திங்கள், 17 ஏப்ரல், 2017

மக்கள் ஓசை கட்டுரைத்தொடர் - கவிதைகளுடன் உரையாடல் 9



(9)
மேடை நடிகன்
ஒரு சித்திரக்காரனின் கலை நுட்பத்தோடு
அவனது பேச்சு
பேசும்போதெல்லாம் தேவைக்கேற்ற
சாயம் பூசிய முக மூடியோடு பேசுவான்

கேட்பவரின் காதில் ரீங்காரமிடும்
அவனது மொழியின் நளினம்

தன் பொய் முகம்
தெரியாமல் இருக்க
சட்டென மாற்றி கொள்வான்
அதற்கேற்ற சாயத்தை

யாரும் அறியும் முன்
பூசிய சாயத்தை லாவகமாய் அழித்து விட்டுப்
புன்னகையை உதிர்க்கும் அவனுக்கும்
தன் கைக்குலுக்களில் மறைத்து கொள்ளும்
முன் நிற்பவனின்
கயம புன்னகையின் அர்த்தம் புரிந்தும்
மீண்டும் மீண்டும்
பொய் முகம் கொண்டு
புன்னகைக்கும் அவனுக்கு
ஒரே நம்பிக்கை அது மட்டும் தான்

உங்கள் முன் கைக்குலுக்கிச் சிரிக்கும் அவனுக்கு
ஒரு புன்னகையைக் காட்டி விட்டுப் போங்கள்


கடைசியில் அது மட்டுமாவது
மிச்சமாகட்டும்

@@@@@@@@@@


எல்லாம் நாடகமேடை. இதில் எங்கும் நடிகர் கூட்டம். உருவம் தெரிவதுபோல அவர் உள்ளம் தெரிவது இல்லை என ஜெமினி கணேசன் நடித்த ஒரு படத்தில் இப்படியாக ஓரு பாடல் தொடங்கும். உலக வாழ்க்கையின் இந்த இருப்பை அன்று அப்பாடல்வழி பதிவு செய்திருப்பினும் இன்றும் நமக்கு அவ்வரிகள் பொருத்தமானதாகவே இருக்கின்றன என்றால் அது மிகைப்படாது. பொய்முகங்களுக்கு நடுவில்தான் தினமும் நம்மைச் சுதாகரித்துக்கொண்டு நடக்கவேண்டியுள்ளது என்ற கருத்தினையே இக்கவிதை வலியுறுத்துகிறது.


முகமூடிக்காரர்கள் தங்களின் இருத்தலை எப்படியெல்லாம் நிலைநாட்டிக் கொள்கிறார்கள் என்பதை,


ஒரு சித்திரக்காரனின் கலை நுட்பத்தோடு / அவனது பேச்சு / பேசும்போதெல்லாம்  / தேவைக்கேற்ற சாயம் பூசிய / முக மூடியோடு பேசுவான் /


என்ற வரிகளின் மூலம் அடையாளப்படுத்துகிறார் கவிஞர். 


ஓவியனின் கலைநுட்பமானது அலாதியானது. அவனின் அந்த மாய வண்ணங்களோடு நாம் பயணிப்பது போலவே அந்த வண்ணங்கள் நமக்குள்ளும் ஊருறுவி நமக்குள் வேறொன்றாக உருமாறி நின்று, நமக்கான ஒரு புரிதலை வழங்கும் தன்மை கொண்டதாக மாறி நிற்கும். அந்த மாய சக்தியைப் போன்றே பொய்யர்களின் பேச்சில் தெறித்துவிழும் நளினமும் சுவையும் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பதை நிறுவி விடும் தன்மையில் இருக்கும்.


அரசியல், சமூகம் என அனைத்திலும் இந்தப் பொய்யர்களின் தாக்கத்தால் அவர்கள் சார்ந்த அந்தச் சமூகம்தான் தனக்கான அனைத்தையும் இழந்து நிற்கும் சூழலும் இருக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கூற்றெல்லாம் இந்தக் காலத்தில் எடுபடுவதில்லை என்பதையும் இங்குப் பதிவு செய்தல் வேண்டும் என்ற அளவுக்கு இன்று நம் சமூகத்தில் பொய்முகக்காரர்களின் வாழ்வியல் வளர்ச்சியும் அவர்களின் எண்ணிக்கையும் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இப்படி வாழ்ந்தால்தான் இந்த வாழ்க்கையில் தான் பேர்போட முடியும் என்ற தவறான ஓர் அபிப்பிராயம் இந்த வாழ்வியல் சூழல் அவர்களுக்கு உணர்த்தியிருக்கக்கூடும்.


ஒரு பொய்யை மறைப்பதற்காகப் பல பொய்களைக் கூறுவதுபோலத்தான் இதுவும். ஒரு முகம் கலைய உடனேயே அதற்கு ஈடாக இன்னொரு புதிய முகத்துக்குள் தன்னைப் புதைத்துக்கொள்ள இவர்கள் தயங்குவதில்லை. ஒன்றின் வேஷம் கலைந்தாலும் இன்னொரு வேஷம் அவர்களால உடனடியாக உருவாக்கப்பட்டு விடுகிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல வேட்கையில் சமூகம் சார்ந்தே பொதுவில் சிந்திப்பதுபோலவே அனைத்துக் காரியங்களையும் செயலாற்றித் தன்னை மட்டும் நிலைநிறுத்திக்கொள்வர் என்பதை,


தன் பொய் முகம் / தெரியாமல் இருக்க/ சட்டென மாற்றி கொள்வான் / அதற்கேற்ற சாயத்தை / யாரும் அறியும் முன்/ எனவும்,
பூசிய சாயத்தை லாவகமாய் அழித்து விட்டுப் / புன்னகையை உதிர்க்கும் அவனுக்கும் / தன் கைக்குலுக்களில் மறைத்து கொள்ளும் /


என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார் எம். கருணாகரன்.


மேலும் இத்தகையோர்கள் வாழ்வில் உச்சத்தைத் தொட்டவர்போல் தோற்றம் அளித்தாலும், நிஜ வாழ்க்கையின் தர்மப்படி அவர்கள் ஏதாவது ஒரு வகையில் எங்காவது தோற்றுத்தான் நிற்பார்கள். அது அவர்களுக்கும் நிகழலாம் அல்லது அவர் சார்ந்த சந்ததியினருக்குக் கூட நிகழலாம். எதுவாக இருந்தாலும் வாழும் காலத்திலேயே அவரவர் விதைத்ததை, அவரவர்களே அறுவடை செய்யும் ஒரு இக்கட்டான இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.


நிலையாமையே இந்த வாழ்க்கையின் நிலை. இந்தப் புரிதல் இருந்தால் அனைவரின் வாழ்வும் வளம்பெறும் வகையில் அனைவரின் செயல்பாடுகளும் அமையும். இந்த மனித வாழ்க்கையே நிலையானதாக இல்லாமல் காற்றடைத்த ஒரு பையாகத்தான் இருக்கிறது. இதனையே சித்தர் ஒருவர்,


காயமே இது பொய்யடா – வெறும்
காற்றடித்த பையடா


எனப் பாடியுள்ளார்.


வெறும் பொய்யுரைகளும் புகழ்மாலைகளும் வஞ்சப்புகழ்ச்சிகளாகவே இங்கு மலிந்து கிடக்கின்றன. எங்கும் பொய்மையின் ஆளுமை நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தலைவனுக்குப் பின்னால் போகும் ஒரு கூட்டமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்தத் தலைவனை மகிழ்ச்சிபடுத்தும் வெறும் வெட்டுவேட்டாக நாம் அந்த பொய்மைக்குள் அடங்கிப்போகிறோம் என்பதையும் மறைபொருளாகக் கவிதை சுட்டுகிறது.


புன்னகை உன்னதமானது. அந்த உன்னதம் கொடுக்கும் இன்பம் அலாதியானது. இந்த வாழ்க்கையில் புன்னகையின் அந்த உன்னதத்தை மறைத்துக்கொண்டு, மின்னலைப்போல் தோன்றும் ஒரு வெற்றுச் சிரிப்பை மட்டும் உதிர்த்துப்போக அனைவரும் பழகியிருக்கிறோம்.


கலைகளில் சிறந்த கலை வாழ்வதுதான் என்கிறார் நவீன ஓவிய உலகில் அனைவராலும் மாஸ்டர் என அழைக்கப்படும் ஓவியர் சந்ரு. வாழ்க்கை அழகானது. அதை அழகாக வாழப் பழகிக்கொள்வோம் என்றார் எழுத்தாளர் அகிலன். இப்படியாக, இந்த அழகான வாழ்வை அழகாக்கிக்கொண்டு வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இந்த மண்மீது கொட்டிக்கிடக்கிறது. மனமகிழ்வோடு நமக்கான வாழ்க்கையை வாழுவோம். மற்றவரையும் நம் புன்னகையால் மனம் மகிழ்வுகொள்ள வைப்போம். உண்மையாக இருப்போம். உண்மையாக உழைப்போம். உண்மையாக வாழுவோம். இந்த இயற்கை நம்மை வாழவைக்கும்.


தான் உணர்ந்த விஷயத்தைப் பிறிதொரு மனிதனுக்குக் கடத்தும்போது அவனுக்குள் அது அனுபவமாக மாறும். அந்த அனுபவத்தில் இருந்து அவன் பெற்றுக்கொண்டவை இந்த வாழ்க்கையின் ஏதாவது ஒரு புரிதலை அவனுக்குள் ஏற்படுத்தும். எம். கருணாகரன் தன் எழுத்தின் மூலம் தன் உணர்வுகளை இன்னொருவருக்குள் கடத்தும் முயற்சியின் வெளிப்பாடே இதுபோன்ற கவிதைகளாகின்றன.



-    தொடரும்...........  

(நன்றி மக்கள் ஓசை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக