, தமிழர்களுக்குச் சிறப்பான பங்கு உண்டு என அறுதியிட்டுக் கூறலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

சாவா

இரட்டைக்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இந்த சாவா, ‘சாவகம்’ , ‘சாவகத்தீவு’ என்றப்பெயரில் கூறப்பட்டுள்ளது. தமிழர்கள் பழங்காலம் தொட்டே சாவா சென்று குடியேறியுள்ளனர். அகத்தியர் வழிபாடு இங்கும் காணப்படுதாகக் கூறப்படுகிறது. போராபத்தூர் கோயில் மன்றம் பௌத்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் பல்லவர், சோழர் ஆகியோரின் சிற்பக்கலை ஒத்திருப்பதாக வின்சண்ட் சுமித் கூறுகிறார் . அமெரிக்க அதிபர் பாராக் ஓபாமா, அதிபராகப் பதவியேற்றப் போது, இந்தோனிசியாவில் உள்ள அவரின் முன்னோர்கள் அனுமானை வழிபட்டு வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் இந்தோனிசியாவின் பாரம்பரியமான பாவைக்கூத்தில் (Wayang Kulit) இராமாயணக் கதாபாத்திரங்களே முக்கிய அம்சங்களாக விளங்கியுள்ளன. இன்றளவும் மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான கிளந்தானில் பாவைக்கூத்து இராமாயணக் கதாபாத்திரங்களால் படைக்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்து (சயாம் )

கி.பி. 6 முதல் 13 ஆம் நூற்றாண்டுகள் வரையுள்ள காலத்தைச் சேர்ந்த சிவன், விஷ்ணு, இந்திரன், பிரம்மா ஆகியோரின் சிலைகள் இங்கு கிடைத்துள்ளன. சயாம் மன்னர்களின் முடிசூட்டு விழாவில் ஒரு தமிழ்ப்பாட்டு பாடப்படுவதாகக் கூறப்படுகிறது. பாங்காக்கிலுள்ள கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இன்றும் பாடப்படுகிறது . கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று சயாமில் கிடைத்துள்ளது அங்கிருந்த தமிழ் வணிகக் குழுவைப் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

அயல்நாடுகளில் தமிழர்களின் செயல்பாடுகள்

சமய விழாக்கள்

புலம் பெயர்ந்தோர் தம் அடையாளத்தை அழிய விடாமல் பல பாதுகாப்பு முயற்சிகளை எடுத்துள்ளனர். இவர்கள் தம் மொழி, பண்பாடு, வாழ்வியல் அறம் இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள திருக்கோயில்கள் பல கட்டி, தமிழ்நாட்டைப் போலவே திருவிழாக்கள், வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். கோயில்களில் சமயச் சொற்பொழிவுகள், தமிழிசை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் நடத்தி நம் கலை, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமயம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி அவற்றின் பெருமைகளை உணரச் செய்கின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் பொங்கல் விழா தமிழர் திருநாளாக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, ஆடித் திருவாழா, சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

சடங்கு சம்பிரதாயங்கள்

அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை, தமிழ் நாட்டினரைப் போலவே அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.

இயக்கங்கள்

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், இலக்கியச் சுவைக்காகவும் தமிழ் இயக்கங்கள், மன்றங்கள் பல அயல் நாட்டில் வாழும் தமிழர்களால் வாழும் நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வளர்தமிழ் இயக்கம் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முழுவதும், ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என தமிழ் விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடி வருகின்றனர். கவிமாலை எனும் கவிதை இலக்கிய நிகழ்வும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமை நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நாட்டிலிரிந்து தமிழறிஞர்களையும், பேச்சாளர்களையும் வரவழைத்து இலக்கிய நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றனர்.

மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கம், முத்தமிழ் சங்கம், பாரதிதாசன் குழு, கண்ணதாசன் குழு என பல அமைப்புகள் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றன. மலாயாப் பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் சிறுகதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி, அவற்றை நூலாகவும் வெளியிட்டு வருகிறது. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் ஆண்டு தோறும் சிறுகதைப் போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருகின்றது. ‘எஸ்ட்ரோ’ நிறுவனமும் நாவல், கவிதைப் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.

