செவ்வாய், 28 மார்ச், 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் உரையாடல் 6




(6)

கடவுளின் காட்சி


ஒவ்வொரு கணத்திலும் இடர்படுத்திக்கொண்டிருப்பதைக்
கடந்து செல்லும் வலிமையற்று
காத்திருக்கும் அத்தருணத்திலும்
அசைக்க இயலாத நம்பிக்கை உணர்வை
ஏற்றி வைக்கும்
உன் வார்த்தைகளின் சக்தி



எனக்கானது என்று
மனசுக்குள் நிறைத்துக்கொண்டு
ஒட்டியிருக்கும்
இந்த உயிரின் தவிப்பை
உன் பாதங்களில் வைத்து முத்தமிடுகிறேன்



காத்தருள்வதும்
கண்டுகொள்ளாமல் போவதும்
உன் விருப்பம்



கடவுள் எங்கும் இருக்கலாம்


@@@@@@@@


நம் தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் எப்போதும் ஒரு குறிக்கோளையோ அல்லது ஒரு நோக்கத்தையோ அடிப்படையாகக்கொண்டவையாகும். நம் முன்னோர்கள் இலக்கியம் என்பது உயர்ந்த ஒரு நோக்கத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும் எனக் கூறுவர். மக்களின் உணர்வுகளைச் செம்மைப்படுத்தி, மென்மைப்படுத்தி, நுண்ணிய உணர்வுகளை அவர்களுக்குள்ளே வளர வைத்து அவர்களைப் பண்படுத்துவதையே இலக்கியத்தின் தலையாய நோக்கமாக இருந்து வந்தது. கலை வாழ்க்கைக்காக என்பதே நமது இலக்கிய மரபாகும். அதன் நோக்கில்தான் நமது சங்க இலக்கியம் உட்பட இலக்கியங்கள் தோன்றலாயின. 


ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களுக்கு எது தேவை என படைப்பாளன் நினைக்கின்றானோ அதுவே அவனின் படைப்பின் பாடுபொருளாக அமைந்திருப்பதை நமது இலக்கியங்களின் மூலம் சுட்டமுடிகிறது. ஆனால், கலை கலைக்காக என்பது மேலை நாட்டவர்களின் வாதமாகும். அதற்கேற்றார்போல் அவர்கள் இலக்கியம் தொடர்பாக பல கோட்பாடுகளையும் விமர்சனப் பார்வைகளையும் முன் வைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் கீழ்த்திசை நாடுகளுக்கு அவர்களின் வருகையானது ஒரு மாபெரும்  இலக்கியத் தாக்கத்தை நமது படைப்புகளிலும் ஏற்படுத்தியது. நமது உயரிய மரபின் நோக்கங்களை நாம் பின்தள்ளிவிட்டு மேலைநாட்டவர்களின் இலக்கியக் கோட்பாடுகளை முன் வைத்து, அவர்களைப் பின்பற்றி எழுதத் தொடங்கினோம். பாரதியின் வசனகவிதையிலிருந்து இன்றைய நவீன படைப்புகள்வரை தொடரும் நிலை இதுதான்.


இயற்கையோடு இயைந்து, வளர்ந்து, வாழ்ந்த இனம் தமிழினம். வாழ்வியலுக்காகப் படைப்பிலக்கியத்தை உருவாக்கிய இனம் தமிழினம். அதனால்தான் ஆண்டுக்கொருமுறை வேளாண்மைக்கு உதவும் சூரியனுக்கும், மாட்டுக்கும் பொங்கல் வைத்து தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் ஒரு வாழ்வியல் முறையை உருவாக்கினான். உறவுகளோடு சங்கமிக்க காணு பொங்கலை உருவாக்கினான். இப்படியாக இயற்கையோடும் உறவுகளோடும் வாழ்வின் உயரிய நாகரிகத்தைப் படிப்படியாக வளர்த்துக்கொண்ட இனம் தமிழினம். அந்த தமிழினத்தின் இன்றைய வாழ்வியல் நிலை என்ன? அவன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான்? இனியும் அவன் எப்படி தன் எதிர்கால சவால்களை எதிர்கொள்வான் என்பதெல்லாம் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.


அந்தத் தமிழனின் ஒரு குரலாக அதுவும் மலேசியத் தமிழனின் ஒரு வாழ்வியல் குரலாகத்தான் எம்.கருணாகரனின், கடவுளின் காட்சி என்ற கவிதையை என்னால் அணுகமுடிகிறது. இக்கவிதை ஒரு தனிமனித உணர்வாகவும் அல்லது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வாகவும் நாம் பார்க்கலாம்.


ஒவ்வொரு கணத்திலும் இடர்படுத்திக்கொண்டிருப்பதைக் / கடந்து செல்லும் வலிமையற்று /காத்திருக்கும் அத்தருணத்திலும் / அசைக்க இயலாத / நம்பிக்கை உணர்வை / ஏற்றி வைக்கும் /உன் வார்த்தைகளின் சக்தி /


எனும் வரிகளில் ஒரு தனிமனிதனின் கடைசித்துளி நம்பிக்கையாக அவன் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றுதான் அவனுக்குக் கைக்கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. 


எப்பேர்பட்ட இன்னல்களிலும் தன்னை ஏதோ ஒரு சக்தி காத்தருளும் என்ற நம்பிக்கையை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இந்தச் சக்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்குள் வெவ்வேறாக இருந்துகொண்டு அவனை இயக்கிக் கொண்டிருப்பவை. எப்படிக் காற்றை நம்மால் காட்ட இயலாதோ அதுபோல இந்தச் சக்தியையையும் காட்ட இயலாது. ஆனால் காற்றை உணர முடியும். அதுபோல இச்சக்தியையும் அவரவர் தன் நம்பிக்கைக்கு ஏற்றவாறு உணரமுடியும். இந்தச் சக்தியானதைச் சிலர் கடவுகளாகப் பார்க்கின்றனர். சிலர் தெய்வங்களாகப் பார்க்கின்றனர். இன்னும் சிலர் கடவுள் நம்பிக்கை இல்லாமலும் தெய்வ நம்பிக்கை இல்லாமலும் அச்சக்தியை நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்று என்ற நிலையிலாவது வைத்திருப்பார்கள். அது இப்பிரபஞ்சத்தின் சக்கியாகக் கூட இருக்கலாம். இப்பிரபஞ்சம் நாம் அறியா பல கோடி விஷயங்களைத் தன்னக்தே கொண்டதாகும். அப்படிப்பட்ட ஏதோ ஒரு சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயங்கிக் கொண்டு அவனின் கடைசி நம்பிக்கையாக இருந்து அவனை இறுதிவரை இயக்கிக் கொண்டிருப்பதை இவ்வரிகள் சுட்டுகின்றன.    

                        

-        தொடரும்         (மக்கள் ஓசை  - 260317)



(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக