ஞாயிறு, 8 மே, 2016

இரவின் கனவு

இரவின் கனவு

உங்களைப் போலத்தான் நானும்
ஒவ்வொரு இரவும்
கனவு கண்டுகொண்டிருக்கிறேன்

காற்றில் தவழ்ந்த
வண்ணத்துப் பூச்சியின்
சிறகு ஒன்று
எனக்கான கவிதையாய்
என் தாளின்மீது வந்தமர்ந்து
என்னைப் பார்த்து புன்னகைத்துச்சென்றது

சிதறிக் கிடந்த எழுத்துகள்
ஒவ்வொன்றும்
தன்னைத்தானே
ஒழுங்கிப்படுத்திக்கொண்டு
தனக்கான சொற்களுக்குள்
அமர்ந்துகொண்டு
கவிதை எழுதத் தொடங்கின

உள்ளுக்குள் முடங்கிக்கிடந்த
மனம்
சிறகு விரித்துப் பறக்க
கொமாக்களும் முற்றுப்புள்ளிகளும்
சிறைக் கம்பிகளாய் நீளத் துடித்து
எனக்கான எழுத்துகளைக்
கைவிலங்கிட்டுச் சென்றன

உங்களைப்போலத்தான் நானும்
ஒவ்வொரு இரவும்
கனவு கண்டுகொண்டிருக்கிறேன்


- எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக