புதன், 10 செப்டம்பர், 2014

துளிப் பாக்கள்


குப்பைகளை அள்ளுகிறாள் குப்பைக்காரி
மூக்கைப்பிடித்து நடக்கிறாள்
குப்பைகளைக் கொட்டியவள்

@@@@@@@

ஆசைப்படும்போது கிடைத்ததில்லை
கிடைத்தபோது 
ஆசை இல்லை

@@@@@@@@@

நிமிர்ந்து நிற்கின்றன
ஆர்க்கிட் பூக்கள்
தேசிய தினம்

@@@@@@@@@

இலைகளற்ற காய்ந்த கிளையொன்றில்
இளைப்பாறுகிறது ஜோசியத்தை மறந்த
ஒற்றைக் கிளி

@@@@@@@@@

தூக்கத்தை மறந்து
கனவுகளைச் சேமித்துக்கொண்டிருக்கிறேன்
பிறிதொருநாளில் நீ வருவாய் என

@@@@@@@@@@

காலைப் பூக்களின் பனித்துளிகள்
ஒவ்வொன்றிலும்
பழைய நாட்கள்

@@@@@@@@@

நீலமாய் ஒரு கடல்
புலப்படவில்லை
அருகில் நிற்கும்போது

@@@@@@@@@@@@@

விடிந்தால் தீபாவளி
வீட்டைக் கழுவப்போகிறேன்
வரிசையாக எறும்புகள்

@@@@@@@@@@@@@

நாளை புதுவீட்டுக்குப் போகிறேன்
இந்த இரவில் தூங்க இயலாமல் தவிக்கிறேன்
வீட்டின் அழுகுரல்

@@@@@@@@@@

அழகிய மைனாக்கள்! அவற்றின் காதலில்
என் காதலுக்கான ஆயுதங்களைக்
கழற்றி வைத்துவிட்டேன்

@@@@@@@@@

நான் யார்? தேடிப்பார்க்கிறேன்
எங்கும் காணோம்
அமைதியில் ஆன்மா

@@@@@@@@@@@

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு
வாழை மரங்கள் வீட்டைச் சுற்றி
ஒரே குடும்பமாக

@@@@@@@@@@@@

பகல் முழுக்க கையில் விளக்குடன்
நடந்துகொண்டிருக்கிறார்
ஒரு கடவுள்

@@@@@@@@@@

வீட்டுக்கு வெளியே இரவின் குளிர்ச்சி
என்ன பயன்?
பகல் வெப்பத்தின் நீர்த்துளிகள்

@@@@@@@@@@@

வேர்களின் மலைமுகடுகளில்
பிள்ளையாரின் முகங்கள்
அரச மரங்கள்

@@@@@@@@@@

நிலாவே ! எங்கள் அம்மாக்கள்
உன்னைத்தான் கைகாட்டி சோறு ஊட்டினார்கள்
போட்டிக்குழந்தை நீ

@@@@@@@@@@@@

வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கிறேன்
தொலைந்துவிட்டன
என் நினைவுச் சுவடுகள்

@@@@@@@@@@@@@

நினைவைத் தொட்டுப் பார்க்கிறது
உன்னோடு நனைந்த அந்தப் பொழுது
தூரமாய் ஒரு மழைச்சாறல்

@@@@@@@@@@@@


இதயத்தின் பூ ஒன்று
கசங்கிப்போனது
காகிதப் பூவாய்
பார்க்காமல் போன உன் பார்வையால்

@@@@@@@@@@@@

கவிதை சொல்ல வந்தேன்
காதல் மௌனமாகி நின்றது
வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு

@@@@@@@@@@@@@

நெஞ்சத்தைக் கிள்ளாமல்
நெஞ்சைத் தொட்டுச் சொல்
நெஞ்சோரம் நின்ற காதலை

@@@@@@@@@@@@

ஒருநாள் 
என்றாவது ஒருநாள்
காதல் உன்னைத்தேடி வரும்

அந்த நாளிலாவது
என் கல்லறையின்மீது
ஒற்றை ரோஜாவை 
வைத்து விட்டுப் போ

@@@@@@@@@@@@@@



குடை பிடித்து
நீ நடந்து செல்லும் அழகில்
மயங்கிய மழைச்சாரல்கள்
உன்மீதும் பட்டுச் சிதறுகின்றன
வெள்ளிக் காசுகளாய்

@@@@@@@@@@@@@

மௌனம்
அது உனக்கு மட்டும் சொந்தமல்ல
அது எனக்கும் சொந்தமாகலாம்

கொஞ்சம் புரிந்துகொள்
என் தேவதையே

இதயம்
அது உனக்கு மட்டுமல்ல
எனக்கும்தான்

@@@@@@@@@@


மனம் சிணுங்குகிறது
வானம் சில்லிடுகிறது
பூமி சிந்துகிறது

@@@@@@@@@@

புதியவன் பூத்தான்
புத்தனாய்
புதிய மனங்களைத் துவைத்து

@@@@@@@@@@@@@@@

உன் விழிகள்
யாரைத் தேடுகின்றன?
நான்தான்
உன் விழிக்குள்ளேயே இருக்கிறேனே!
ஓ......
உன் இமைகள்
என்னை மறைத்திருக்கின்றன
மறந்திடாமல் நாளைக்கே
டிரேடிங் பண்ணிவிடு

@@@@@@@@@@@@@@

பம்பரமாய்ச் சுற்றுகிறேன் நான்
என்னைச் சுற்றி எழும்
ஒளியலை முழுவதுமாய்
நீயே நிறைந்திருக்கிறாய்

@@@@@@@@@@@@@


கடலில் மூழ்கியிருக்கும் கற்கள்
யாரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை
அதுபோல
உன் இதயக்கடலில் மூழ்கியிருக்கும்
நானும் உனக்குப் புலப்படவில்லை

அதனால்தான் என்னவோ
என்னைத் தூக்கியெறிந்து விட்டாய்
வாழைப்பழத் தோலைப்போல

@@@@@@@@@@@@



மின்மினிப் பூச்சிகள்
அவைகளின் மேல் வண்ணத்தைக் கொட்டி
மின்சாரத்தைக் கொடுத்தது யார்?

@@@@@@@@@@

ஆண் பெண் உணர்ச்சிப் பிறழ்வுகள்
ஒன்றை ஒன்று சந்தித்து 
கட்டியணைத்து 
மீட்டெடுத்துக் கொள்கின்றன 
பார்க்காமல் போன காதலை

@@@@@@@@@@@@@@

நினைவின் ஓரமாக நின்று கொண்டு
கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்
என்னைக் காணவில்லை


@@@@@@@@@@@@@@@@@@@@@@@


      கனவின் ஆட்டங்கள்
      இன்றோடு நிறைவு பெறுகின்றன
      ஒளியாய் ஒளிர்கிறேன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


      தூரமாய்ச் சென்றவள்
      தாய்மையாய் அழைக்கின்றாள்
      தாயில்லாப் பிள்ளையாய் நான்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



என்னுடைய உலகம் எனக்கானது
   உனக்கு என்ன வேலை இங்கு
   வானம் நிலவைக் கோபித்துக்கொண்டது
   பயத்தில் விண்மீன்கள்
   அமைதியில் கதிரவன்
  
   புன்னகையுடன் கடவுள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



வாழும் இடங்களில்
தங்களை
நிலைநிறுத்திக்கொள்ளாத
தமிழினம்

ஒரு வரலாற்று ஏடு
காற்றில் அசைகிறது

@@@@@@@@@@@@@@@@@@@@


செய்நன்றி மறவாதே
என்றார் ஆசிரியர்
மறக்காமல்
அவர் பெண்ணையே காதலித்தேன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சாதிகள் இல்லையடி பாப்பா
என
ஒரு மேடையில் முழங்கியவன்
என் பிள்ளைகளை
என் சாதிக்குள்ளேயேதான்
கட்டிக்கொடுப்பேன்
என்கிறான்
இன்னொரு மேடையில்


@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆம்.
பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு

இது சுதந்திர நாடு
யாரும் எதைப்பற்றியும் பேசலாம்
ஒரு நாட்டின் பிரகடணம்

போகிறப் போக்கில்
ஒருவன்
சொல்லிவிட்டுப் போனான்
பேசும்வரை நீ சுதந்திரமானவன்தான்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



வானம் சிரித்தது
எனக்கு வியர்த்தது
வானம் அழுதது
எனக்கு நடுங்கியது

@@@@@@@@@@@@@@@@@@@



பூமிக்கூரையில் சில ஓட்டைகள்
ஒட்டடைகள் நினைவின் கூடுகளாக
மௌன மூட்டைக்குள் நான்