செவ்வாய், 29 மே, 2012

சிறுகதை - அட்டைப்பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும்

Death Railway


சிறுகதை

அட்டைப்பெட்டி படுக்கையும்
வெள்ளைத்தாடி தாத்தாவும்
 – எம்.சேகர்

வானம் அப்போதுதான் தலையோடு குளித்துவிட்டு வந்து கூந்தலைக் காய உலர்த்தி வைக்கும் பருவப்பெண் போல் புதிதாய்ப் படர்ந்திருந்தது. கருமை சிறிதும் கலவாத வெண்மண்டலங்களும் தூய நீலமுமாய் மேகங்கள் பின்னலிட்ட பள்ளிப்பெண்களின் கூந்தல்களைக் கோர்த்துக் கட்டியதாக நீண்டுக் கொண்டிருந்தது. இரவுமழையின் ஈரம், காற்று மண்டலத்தில் இன்னமும் கரையைத் தொடும் தொடர் அலையாக அலைந்து கொண்டிருந்தது.

வேலைக்குக் கிளம்பும் போதே,
மழை திரும்பவும் வர்ற மாறி இருக்கு...கொட எடுத்துக்கிட்டு போங்க
என உமா சொன்னது நினைவின் நரம்பு அலைகளில் அசைந்தது. கூடவே,
இயற்கை அன்னை தந்த பெரிய ஷவரிது
என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளும் எங்கிருந்தோ வந்து நினைவுக்குள் ஒட்டிக்கொண்டன. வீட்டிலிருந்து பத்துப் பதினைந்து நிமிட நடைக்குப் பின் சைனிஸ் கார்டனில் எம்.ஆர்.டி எடுத்துதான் ஜோகூன் க்கு வரவேண்டும். அங்கிருந்து இரண்டு ஐந்து இரண்டு பஸ் எடுத்து பக்கத்தில் இருக்கின்ற கெண்டீனுக்கு வரவேண்டியிருக்கிறது. வீட்டிலிருந்து ஏழு மணிக்குக் கிளம்பினால் ஏழரை மணிக்கெல்லாம் கெண்டீனுக்கு வந்திடலாம். ஆனால் எம்.ஆர்.டி சேவை தொடங்குவதற்கு முன்னால் வீட்டிலிருந்து ஐந்தே முக்காலுக்கெல்லாம் கிளம்பினால்தான் ஏழரை மணிக்கு கெண்டீனை அடையமுடியும். ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோயில் முன்னால் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில் எஸ்.எம்.ஆர்.டி பஸ், ஒன்னு எட்டு ஏழு எடுத்து பூன்லே இன்டெர்சேஞ் வந்து அங்கிருந்து எஸ்.பி.எஸ் பஸ், இரண்டு ஐந்து இரண்டு எடுத்து வரவேண்டும்.

ஏறக்குறைய பத்து உணவுக்கடைகளைக் கொண்டிருக்கும் அந்த கெண்டீனில் ஓர் இந்திய முஸ்லிம் கடையும் ஒரு மலாய்க்கடையும் தவிர்த்து மற்றவை சீனர்களின் கடைகள். பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் இப்படி அமைவது வழக்கமாகிப் போனது. ஆனால் எங்குப் போனாலும் நமக்கென ஏதாவது ஒரு கடை இருப்பது மனதுக்கு ஆறுதலான விஷயம்தான்.

 யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
ஐ.நா.சபையில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனின் பாடல் வரிகள், சொந்த நாடில்லாத தமிழனுக்கு ஒரு கூடுதல் போனஸ்.

தலையில் நீர் சிதறல்கள்.
விட்டு விட்டு சிணுங்கும் சிறு குழந்தையைப் போல் வானம் லேசாகத் தூற்றலிட ஆரம்பித்தது.
தெருவைக் கடக்கும் போது வழக்கமாகக் கண்ணில் படும் வெள்ளைத் தாடி தாத்தாவை இன்று காணவில்லை. பழுப்பேறிய கருமையான மேகங்களாகத் தரையோடு தரையாகக் கிடந்தது அவரின் அட்டைப் பெட்டிப் படுக்கை. அவருக்கு எல்லாமே அங்கேதான். கெண்டீனில் இருப்பார் என்ற அவர் நினைப்போடு நடந்தேன்.

சர்வர் சுந்தரம் நாகேஷைப் போன்ற ஒல்லியான உடல் அமைப்பு. அதே சுறுசுறுப்பு. நடையில் எப்போதும் ஒரு வேகம் இருக்கும். உயர்ந்த மலைப்பகுதியின் வெண்பனிமேகங்களைப் போல் முகம் முழுக்க வெள்ளைத்தாடி கட்டுக்கடங்காத காட்டாறு போல் பரவியிருக்கும். வெண்தாடி வேந்தர் பெரியார்தான் நினைவில் நிழலாடுவார். எப்போதும் மேலே ஒரு சாயம்போன காற்சட்டையும் அரைக்கால் சிலுவாருமாய் இருப்பார். காலையிலேயே இரண்டு ரொட்டி பொரட்டாவும், இரண்டு கிளாஸ் கொக்கோ கோலாவுடனும் மேசையில் இருப்பார்.

தாத்தா காலையிலேயே ரெண்டு கிளாஸ் கொக்கோ கோலா குடிக்கிறாரு........ கவலையில்லாத மனுஷ’,
காலையில் அந்த கண்டீனுக்கு பசியாற வரும் நகைகடை சேம்.
வயசாயிடுச்சி சேம்........லெட் ஹிம் என்ஜோய்.......இனிமேல் என்னா இருக்கு?’
சேமுடன் வரும் நண்பர் ஜோன்.
போஸ் ரொம்ப நல்லவன் ஜோன், டெய்லியா பத்து வெள்ளி சாப்பாட்டுக்கு கொடுக்குறான்
சேம் சும்மாவா கொடுக்குறான், ராத்திரி முழுக்க ஜாகா பார்க்குறாரு, கம்பெனிய சுத்தம் பண்றாரு, அவனுங்க காடி, லோரி, போர்க் லிப்ட் எல்லா கழுவுறாரு, டாய்லெட் கழுவுறாரு, ஆபிஸ்ல வேல செய்றவங்களுக்கு கோப்பி, டீ, தண்ணி சாப்பாடெல்லாம் வாங்கி கொடுக்குறாரு

அப்படியே எங்கள் மேசை அருகே வருவார். சேவாக்கு வீடு கிடைக்குமா எனக் கேட்பார். இங்க வசதி கொறவா இருக்கு என்பார். காச பத்தியெல்லாம் கவலப்படாதீங்க. மொதலாளி எல்லாம் கொடுப்பாரு என்பார். அவர் முதன் முதலில் என்னிடம் பேசியதை இங்கு சொல்லியே ஆகவேண்டும். அவர் கம்பெனியைத் தாண்டிதான் நான் என் கம்பெனிக்குச் செல்லவேண்டும். ஒரு நாள் என்னை இடைமறித்து,
பவானிய தெரியுமா.....அக்கா மவ இங்கதான் வேலை செய்யுதுன்னு சொன்னாங்க,
உங்க ஆபிஸ்லயா வேலை செய்யுது?’
இல்ல
என்றேன்.
நல்லா செவப்பா உயரமா இருக்குங்க
இல்ல என்னோட ஆபிஸ்ல தமிழ் பிள்ளைங்க இல்ல
பாத்தா சொல்லுங்க. உங்க மாமா உங்கள பாக்குனுனு சொன்னாருனு
நான் என்ன சொல்லுவது எனத் தெரியாமல்,
பாத்தா சொல்றேன்
எனச்சொல்லி நடந்து விட்டேன்.

அன்றிலிருந்து என்னைப் பார்க்கும் போதெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார். அவரின் அக்கா மக பவானியப்பத்தி கேட்பார். சேவா வீடு கிடைக்குமா எனக் கேட்பார். காலையில் பசியாறப் போகும்போதும், மதிய உணவு சாப்பிடப் போகும்போதும் இதைப்பத்திதான் கேட்பார். அப்போதெல்லாம் அவர் மனம் கோணாமல் பதில் சொல்லியிருக்கிறேன். இல்லை இல்லை சமாளித்திருக்கிறேன்.

நானும், கூட வேல செய்ற கணேஷும் சாப்பிடும் பல சமயங்களில் கேட்காமலேயே கொக்கோ கோலா வாங்கி மேசையில் வைத்து உங்களுக்குதான் வாங்குனே, குடிங்க என கணேஷைப் பார்த்து சொல்வார். கணேஷ் என்னைப் பார்க்க நான் அவனைப் பார்ப்பேன். இது போன்ற வேளைகளில் கணேஷ் ரொம்பவும் சங்கஜப் படுவான். பல சமயங்களில் அவர் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கணேஷ் விரும்புவான். கணேஷுக்கு ஆஸ்மா இருப்பதால் குளிர்பானங்களைத் தவிர்த்து விடுவான். எனவே எங்கள் மேசையில் பெருப்பாலும் நான் குடிக்கும் கொக்கோ கோலா மட்டும்தான் இருக்கும். இதை அந்த வெள்ளைத்தாடி தாத்தா கவனித்திருக்க வேண்டும். அவர் மனதில் ஏதோ தோன்றியிருக்கவேண்டும். இப்படி பல தடவை நடந்திருக்கிறது. கணேஷும் சொல்லுவான்,
தண்ணி இல்லாம சாப்பிடறத பாத்துட்டு, பையன்கிட்ட காசு இல்லனு நெனச்சி வாங்கிகொடுக்குறாரு போல இருக்கு
மெல்லியதாய் நன்றி தாத்தா என்பான்.
சேவாக்கு வூடு இருந்தா சொல்லுங்க
என ஆரம்பித்து விடுவார். கணேஷ் அமைதியாக இருப்பான். நான்தான் எதையாவது சொல்லி சமாளித்து விட்டு அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவோம்.

ஒருநாள் அலுவல் முடிந்த பிறகு கண்டீனுக்குச் சென்றிருந்தோம். வெங்காயம் போட்ட முட்டை ரொட்டி ஆளுக்கொன்று ஆர்டர் பண்ணிவிட்டு உட்காரும்போது வெள்ளைத்தாடி தாத்தாவும் வந்துவிட்டார். வழக்கமான பேச்சுக்குப்பிறகு நான்தான் அவரைப்பற்றி ஆர்வமாய்க் கேட்டேன்.

சப்பான் கார காலத்துல நாங்க ஈப்போவுல இருந்தோம், லோரில வந்து அப்பா அம்மா அண்ணன் அக்கா எல்லாத்தையும் சயாமுக்கு ரயில் பாத போட புடிச்சிகிட்டு போயிட்டானுங்க அந்த சப்பான் காரனுங்க. நா அழுதுகிட்டு அப்பா அம்மா பின்னால ஒடுன. என்னைய பூட்ஸ் காலால எட்டி ஒதைச்சி கீழ தள்ளிட்டு போயிட்டானுங்க. நா ரோட்டுல அழுதுகிட்டு இருந்த. என்ன மாறி பல புள்ளைங்க ரோட்டுல அவுங்க அப்பா அம்மா இல்லாம அழுவுதுங்க. நா எங்க வூட்டுக்கு போயி ஒரு மூலைல ஒக்காந்து அழுதுகிட்டு இருந்த. எவ்வளவு நேர அழுதன்னு தெரில. அப்புற பசிச்சிச்சு. நேத்து ராத்தரி அம்மா அவிச்சி வச்சு மரவள்ளி கெலங்க எடுத்து சாப்பிட்ட.

இதைச் சொல்லும் போதே அவர் விழிகள் குளங்களாயின. விரல்களால் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டார். அவரின் விழி கலக்கம் என் விழிகளையும் கொஞ்சம் ஈரமாக்கியது. இவரிடம் இதை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. மற்றவர் பார்வையில் பைத்தியக்காரன் போல தெரியும் மனுஷனுக்குள் ஒரு தலைமுறையின் சரித்திரம் இத்தனை வேதனைகளுக்குள் புதைந்து கிடக்கிறதே என மனம் தவித்தது. ஆரம்ப நாட்களில் அவரை லூசு என நினைத்தது, அவரைத் தவிர்த்தது வேதனையாக இருந்தது. மனிதனை ஒரு பார்வையில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கும் என்பதையும் அவர் பேச்சு எனக்கு உணர்த்தியது. அவரின் எண்ணங்களையும் மனவோட்டங்களையும் திசை திருப்ப,
மைலோ குடிக்கிறிங்களா... வாங்கிட்டு வரேன்
சிறிது யோசித்து,
மைலோ ஜஸ் வாங்கிட்டு வாங்க
என்றார்.
கணேஷைப் பார்த்தேன்.
எனக்கு ஒரு கோப்பி
என்றான்.
காப்பி கடைக்குச் சென்று,
மைலோ பெங் சத்து, கோப்பி சத்து, தெ ஓ பெங் சத்து
என்று ஆர்டர் கொடுத்து எடுத்துக்கொண்டு வந்தேன்.

எங்க எஸ்டேட்ல தொப்புளான்னு ஒருத்தரு டிராக்டர் ஓட்டிகிட்டு இருந்தாரு ... சப்பான்காரன்க அவர லோரி ஓட்ட சொல்லிட்டானுங்க.. அவனுங்க இருக்குற எடத்துக்குலா போயி சாப்பாட்டு சாமான்லா ஏத்திஎறக்கிட்ட வருவாரு.... எங்கப்பாவும் அவரும் ரொம்ப கூட்டாளி. வெள்ளக்காரன் இருக்கும்போது எஸ்டேட்ல சீனன்க லாலான் தண்ணிலா விப்பானுங்க. எங்கப்பா எப்போவு தொப்பளா கூடத்தான் தண்ணி அடிக்கப் போவாரு. அன்னைக்கு ராத்திரி முழுக்க வீட்ல சண்டையும் சத்தமுமாகத்தான் இருக்கும். அம்மாவுக்கு அடி வுளும், எங்களுக்கும் அடி வுளும். ஆனா விடியறதுக்குள்ள எப்போவும்மாறி அம்மாவும் அப்பாவும் வேலைக்கு கிளம்பிடுவாங்க. நாங்களும் அந்தக்குளுருல கூடவே கெளம்பிடுவோம். எங்க மாறி புள்ளைங்கதான் அப்பல்லா பால் மங்ககெல்லாம் தொடைச்சி இந்த ஒட்டுப்பாலு கட்டிபாலு எல்லாம் எடுப்போம். எடைக்கு ஏத்த மாரி காசு கொடுப்பாங்க....

மைலோ ஐஸை உறிஞ்சினார். அவர் பார்வை கண்டீனை ஒரு வட்டமடித்துவிட்டு மீண்டும் எங்களிடம் வந்தது.

தொப்புளானுக்கு யாரோ சொல்லிட்டாங்க.... உடனே வூட்டுக்கு வந்து, அன்னைக்கு ராத்தரியே என்னைய லோரில ஏத்திகிட்டு கெளம்பிட்டாரு.  தஞ்சோங் மாலிம், கோலாலம்பூரு, செரம்பானு, மூவாரு, பத்து பாஹாட், ஜொகூர்னு சப்பான்காரனுங்களுக்கு தேவையான சாமான்கள எல்லாம் ஏத்தி எறக்கி கடைசில சிங்கப்பூரு வந்துட்டோம். பாசீர் பாஞ்சாங்ல அஞ்சர கட்டையில இருந்த கம்பத்துல அவுங்க அக்கா வூட்டுல என்னய வுட்டுட்டு போயிட்டாரு. அவுங்களும் என்ன பாத்துகிட்டாங்க. அவுங்களுக்கு எட்டு புள்ளைங்க. அவுங்க பெரிய மகளத்தான் நா அக்கான்னு கூப்பிடுவ. கம்பத்த ஒடைச்சப்ப அவுங்க வெஸ்ட் கோஸ்ல பிளட் வூட்டுக்கு போயிட்டாங்க. மூனு ரூம் வூடுனால என்னய வேற எடம் பாத்துக்க சொல்லிட்டாங்க. அப்புறந்தான் மொதலாளிகிட்ட பேசி கம்பெனியிலேயே தங்க ஆரம்பிச்சிட்ட. முந்தி ஆயர் ராஜாவுல கம்பெனி இருந்திச்சி, அப்புற மாறி துவாசுக்கு வந்து இப்ப இங்க வந்திரிச்சி. அந்த அக்காவோட பொண்ணுதான் பவானி. இங்கதான் வேல செய்யுதுன்னு பாசீர் பாஞ்சாங்ல இருந்த மன்மதன பாத்தப்பா சொன்னாரு. அவரு இங்கதான் ஒரு கம்பெனில ஜாகாவா இருக்காரு’.