ஊடகங்கள்

அயல் நாட்டு தமிழர்கள் ஊடகங்கள் வழியாகவும் தமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைப் பேணி வருகின்றனர். 24 மணி நேரமும் ஒலிக்கும் வானொலி அலை வரிசைகளையும் அயல் நாடு வாழ் தமிழர்கள் நடத்துகின்றனர். சிங்கப்பூரில் ’96.8’, மலேசியாவில் ‘மின்னல் எப்.எம்’, ‘தி. எச். ஆர். ராகா’ எனவும் வானொலி ஒலிபரப்புகள் நடத்தப்படுகின்றன. சிங்கப்பூரில் வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையும், மலேசியாவில் டிவி 2, டிவி 3 எனத் தொலைக்காட்சி அலைவரிசைகளும், மேலும் தனியார் தொலைக்காட்சி மூலமாக 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசைகளும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, வண்ணத்திரை எனவும் இங்கு இயங்குகின்றன.

கலை, கலாச்சார இடங்கள்

சிங்கப்பூரில் சிராங்கூன் சாலையில், ‘லிட்டில் இந்தியா’ என்ற இடமும், மலேசியாவில் கிள்ளான் எனும்இடத்தில், ‘லிட்டில் இந்தியா’ என்ற இடமும் நமது கலாச்சார, பண்பாட்டு இடங்களாக விளங்குகின்றன. இந்த இடங்களுக்குச் சென்றால், தமிழ் நாட்டில் வாழும் உணர்வே நமக்கு ஏற்படும். மேலும் நமது கலை, கலாச்சார நிகழ்வுகள் அதிகமாகவே நிகழ்த்தப்படுகின்றன.
அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமலும் தம் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிப்பதிலும் உண்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பரதநாட்டிய வகுப்புகளும், அரங்கேற்றங்களும் நிறையவே இந்நாடுகளில் நடக்கின்றன. பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய உடையான சேலை, வேட்டி உடுத்துவதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி, உலகம்முழுக்க தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பரப்பி வருகின்றனர்.

பண்பாடும் சமூகமும்

பண்பாடு என்பது ஒரு வாழும் முறை. உண்பது, உடுத்துவது, பேசுவது, நமது பெறுமதிகள், நாம் நடக்கும் முறை எண்ணும் விதம் என பல் வேறு விசயங்கள் அதனுள் அடங்கும். இவை அனைத்தும் காலத்தின் போக்கிற்கேற்பவும், நாம் வாழும் நாட்டின் பண்பாட்டிற்கேற்பவும் மாறும் தன்மை பெற்றவை.

பல இனங்கள் கூடி வாழும் சூழல். இந்நிலையில் பல இனப்பண்பாடுகளும் கலந்து விட்ட ஓர் உலகப்பண்பாடு தோற்றம் பெற்று வருகின்றது. இருப்பினும் ஒரு பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் மாற்றம் நிகழ்ந்து விடுவதில்லை. இன்றைய உலகின் புதிய கண்டுபிடிப்புகள், நவீனமயமாக்கல், சகல தேவைகளும் தொழில் மயமாதல், நமர மயமாதல், சில குழுமங்கள் தமது மொழி, கலை என்பவற்றை இழந்து வேறு இனவடிவம் பெறல் அல்லது ஓரினமாதல் என்பன உலகின் மக்களை ஒன்றிணைத்து ஒருமித்துச் செயற்பட வைத்துள்ளது.

தம்மினத்தின் அடையாளத்தைச் சுட்டி நிற்கும் தமது மரபுவழிப் பண்பாட்டின் சமூகத்தை மேம்படுத்த வல்ல மற்றைய கூறுகளையும் எந்த இனம் இழக்காமல் இருக்கின்றதோ அந்த இனம் மற்றைய இனங்களால் மதிக்கப்படும். எந்த இனம் அவற்றை இழந்து விடுகின்றதோ அந்த இனம் தனது மதிப்பை இழந்து விடும் என்பது வரலாறு .

முன்னதையற்கு சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்கள் நல்லதொரு எடுத்துக்காட்டு. பின்னையதற்கு எடுத்துக் காட்டு தென் ஆப்பிரிக்கா, கயானா, மொரிஸியஸ் போன்ற நாடுகளில் குடியேறிய தமிழர்கள்.

முடிவுரை

இவ்வாறாக தமிழர்கள் அக்காலத்திலேயே தமிழர் நாகரிகத்தின் தூதுவர்களாக இலங்கை, மலாயா, சுமத்திரா, சாவா, பர்மா, போர்னியோ, சியாம், கம்போடியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று தமிழர்களின் நாகரிகத்தையும், கலையையும், அரசியல், சமுதாயம் மற்றும் மதம் பற்றிய சிந்தனைகளையும் , பழக்க வழக்கங்களையும், மொழியையும் பரப்பி வந்தனர். நெடுங்கடலில் கப்பல்கள் செலுத்துவதில் தமிழர்கள் பெற்றிருந்த திறமையே இத்தகையத் தொடர்புகளுக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது எனக் கூறப்படுகிறது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் ஆகிய அனைவருமே வலிமை வாய்ந்த கப்பற்படையை வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களின் கப்பற்படை வங்காளக் கடலையே ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது . மேலும் அவர்களின் காலத்தில் வங்காள விரிகுடா, சோழர்களின் ஏரியாக மாறிவிட்டது. அதனால்தான் தமிழ் அரசுகளின் பாரம்பரியத்தில் இல்லாத வகையில் சோழர்களால் கடல் கடந்த ஒரு பேரரசை நிர்வகிக்க முடிந்தது. அதனால்தான் தமிழர்கள் அந்நாளில் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் நம் கண் முன்னே காணும் காட்சிகளாய், சாட்சிகளாய் தென்கிழக்காசிய நாடுகளில் விரிந்தும் பரந்தும் கிடக்கின்றன.

கற்றுக் கொடுத்தது தமிழினம் - அதற்கு
கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்.




துணை நூல்கள்
1. தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை, மறு பதிப்பு 2009, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
2. தமிழ்நாட்டு வரலாறு, அ. இராமசாமி, இரண்டாம் பதிப்பு 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3. தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி, மறுபதிப்பு 2008, யாழ் வெளியீடு, சென்னை.
4. சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள், மலேசிய நண்பன் நாளிதழ் கட்டுரை - 12 . 09. 2011. கோலாலம்பூர். மலேசியா.
5. அயல்நாடுகளில் தமிழர்கள், முனைவர் எஸ். நாகராஜன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
6. தமிழர் தோற்றமும் பரவலும், புலவர் கா,கோவிந்தன், முதற்பதிப்பு 1991, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
7. மலேசிய தோட்டத் தொழிலாளர் வரலாறும் பிரச்சனைகளும், மு. வரதராசு, முதற்பதிப்பு 1990, தமிழ்ப் பண்பாட்டு, சமுதாய அமைப்புக் குழுவினர், சென்னை.
8. மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்-சில அவதாணிப்புகள், லெனின் மதாவாணம், முதற்பதிப்பு 2008, தமிழோசை பதிப்பகம், கோவை.
9. பண்பாடு-வேரும் விழுதும், சு.இராசரத்தினம், முதற்பதிப்பு 2007, விவேகா அச்சகம், கனடா.
10. புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52, முனைவர் எம். எஸ். ஸ்ரீலட்சுமி, முதற்பதிப்பு 2006, தருமு பப்ளிகேஷன்ஸ், சிங்கப்பூர்.
11. கடல் கடந்த தமிழன், மலேயா சக்திமோகன், முதற்பதிப்பு 2001, ராணி செந்தாமரை பதிப்பகம், கோலாலம்பூர்.
12. தமிழ்ப் பள்ளி மெல்ல மடியவில்லை, திட்டமிட்டுக் கொல்லப்படுகின்றது ஆட்சியில் இருப்பவர்களால், காத்தையா, பக். 8, செம்பருத்தி இதழ், பிப்ரவரி 2007. கோலாலம்பூர்.
13. புலம்பெயர் இலக்கியம், சு. குணேஸ்வரன், இணையக் கட்டுரை, திண்ணை.
14. புயலில் ஒரு தோணி, கடலுக்கு அப்பால். ப.சிங்காரம். தமிழினி பதிப்பகம், சென்னை.