புதன், 14 டிசம்பர், 2011

தமிழா எழுந்திடு !



தமிழா எழுந்திடு !

தமிழா தமிழா எழுந்திடு

                தமிழனின் பெருமையை உணர்ந்திடு

தமிழின் செம்மையை அறிந்துநீ

தாய்மொழி தமிழைப் படித்திடு



தனித்து துணித்து நிற்காதே

                தனித்தே நீயும் வாழாதே

பிணித்து வாழ கற்றுக்கொள்

      பிரிவினை என்பதை எண்ணாதே



ஓங்கும் புகழை கொண்டநீ

      ஒதுக்குப் புறமாய் ஒதுங்காதே

ஏங்கி ஏங்கி தவிக்காதே

                எங்கும்  நீஅடி வாங்காதே



தமிழன் வீரம் காப்பதற்கும்

      தரணி எங்கும் நிலைப்பதற்கும்

தமிழன் என்ற ஒருசொல்லே

                தரத்தில் உயர்ந்த அருமருந்தாம்


விழித்திடு தமிழா விழித்திடு

                விழியின் தூக்கம் கலைத்திடு

எழுந்திடு தமிழா எழுந்திடு

                ஏற்றம் காண புறப்படு



ஆண்ட பரம்பரை உனதன்றோ

                ஆ நாடில்லை உனக்கின்றோ

மாண்ட உயிர்க்கு விலையுண்டு

      மறுபடியும் துளிர்ப்போம் மறவாதே!

மௌனம்

Image Detail

புதன், 7 டிசம்பர், 2011

பட்டுப்பாப்பா பாட்டுப் பாடு


பட்டுப்பாப்பா பாட்டுப் பாடு 
(சிறுவர் பாடல்கள்)
கவிஞர் பொன். கணேசுகுமார்


வாசலில் சில நிமிடங்கள்

பல வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழமையான ஓர் இலக்கியமாகத் திகழ்கிறது. எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம். தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த இனத்தை விடவும் நம் இனத்தில் அதுவும் நமது பண்பாட்டில் அதிகமாகவே வாழும் கலையை போதிக்கும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது.

1901-இல் குழந்தைப் பாடல்களைப் பாடி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயம் பிள்ளை. 1915-இல் பாப்பா பாட்டு பாடினார் மகாகவி பாரதி. இவ்விலக்கியத்தின் ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா என்றால் அது மிகையாகாது.  இவர்கள் காட்டிய வழியில் பலர் இன்று வரையில் குழந்தை இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர்.

குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவைகளைப் படைப்பது குழந்தை இலக்கியமாகும். இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று. பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை. சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டவையாகும். வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைதல் வேண்டும். அவ்வகையில் சிறந்து விளங்கும் ஒரு படைப்பாக இந்த பட்டுப் பாப்பா பாட்டுப் பாடு அமைந்திருக்கிறது.

கவிஞர், நண்பர் பொன். கணேசுகுமார் அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தானும் குழந்தையாக மாறிவிடும் அளவிற்கு குழந்தை உள்ளம் படைத்தவர். ஒரு தலைப்பைக் கொடுத்தால் உடனே கவிதை புனையும் திறன் பெற்றவர். எளிமையான சொற்களைக் கொண்டு கவிதைப் படைப்பதில் ஆற்றல் மிக்கவர். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் சொற்களோடு விளையாடுவதில் வல்லவர்.

பொம்மை பொம்மை பொம்மை\பொட்டு வைத்தப் பொம்மை\அம்மா எனக்குத் தந்த\அழகு நிறைந்த பொம்மை போன்ற அடிகளும்,
தம்பி தம்பி இங்கேவா\தமிழைப் படிக்க இங்கேவா\நம்மைப் போன்ற குழந்தைகளை\நயந்து கூட்டி இங்கேவா போன்ற அடிகளும் கவிஞரைக் குழந்தைக் கவிஞராக பரிமாணிக்க வைக்கின்றன. இது போன்ற எளிய சொல்லாடல்கள், துள்ளும் ஒசையுடன் பாடல்கள் முழுக்க வியாபித்திருக்கின்றன.

சிங்கப்பூரின் சிறுவர் இலக்கியத்திற்கு இந்நூல் தனிச்சிறப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். மேலும் பல சிறுவர் இலக்கியங்கள் தோன்ற முன்னோடியாகவும் அமையும். நண்பர் பொன். கணேசுகுமார் அவர்கள் தனது இலக்கியச் சோலையில் இலக்கிய அறுவடைகளைச் சிறப்பாக மேற்கொள்ள என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.


புத்தகங்களை சுமையாக
நினைக்கும் நிலையினை மாற்றி
புத்தகங்களை சுவையாக
நினைக்கும் சூழலை – நம்
பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்!


அன்புடன்
பூச்சோங் எம். சேகர்