ஆமா, உங்களுக்கு குடுப்பம்?’

எனக்கு யாரு இல்ல. சயாமுக்கு போன அப்பா அம்மாவோட எங்குடும்ப என்னாச்சின்னு தெரில. என்ன இங்க விட்டுட்டு போன தொப்ளானு வரவே இல்ல. தகவலும் இல்ல. வெஸ்ட் கோஸ்ட்டுல இருந்த அக்கா வூடும் தொடர்பு இல்லாம போயிரிச்சி. வாழ்க்க இப்படியே ஒன்டியா ஓடிப்போச்சு. வயசும் ஆயிரிச்சி. அப்ப சரி நேரமாவுது. மொதலாளி வூட்டுக்கு கெளம்புவாரு.

Bayonet

எனச்சொல்லிவிட்டு ஈரம் காயாத விழிகளுடன் நடந்தார். அதன் பிறகு பார்க்கும் போதும் பேசும் போதும் அவர் ஒரு நடமாடும் சரித்திரமாகவே எனக்குள் ஒரு பிம்பமாகிப்போனார்.

இன்று கண்டீனிலும் அவரைக் காணவில்லை. அன்று மட்டுமல்ல தொடர்ந்தார்போல் ஒரு வாரமாக அவர் வரவில்லை. அலுவலகம் செல்லும் வழியில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் சுவரோரம் சாத்தப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டி படுக்கையும் இரண்டொரு நாள் இருந்து பின் காணாமல் போய்விட்டது. அவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் பைகளும் இல்லை. எங்கே போயிருப்பார்? கேள்விமட்டும் மனசுக்குள் வியாபித்து நின்றது. இந்தியன் முஸ்லிம் கடை முதலாளியின் மருமகன் கனியிடம் விசாரித்தேன்.

ஆமாண்ண, கொஞ்ச நாளா ஆள காணோம்
என்றார்.

நகைகடை சேமும், ஜோனும், கணேஷும் கூட
வெள்ளதாடி தாத்தாவ பாக்கமுடியலயே
எனக்கேட்டனர்.

வசந்தம் தொலைக்காட்சியின் நேற்றைய செய்தியில் முன்னுரைத்தது போல காலையிலேயே இடியும் மின்னலுடன் கூடிய மழை. காலை குளிரோடு ஞாயிற்றுக் கிழமையின் சோம்பலும் சேர்ந்து கொண்டு படுக்கையிலேயே கிடத்தியிருந்தது. ஈரச்சந்தைக்குச் சென்றிருந்த உமா கதவைத்திறக்கும் பழகிப்போன அந்தச் சத்தம். படுக்கையிலிருந்து எழுந்தேன். வாங்கி வந்திருந்த தமிழ் முரசும், ஸ்திரேய்ட்ஸ் டைம்ஸ்சும் மேசையில் கிடந்தன.

முரசுவைத் திறந்தேன். ஹவ்காங் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல். டெஸ்மண்ட், பிங் நேரடிப்போட்டி தலைப்புச் செய்தியாக இருந்தது. ஒரு பருந்து பார்வையோடு அடுத்த பக்கத்தைத் திருப்பினேன். மூன்றாம் பக்கத்தில் காணவில்லை என்று தலைப்பின்கீழ் வெள்ளைத்தாடி தாத்தாவின் ஷேவ் செய்யப்பட்ட புகைப்படம் கட்டமிடப்பட்டிருந்தது.


பின்குறிப்பு -
1. ஜாகா (மலாய் சொல்) - காவல் - பாதுகாப்பு
2. சேவா (மலாய் சொல்) - வாடகை வீடு
3. எஸ்டேட் - ரப்பர் தோட்டங்களைக் குறிக்கும்
4. லாலான் தண்ணி - சம்சு எனும் மதுவகை
5. மைலோ பெங் - மைலோ ஐஸ்
6. தே ஓ பெங் - பால் போடாத ஐஸ் டீ
7. ஒட்டுப்பால் - ரப்பர் மரப் பட்டைகளில் சீவும் பகுதிகளில் உறைந்திருக்கும் பால்.
8. கட்டிப்பால் - பால் மங்கில் (கின்னம்) தேங்கிக்கிடக்கும் உறைந்த பால்


-------------------------------------------------------------------

செவ்வாய், 15 மே, 2012

சின்னஞ்சிறு கவிதைகள்


சுடும் நாக்கு

எரியும் வார்த்தை

கருகும் மனசு


@@@@@@@@@@@@@@@@@@


சுடும் வெயில்

அமைதியான வானம்

குளத்தில் மீன்கள்



@@@@@@@@@@@@@@@@@

தோழியே

தோழியாய் மட்டும் இரு

நட்பாவது

வாழ்ந்துவிட்டுப் போகட்டும்


@@@@@@@@@@@@@@@@@



துப்பட்டாவை

தேசிய சின்னமாக்குங்கள்

கவிஞன் பிறக்கிறான்


@@@@@@@@@@@@@@@@@



நீல வானத்து நிலவாய்

சிரிக்குதடி உன் முகம்

மனசுக்குள்


@@@@@@@@@@@@@@@@@




மெட்டுக்குப் பாட்டு

தனிமையில்
 
கவிதை


@@@@@@@@@@@@@@@@@



நினைத்தேன்

தவித்தேன்

துடித்தேன்



மலைத்தேன்

மகிழ்ந்தேன்

உயிர்த்தேன்



சொல்தேன்

தமிழ்த்தேன்

அரும்தேன்



நின்தேன்

சுவைத்தேன்

தொலைந்தேன்


@@@@@@@@@@@@@@@


அடுக்குமாடி வீட்டு நிழல்

நம்பிக்கைகளை

கான்கிரீட் சுவருக்குள் புதைத்து

நாளையப் பொழுதை விரட்டியடிக்கிறது



கையறுநிலையும் து((தூ)க்கமும்

தலைவிரித்தாடுகிறது விலைவாசியைப்போல்

நம் சமூகத்தில்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





எனக்குள் நுழைந்தாய்

சுவாசமானாய்

நான் கவிஞனானேன்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



அட்டையாய் உறிஞ்சுகிறது

மாற்று மொழியாய் ஒன்று

வாழும் மொழி தமிழென

ஊமை சமூகம்



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@















திங்கள், 7 மே, 2012

சக்தி கொடு
சக்தி கொடு
சக்தி கொடு

கத்தி வேண்டாம்
கத்தி வேண்டாம்
கத்தி வேண்டாம்

புத்தி கொடு
புத்தி கொடு
புத்தி கொடு

வன்முறை வேண்டாம்
வன்முறை வேண்டாம்
வன்முறை வேண்டாம்
நீலமாய் விரியும் வானம்
நீங்கா நினைவுடன்
நீ

ஆழமாய் போகும் கடவுள்

வாக்கு சுத்த கடவுள்களை
நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்

ஒரே ஒரு மனிதனை
மட்டும்
என்னிடம் கொடுங்கள்

இங்கு எல்லாம் புனிதமாகும் 

ஞாயிறு, 6 மே, 2012





நான் பறந்துகொண்டிருக்கிறேன்

என்
மனசெல்லாம் சிறகுகள்
Tocllaraju Mountain




என்னை நான்
ஆசிர்வதிப்பதில்லை

நானே
கடவுளாக இருப்பதால்