ஞாயிறு, 27 மே, 2018

விமோசனம் – முஹைதீன்




விமோசனம் – முஹைதீன்
தமிழ் முரசு 27 – 05 – 2018


கேள்விக்கணைகளுடன் நம்மை நோக்கிப் பாயும் கதையின் தொடக்கம். கதாபாத்திரமே நோக்குநிலை பின்னணிமூலம் நம்முடன் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்து பேசும் உரையாடல் உத்தி. கதையின் பின்புலமாகச் சிங்கப்பூர்ச் சூழலும் அதன் சிக்கலும் இச்சிறுகதைக்கு முக்கியப் பலமாக அமைந்திருக்கின்றன.


கதைப்பொருள்:


சொல்லப்படும் கதை எதைப்பற்றியது என்பது கருப்பொருள். இதன் அடிப்படையில்தான் ஒரு சிறுகதை எத்தகைய வகையைச் சார்ந்தது என்பதை அறிய முடியும். அவ்வகையில் இச்சிறுகதையை ஒரு சமூகச் சிறுகதையாக அணுகலாம். சிறுகதைகள் பெரும்பாலும் சின்னஞ்சிறிய வட்டத்துக்குள் நிகழ்வதால் மனித உணர்வுகள் அதன் உறவுகள் சார்ந்தே அவை அதிகம் பேசுகின்றன.


சிங்கப்பூர்ச் சூழலில் இங்குள்ள சமூகத்திற்குப் பொதுவாக அனைத்து சமூகத்திற்கும் இந்த ஆலோங் (கடன் முதலைகள்) பிரச்சினை ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் இவர்களை நோக்கி சட்டங்களை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அவர்கள் போக்கில் அவர்கள் தங்களின் வியாபாரத் தந்திரங்களை ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு விதமாக மாற்றியமைத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் நிறைய உயர்நிலைப்பள்ளி மாணவர்களையும் பகுதி நேரமாக வேலை பார்க்கவும் வைக்கின்றனர். மேலும், பெற்றோர் பெற்ற கடன்களை அவர்களால் கட்ட முடியாவிட்டால் பிள்ளைகளை வற்புறுத்தி கட்டாயப்படுத்தி தங்களுக்காக வேலை செய்ய நிர்ப்பந்திப்பார்கள். இவர்களின் தொல்லைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் உண்மை வலி தெரியும். நிம்மதி இல்லாத வாழ்க்கை, பயத்துடன் வாழும் வாழ்க்கை என அந்த வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் நலத்தையும் நிம்மதியையும் சீர்குலைக்கும் ஒரு விஷயம் இது.


இக்கதை, கடன்முதலைகளிடம் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீள முடியாத ஒரு நடுத்தர குடும்பத்தின் வாரிசை எந்த அளவுக்கு இப்பிரச்சினைப் பாதித்து, வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது என்பதைக் கதைப்பொருளாகக் கொண்டிருக்கிறது.


கதைப்பின்னல்:


எவ்விதச் சிக்கலும் இல்லாமல் நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறது. கேள்விகளோடு தொடங்கும் கதை அதற்கான விடையைச் சொல்லி தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறது. இருப்பினும், தந்தை செய்த தவற்றிலிருந்து விடுபடமுடியாமல் அத்தவற்றைக்கொண்டே இச்சமூகத்தை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் மகனின் செயல்களில் எதிர்மறை எண்ணங்களே அளவுக்கதிகமாகக் குடிகொண்டிருப்பதும் கதைப்பின்னலில் அதற்கான சூழல்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.


அப்பா – மகன் உறவை இன்னும் இடைவெளியோடு காட்டி, அம்மா – மகன் உறவவை இன்னும் அணுக்கமான ஓர் உறவாகக் காட்டிக் கதைக்கான பின்புலத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டமைத்திருக்கலாம். அப்படிச்செய்திருந்தால், கொலையையும் தற்கொலையையும் அவரவர் நியாயப்படி எப்படிவேண்டுமானாலும் அனுமானித்துக்கொள்ள போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.


பாத்திரப்படைப்பும் நோக்குநிலை பின்னணியும்:



மகன் குணசீலனின் கதாபாத்திரமே  இச்சிறுகதையை நகர்த்திச் செல்கிறது. அவனின் மனவோட்டத்திலேயே அவனது பார்வையிலேயே கதைசொல்லியும் தன் தடத்தைப் பதித்திருக்கிறார். கதாபாத்திரமே இக்கதையைச் சொல்லும் பாங்கு, வாசகர்களை இக்கதையினூடே இன்னும் அணுக்கமாக இணைந்துகொள்ள வைக்கிறது. கதாபாத்திரமே கதையை நகர்த்திச் செல்வதால் கதாசிரியரின் குறிக்கீடு இல்லாமல் கதை அதன் போக்கில்  கனக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.



நோக்குநிலை பின்னணி உத்தி கதைச்சொல்லிக்கு தன் கதையைச் சொல்வதில் போதுமான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால், கதாசிரியர் முழுமையாக அச்சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. மேலோட்டமாகச் சொல்லப்படும் சின்னச் சின்னச் சம்பவங்கள் கதைக்களத்தை கனமாக்கத் தவறிவிட்டதுபோல் தோன்றுகிறது. குணசீலனின் கதாபாத்திரத்தின்மீது வாசகர்களிடையே ஓர் அணுக்கமான உறவை ஏற்படுத்த தவறிவிட்டதாகப்படுகிறது. குணசீலன் தன் பக்க நியாயங்களை எவ்வளவுதான் நியாயமாக முன்வைத்தாலும் முரண்பட்ட அவன் கதாபாத்திரம் அந்த நியாயங்களை எல்லாம் பின்தள்ளிவிடுகிறது.


குறியீடு:


பெரும்பாலும் கதாசிரியர்கள் சில விஷயங்களை நேரிடையாகச் சொல்லாமல் குறியீடாகச் சொல்வார்கள். ஒன்றைப் புலப்புடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கூறு குறியீடாகும். அவ்வகையில், இக்கதையின் தலைப்பே ஒரு குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இறுதியில் வரும்,
ஒரு வழியாகக் கரிசனப் பூமியில் விமோசனம் கிடைத்துவிட்டது’, என்ற வரிகளும்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’, என்று இருமுறை வரும் வரிகளும்
இனி எது நடக்கப்போகின்றதோ அது நன்றாகவே நடக்கும் என்ற வரிகளும்
ஒவ்வொரு நாளும் கடைசிக் காட்சியாக இரண்டு மீட்டர் மணிலா கயிறும் எனக்குச் சலாம் போட்டுவிட்டுச் செல்கிறது போன்ற வரிகளும் இக்கதையில் ஒரு வகை குறியீடுகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.


நிறைவாக, சிங்கப்பூர்ச் சூழலில் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் ஒரு சவாலான கதைக்கருவை வைத்துக் கதை பின்னி, அதை நமக்குள் கடத்திச் செல்ல பெரிதும் முயன்றுள்ளார் கதாசிரியிர் முஹைதீன். அதில் ஓரளவும் வெற்றியும் பெற்றுள்ளார். நம் நிழல்கூட ஒளி இருந்தால்தான் நம் அருகே துணை நிற்கும் போன்ற வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வெள்ளைச் சுவரில் என் கடந்தகால வாழ்க்கையின் பிம்பங்களைக் கண்டுகொண்டே இருக்கிறேன் என்கின்ற காட்சிப் படிமமும் நம் கண்முன்னே மீண்டும் கதையைத் தொடக்கத்திலிருந்து கொண்டு வந்து நிறுத்துகிறது. நல்ல கதை. படிப்பினைத் தரும் கதை. இளையோர்களுக்கு அறிவூட்டி வழிகாட்டும் கதை. பெற்றோர்களுக்கு எச்சரிக்கைக் கொடுக்கும் கதை. நம் வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.


வாழ்த்துகள் முஹைதீன் சார்.


அன்புடன் எம். சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக