வியாழன், 16 டிசம்பர், 2010

மீட்பு
காலப் பிளவுகளில்
வீழ்த்தப்பட்ட ஞாபகங்களை
மீள்பார்க்க கிளம்புகிறது மனம்

தினத் தற்கொலை
காலங்களின் முதுகில்
சவாரி செய்கிறது

பாதங்கள் பதிந்த
தடங்களின் மேல்
சுவடுகளைத் தேடுகிறது

வாழ்க்கைப் புதரின்
சிக்கல்களைத் துரத்தி
பதிவுகளைப் பகர்கிறது

இரவு தூக்கத்தின்
கனவுபடங்களின் உள் பாய்ந்து
மகிழ்வுகளைத் தூவுகிறது

விழித் தூறல்கள்
கை கட்டி காத்திருக்கின்றன
திறந்த கிணற்றுக்குள்

நடந்து வந்த பாதையில்
திரும்பிப் பார்த்தால்....

மீண்டும் மீண்டும்
புதிய தேடல்களே
மீளுகின்றன

வாழ்க்கை மட்டும்
இங்கு மீண்டபாடில்லை

மீண்டும் மீண்டும்
தொலைந்தாலும்
பயணம் மட்டும்
தொடர்கிறது

மரணம் கூட
இங்கு ஒரு முடிவல்ல
மற்றுமொரு
பயணத்தின் துவக்கம்

மன அசைவுகளின் அதிர்வுகள்
ஞாபகங்களை மட்டும்
இங்கு மீட்டெடுக்கின்றன


- சேகர்கவிதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக