செவ்வாய், 1 மார்ச், 2022

அறம் - சிறுகதைத் தொகுப்பு - சூர்ய ரத்னா

                   

அறம்

சிறுகதைத் தொகுப்பு – சூர்யரத்னா

 

சிங்கப்பூரில் சிறுகதைகளுக்கான கருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. நமக்குள்ளே ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நாள்தோறும் பல கதைகளுடனேயே நாம்  பயணித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கான அனுபவங்களை நாம் பிறரிடம் பகிரும்போது ஏற்படும் உணர்வுகளே நம் எழுத்துகளை மற்றவர்கள் வாசிக்கும்போதும் ஏற்படுகிறது. அது படைப்பாளருக்கும் வாசகருக்கும் வெவ்வேறான உணர்வலைகள் எழும்பி அவரவருக்கான தேடலை நோக்கி ஓட வைக்கிறது. அத்தகைய தேடல்களின் ஒரு பகுதியாகத்தான் சூர்யரத்னாவின் அறம் சிறுகதைத் தொகுப்பின் கதைகள் அமைந்திருக்கின்றன.

படைப்பாளருக்கு அகம் சார்ந்த மொழியும் சமூகம் சார்ந்த மொழித்திறனும் அவசியம். இவ்விரண்டும் அவரின் படைப்பை மேன்மையாக்கக்கூடியவையாகும். படைப்பாக்கம் என்பது வெறும் சொற்களின் அழகியக் கட்டமைப்பு அல்ல. அது உணர்வுகளின் கட்டமைப்பு.  அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்றச் சொற்களைத் தெரிவு செய்வதில் ஒரு படைப்பாளருக்கு ஆழ்ந்த திறன் இருக்கவேண்டும். உணர்வுகளை இயல்பாகச் சொற்களில் தரும் ஆற்றல் படைப்பாளருக்கு முக்கியம். இந்த ஆற்றல் சூர்யரத்னாவிற்கு இயல்பாக இருக்கிறது. அதற்கு அறம் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

மனித வாழ்க்கையின் சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் நிகழுகின்றன. இப்படிப்பட்ட மக்களின் வாழ்வியலில் ஏற்படும் இன்பத் துன்பங்களும் சவால்களும் சிக்கல்களும் நவீன காலமுறைக்கேற்பச் புனைகதைகளில் படைக்கப்படுகின்றன. அவ்வகையில் அறம் சிறுகதைகள் சிங்கப்பூர்ச் சமூகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளின் தொகுப்பாகப் புனையப்பட்டுள்ளன.

‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா’ எனக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கூறியுள்ளார். இலக்கியப் படைப்புகளினூடே பெண்மொழி என்பது பெண்மனத்தின் ஆழத்தில் எழும் நீரோட்டம். அவர்கள் சார்ந்த அனுபவங்களையும் எண்ணங்களையும் அன்றாட வாழ்வில் நடைமுறைகளாக நடக்கும் ஒவ்வொன்றையும் உள்ளதை உள்ளபடி, உணர்ந்ததை உணர்ந்தபடி பெண் மனநிலையில் சொல்லும் மொழியாகும். அத்தகைய பெண்மொழியில் சிங்கையின் மொழிச்சுழலுக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ப இக்கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சூர்யரத்னாவின் நான் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகள் பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருந்தன. இத்தொகுப்பிலுல் சிங்கப்பூர்ச் சூழலில் பெண்ணியக் கூறுகளுடன் அறநெறிகளைப் போற்றும் கதைகளை இடம்பெறச் செய்துள்ளார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு கருப்பொருளைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூர்ச் சூழலில் இன்றைய படைப்பாளர்கள் பலரால் ஒரே கருப்பொரூளைக்கொண்டு பல கதைகள் எழுதப்பட்டுவரும் வேளையில், சிங்கப்பூரில் சொல்லப்படாத பல கதைகளை இத்தொகுப்பில் தைரியமாகக் கொண்டுவந்துள்ளார் சூர்யரத்னா. பொதுவாகப் பணிப்பெண்கள், தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்களின் சூழல், அண்மைய குடியேறிகளின் பிரச்சினைகள் என ஒரே மாதிரியான கதைச்சொல்லலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் சூர்யரத்னா சிறுகதைகளைச் சிங்கப்பூருக்கே உரிய தனித்தன்மையோடு படைத்துள்ளார்.

 

நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்...

1984 இல் சிங்கப்பூரில் மிகவும் பேசப்பட்ட கறி மர்டர் (Curry Murder) கொலை வழக்கை மையமாக வைத்தை எழுதப்பட்ட கதை. கால வேறுபாடுகளைக் குறிப்பதற்காகக் கதையைப் பகுத்து நகர்த்தும் உத்தி கதைக்கு மேலும் வலுவூட்டியுள்ளது. ஸ்ருதியின் பாத்திரப் படைப்புப் பெண்கள்மேல் தொடுக்கப்படும் இரண்டாம் பட்சமான எண்ணத்தாக்குதல்களிலிருந்து மீண்டுவரும் ஒரு பெண்ணின் மனத்தைரியத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. நிஜச்சம்பவத்தோடு கற்பனையைக் கலந்து வாசகர்களைக் கவரும் வண்ணம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இசை

பத்து வயது ஸ்ரீ என்ற கதாபாத்திரத்தை முன்வைத்துச் சொல்லப்பட்ட கதை பெண்களுக்கு இருக்க வேண்டிய துணிச்சலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதற்கு நேர்மறையான எண்ணங்களுடன் வளர்க்கப்பட்ட இந்திரன் என இரு தத்துவார்த்தங்களின் மீது பயணம் மேற்கொண்டுள்ளார் கதாசிரியர். அப்பா வளர்க்கும் ஸ்ரீ, பாட்டி வளர்க்கும் இந்திரன் இவர்களுக்கிடையில் ஏற்படும் மோதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் மோதலாகப் பார்ப்பதைவிட ஆணாத்திக்கம், பணத்திமிர் போன்றவற்றினால் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இச்சமூகத்தில் சிறுவயதுமுதல் ஒரு பெண் அனைத்திற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை.

அறம்

தொகுப்பின் தலைப்புக் கதை. அதற்கேற்ற அத்தனை தகுதிகளையும் கொண்ட கதை. கதை நாயகி அனிதாவை முன்னிலைப்படுத்தி கதை நகர்ந்தாலும் கதையில் சொல்லப்படும் ஒவ்வொரு சம்பவத்தின்மூலமாகச் சிங்கப்பூர் வாழ்வியலை இயல்பாகப்  படம்பிடித்துக் காட்டியுள்ளார். சிங்கப்பூரர்களிடம் இருக்கின்ற செடிகளை வளர்க்கும் ஆர்வம், செல்லப்பிராணிகளோடு இருக்கும் பாசம், வீட்டு வாசலில் தினமும் உணவுக்காக வரும் புறாக்கள், பறவைகள், குரங்குகள் போன்றவற்றிற்கு உணவிடுதல் போன்ற பண்புகளோடு, தெருக்களைச் சுத்தம்செய்ய வருபவர்களுக்குத் தண்ணீர்ப் பொட்டலங்கள் வழங்குவது, பண்டிகைகளின்போது அவர்களுக்கு சன்மானம் (அங் பாவ்) என பலவற்றையும் கதை விரிவாகச் சொல்கிறது. மேலும், புதிய குடியிருப்புப்பேட்டைக்காகக் காடுகள் அழிக்கப்படும்போது தரைவீடுகளில் வசிப்போருக்கு ஏற்படும் சிக்கல்களையும் கதை பேசுகிறது. அங்கிருக்கும் குரங்குகள் மிகவும் சாந்தமாகவும் நேயத்துடனும் இருக்கும்வேளையில் புதிதாக வந்த குரங்குகள் ஆங்காரமாகவும் வன்மமாகவும் இருப்பது போன்றவை ஏதோ ஒன்றின் குறியீடாக நமக்குப் புரியவைக்க விரும்புகிறார் கதாசிரியர் என்றே தோன்றுகிறது. நம்பிக்கைச் சார்ந்து அறத்தின் வெளிப்பாட்டைத் தெளிவுபடுத்த வேப்பிலை மரத்தின் கதையும் இதில் இருக்கிறது.

கதாநாயகன்

பதின்ம வயதில் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் தத்தம் கதாநாயகன் பற்றிய உணர்வுகளையும் எண்ணங்களையும் கதை உமா என்ற கதாபாத்திரத்தின் துணையுடன் பின்னோக்கியும் முன்னோக்கியும் நகர்ந்துசென்று வருகிறது. பொங்கலுக்குத் தயாராகும் குடும்பப் பெண்களுக்கு இருக்கின்ற பொறுப்புகளைப் பேசுகிறது கதை. தேக்காவிற்குப் பொங்கலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கும்போது ஏற்படுகிற கூட்ட நெரிசலையும் கடைக்காரர்கள் பயனீட்டாளர்களுக்கு ஏற்படும் கசப்பான உரையாடல்களையும்கூட கதை பதிவு செய்கிறது. இதுபோன்ற பண்டிகைகளின்போது ஆண்களின் பங்கு என்ன என்பதைக் கதை கேள்வியாக வைக்கிறது. இந்த உலகமயமாதல் சூழலில் திருமணங்கள் இனம், மதம், நாடு என்றில்லாமல்  பொதுவாகப்  போய்விடக்கூடிய அபாய சங்கையும் கதை ஒலிக்கிறது. வலிமை படைத்தவனின் கை ஓங்கும்போது எளியவனின் கை இறங்கித்தானே ஆகவேண்டும். மெல்ல மெல்ல அவனின் அடையாளங்களும் தொலைந்துதானே போகும்.

ஆசை

பெற்றோர் தம் விருப்பங்களைப் பிள்ளைகளின்மேல் தினிப்பதை விடுத்து பிள்ளைகளின் நியாயமான ஆசைகளுக்கு உயிரூட்ட வேண்டும் என்ற மையக்கருத்தை உணர்த்தும் கதை. ஒரு சீனக் குடும்பத்தை மையமாகக் கொண்ட கதை. தாயார் மேகி என்ற கதாபாத்திரம் தன் பிள்ளைகள் சிங்கையின் சிறந்த பள்ளிகளுக்குச் செல்லவேண்டும் என்ற நோக்கில், சிறந்த பள்ளியில் பயின்ற ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். முன்னாள் மாணவர்களின் பிள்ளகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால்  இந்தத் திருமண ஏற்பாடு. மேலும், பள்ளியில் அருகில் வீடு இருந்தாலும் இன்னும் சுலபமாக இடம் கிடைத்துவிடும் என்பதால் பள்ளியில் அருகிலேயே இரண்டு லட்சம் அதிகம் கொடுத்து வீடு  வாங்குவது, பள்ளியில் இடம் கிடைக்க பெற்றோர்கள் குறிப்பிட்ட கால அளவு பள்ளியில் சேவை செய்யவேண்டும் போன்றவற்றையும் கதை பேசுகிறது. சிங்கப்பூரின் தனித்துவத் தன்மையை விளக்கிச் சொல்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் இக்கதையை சிங்கப்பூருக்கே உரிய கதையாக உருவாக்குகிறது.

வியூகம்

அலுவலகம் சார்ந்தும் மற்ற வேலை இட அரசியலையும் மிகவும் நுணுக்கமாக எடுத்துச் சொல்லும் கதை. சிங்கப்பூரில் அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தாலும், அந்தந்த வாய்ப்புகள் எப்படிக்  கிடைக்கின்றன? எப்படிப் பறிக்கப்படுகின்றன? போன்றவற்றைப் பேசும் கதை. சில தமிழர்களின் எதிர்மறையான வேலையிடத்துப் போக்கையும், அதை உணராமல் எப்போதும் மற்றவர்களைக் குற்றம்சொல்லியே வாழும் மனப்போக்கையும் இக்கதை சாடுகிறது.

சிறை

ஷீலா என்ற கதாபாத்திரம் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. சிறையிலிருந்து தப்பிக்கும் ஷீலாவிற்கு என்னவாயிற்று? இதுவரை சிங்கப்பூரில் தமிழில் சொல்லப்படாத ஒரு கதைக்களத்தில் ஒரு புதிய கதை. பல புதிய தகவல்கள் இக்கதை முழுக்கப் பரவிக் கிடக்கின்றன. செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு பல விஷயங்களைச் சொல்லித் தரும் கதை. மனத்தை நெகிழவைக்கும் கதை.

கோடிட்ட இடங்களை நிரப்புக......

உள்ளூர்ச் சமையல் போட்டி. போட்டியாளர்களின் மனப்போக்கு. அதை வைத்து போட்டியை மேலும் விறுவிறுப்பாக வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி நெறியாளரின் கேள்விகள் எனத் தொடங்கும் கதை.

டை-பிரேக்கர் விதிமுறைகள் இப்படி வருகிறது.

கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஓர் இனிப்புப் பதார்த்தம் செய்யப்படவேண்டும். முக்கியமாக உள்ளூர்ச்சுவையில் மட்டுமே.

இங்கே கவனிக்கப்படவேண்டியது உள்ளூர்ச்சுவை. கதையில் இறுதில் ஒரு வரி வருகிறது.

அடிப்படையில் இது சமையல் படைப்புகள் பற்றிய கதை இல்லை என நினைப்பவர்கள் மட்டும்...

கோடிட்ட இடங்களை நிரப்புக

கோடிட்ட இடங்களை வாசகர்கள் எப்படி வேண்டுமென்றாலும் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், சிலர் கதையை வாசித்துவிட்டு சமையல் போட்டியாக மட்டுமே இதைப் பார்ப்பதால், நானும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். இது சமையல் போட்டியல்ல. சிங்கப்பூரின் சமீப காலத்தின் இலக்கியப் போக்கு, இலக்கியப் போட்டிகளின் அவலம் போன்றவற்றின் குறியீடு.

அருவம்

லிசா என்ற பாலியல் தொழிலாளியின் கொடூரமான கொலை தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைக்கும் கதை. இது தொடர்பான ஆண்களின் பார்வைகளையும் நிகிதா என்ற பெண்ணின் பார்வையையும் அருவமாக வரும் லிசாவின் கதையாக வருகிறது. சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்த காற்பந்தாட்டம் சார்ந்த பல செய்திகளும் இக்கதையில் உண்டு. 

நிறைவாக,

உங்களின் வாசிப்புக்காகக் கதைகளை நான் முழுமையாக இங்குக் கூறவில்லை. சூர்யரத்னா நிறைய வாசிக்கிறார் என்பதற்கு இக்கதைகள் நற்சான்று. ஒவ்வொரு கதையிலும் அவர் மேற்கோள் காட்டும் விஷயங்கள் அவரின் வாசிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் தேடலையும் உணர்த்தும் வண்ணம் இருக்கின்றன. நல்ல வாசிப்பாளரால் சிறப்பானதொரு படைப்பைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒன்பது கதைகளும் தனித்தனிக் கதைகளாக அவரவர் நியாயங்களைக் குறிப்பாகப் பெண்களின் நியாயங்களை எடுத்துச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன. அவர்கள் சார்ந்த நியாயங்களைப் பேசுகின்றன. கதைப்பொருள் தேர்வு, கதைக்களம், கதைக்கான உத்திகள், கதைக்கான செய்திகள் என அனைத்திலும் சூர்யரத்னாவின் உழைப்புத் தெரிகிறது. படைப்பாக்கத்தில் மொழியாடல்களிலும் சொல்லாடல்களிலும் சிங்கப்பூரின் வாழ்வியல் மொழி பண்பாட்டுமொழி இயல்பாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எது சிங்கப்பூர் மொழி எனக் குழம்புபவர்களும் சிங்கப்பூரில் எழுத என்ன இருக்கிறது எனக் கேள்வி கேட்பவர்களும் இச்சிறுகதைகளை வாசித்தால் புரிந்துகொள்ளலாம் இந்த மண்ணுக்கான வாசனையை.

 

இத்தொகுப்பில் எனக்குப் பலவீனமாகப்படும் சில விஷயங்கள்:

1.   கதைகள் ஒவ்வொன்றும் நீளமாக இருப்பது. ஒவ்வொரு கதையும் ஏறக்குறைய 15 அல்லது 16 பக்கங்களில் இருப்பது.

2.   ஒரே கதைக்குள் நிறைய கதைச் சம்பவங்களை வைத்திருப்பது.

3.   நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்திருக்கலாம். ஒரே வாக்கியம் ஒரு பத்தி முழுவதுமாக  இருப்பது வாசகரைச் சோர்வடையச் செய்யும்.

4.   கதையில் இடம்பெறும் சில விவரனைகள் நீண்டு செல்வதால் கட்டுரைத்தன்மை வந்துவிடும் சாத்தியம் இருக்கிறது. சில கதைகளில் அது நிகழ்ந்திருக்கிறது.

5.   உள் பக்க வடிவமைப்பை இன்னும் மேம்படுத்தியிருக்கலாம்.

 

வாழ்த்துகள் சூர்யரத்னா. தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் பல படைப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்.

 

-     எம்.சேகர்

 

 

 

 




 

இந்திரஜித்தின் ரயில் நாவல்


 


நூல் விமர்சனம்

ரயில் (நாவல்): இந்திரஜித், சிங்கப்பூர்

வெளியீடு: தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர்

மனங்களுடன் சில உரையாடல்கள் – எம்.சேகர்

 

இரண்டாம் உலகப்போரின் மிகக்  கொடூரமான மனித வதை சயாம் மரண ரயில் பாதை.  ‘சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்’ என்று சிலர் இதைக் குறிப்பிடுவதுண்டு. 415 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் பாதை தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்கள் போட்ட திட்டம். இதில் ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்களும் 60,000 போர்க்கைதிகளும்  வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

 

ஜப்பானியர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்தும் சாலையில் நடந்து செல்வோரை வலுக்கட்டாயமாகப் பிடித்தும் லாரிகளில் ஏற்றினார்கள். பல தோட்டத்துக் கங்காணிகளும் கிராணிகளும் பணத்துக்காகத் தொழிலாளர்களிடம் ‘நிறைய பணம் சம்பாதிக்கலாம்’ என்று ஆசை வார்த்தைகள் கூறி வேலைக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள்.

 

லாரிகளில் ஏற்றப்பட்டவர்களில் பலர் கூரையில்லாத ரயில் வண்டிகளில் அடைக்கப்பட்டு நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.  ஒரு வேளை சாப்பாடு. அதுவும் புழுக்கள் நெளியும் உணவு. அதை நிராகரிக்க முடியாத சூழலில் சிக்கிக்கொண்டு அந்தத் தொழிலாளிகள் வாழ்ந்துள்ளனர். தத்தம் குடும்பத்தைக்காண உயிரைத் தக்க வைத்துக்கொள்ள போராடினர் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும். இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தின் புனைவுதான் இந்திரஜித்தின் ரயில் நாவல்.

 

ஆர்.சண்முகத்தின், ‘சயாம் மரண ரயில்’, அ.ரெங்கசாமியின், ‘நினைவுச் சின்னம்’, அண்மையில் வெளிவந்த கோ.புண்ணியவானின் ‘கையறு’ நாவல்களுக்குப் பிறகு நான் வாசிக்கும் நாவல் - ‘ரயில்’. மற்ற நாவல்கள் சயாம் வாழ்வின் துயரங்களையும் அவர்கள் இரண்டு மூன்றாண்டுகளுக்குப் பின் தத்தம் குடும்பத்தைக் காணவந்தபோது சிதைந்துபோன வாழ்க்கையே மிஞ்சியிருந்ததையும் நிறைய பேசியிருக்கின்றன.

 

ரயிலுக்கு முன்பு வந்த நாவல்கள், அந்த வாழ்வின் வலியை தமிழர்களின் இயலாமையை புலம்பலை ஜப்பானியர்களின் கொடுமையை அதிகமாகப்  பதிவுசெய்திருக்கின்றன. அந்த மூன்று நாவல்களிலும், சொல்லப்பட்ட செய்திகள், தரவுகள் பல திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளன.

 

சயாம் மரண ரயில் சரித்திரப் புன்புலத்தை ஒரு மெல்லியச் சரமாக வைத்துக்கொண்டு, ரயில் நாவலில் மனித மனங்களை அதிக அளவில் திரைபோட்டுக் காட்டியுள்ளார் இந்திரஜித்.

 

துரை, சாம்பா என்ற சாம்பசிவம், முத்து, பட்டுக்கண்ணன் ஆறுமுகம், கிருஷ்ணன், அம்பலவாணர் மண்டூர், புதுக்கவிஞன் ஜப்பானிய சிப்பாய் கிரோஷி, ரப்பேச்சா, ராமசாமி, சுப்ரமணியம், வத்சலா, அபின்யா, கணேசன், சீனப்பாட்டி அவர் மகன் அவாங், லாரி டிரைவர் அய்யாடோனி, ரவீந்தரா சார், விஜயா, வசந்தா, தமயந்தி, அண்ணாமலை, கொரியப் பெண் எனக் கதாபாத்திரங்கள் நாவலுக்குக் கணக்கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. கதாபாத்திரங்களை மிகக் கவனமாகத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொண்டிருப்பது நாவலாசிரியரின் தனித்திறன். நாவலில் வருகின்ற சின்னக் கதாபாத்திரம்கூட மிக அழகாகக் கதையை நகர்த்திச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது.

 

இந்திரஜித் ஒரு ஜென் துறவிபோல, இயற்கையோடு மிக ஒன்றி, இயற்கையையும் மனிதனின் மன உணர்வையும் வெளிப்படுத்தக் கச்சிதமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

 

பசியின் நீண்ட கரம் அவர்களைச் சுற்றி வளைத்தது’

மனம் செத்துப்போன அந்த ஒரு தருணம்’

ஒருமுறை வந்தால் கடவுள், அவ்வப்போது வந்தால் மனிதன், தொடர்ந்து வந்தால் நாய்’

மூச்சுவிட முடியாமல் திணறியது காற்று’

இப்படி நாவல் முழுக்கக் கூர்மையான சொல்லாடல்கள் நிறைந்திருக்கின்றன.

 

கற்பனை நயம், ‘எல்லா இடங்களிலும் ராத்திரி பூசப்பட்டிருந்தாலும் வானம் எதற்கும் இருக்கட்டுமே என்று கொஞ்சம் வெளிச்சத்தைத் தூவி வைத்திருந்தது’ ‘ஆற்று நீரில் நனைத்த காற்றைக் கொண்டுவந்து மேலே கொட்டிவிட்டு விலகி நின்று சிரித்தது இரவு’ - இதுபோன்ற சொல்லாடல்கள் வாசகரை நிறுத்தி நிதானமாக நகர வைக்கின்றன.

 

நம் சமூகத்தின் பலவீனத்தை எழுத்துச் சாட்டைக் கொண்டு விலாசுகிறார் இப்படி,

எது நடந்தாலும் எதுவும் நடக்காத மாதிரி இருக்க நம்மால் முடியும்’.

 

தொழிலாளிகளின் சொற்கள் வழி வீரத்தமிழனாய் முழங்குகிறார்,

ஜப்பானியர்களை உதைத்திருக்கவேண்டும். பிடித்துக்கொடுத்த ஏஜெண்டுகளை உதைத்திருக்கவேண்டும். தமிழன் அடித்தால் எலும்பு உடையும் என்று ஜப்பான்காரன் அலறித்துடித்திருக்க வேண்டும்.’

 

காட்சிச் சித்தரிப்புகள் நம் முன்னே விரிந்து விரிவடைகின்றன. அந்தச் சிலந்தியின் காட்சி, அடிக்கடி வரும் கடற்கரை விவரிப்புகள் நம் மனத்தையும் சலவை செய்து ஆயிரம் நம்பிக்கைகளைக் கொடுக்கும் வலிமை கொண்டவை. 

 

இரண்டு ஆண்டு கொடூர வாழ்க்கையில் மனித மனம் அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை துரை, சாம்பா போன்றோரின் உணர்வுகளின்மூலம் அவர்களுக்கான உரையாடல்களில் நம்பிக்கை நம்பிக்கையின்மையின் தரிசனங்களை மிக இயல்பாகச் சொல்லிச் செல்கிறது ரயில்.

 

இந்திரஜித்திற்கே உரிய துள்ளல் நடையும் எள்ளல் நடையும் இந்த நாவலின் பலம். எளிய மொழிநடை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் நாவலோடு நம்மைப் பயணிக்கவைக்கிறது.

 

சுமார் மூன்று மணிநேர ரயில் வாசிப்புப்பயணம் என்னை மீண்டும் ஒருமுறை சயாம் மரண ரயிலில் பயணிக்க வைத்தது. கடந்த வாசிப்புகள்போல் இல்லாமல் இந்தத் தடவை வேறொரு வாசிப்பு அனுபவத்தையும் மனித மனம் சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாட்டையும்  கொடுத்திருக்கிறது ரயில். இத்தகைய நல்ல நாவலை எழுதிய நாவலாசிரியர் இந்திரஜித், பதிப்பித்துள்ள தங்கமீன் பதிப்பகத்திற்கும்  எனது வாழ்த்துகள்.

 

- எம்.சேகர்

17012022




வெள்ளி, 19 ஜூன், 2020

கதம்பம் 2.0 - ஒரு பார்வை




சிறுகதைத் தொகுப்பு : கதம்பம் 2.0
தொகுப்பு   :         திரு. மில்லத் அஹ்மது
வெளியீடு   :         உயிர்மெய் பதிப்பகம், சிங்கப்பூர்
பதிப்பு      :         முதற்பதிப்பு 2019


திரு. மில்லத் அஹ்மது தொகுப்பில் வந்த கதம்பம் 2.0 சிறுகதைத் தொகுப்பு (2019) சிங்கப்பூரின் சிறுகதைத் தொகுப்பு நூல்களில்  அண்மைய வரவாக இருக்கிறது. 2017 இல் சிங்கப்பூர்க் கதம்பம்  என்ற சிறுகதைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இது வெளிவந்திருக்கிறது. சிங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கான தொடர்முன்னெடுப்புக்களில் இத்தொகுப்பும் தனக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதில் மகிழ்ச்சி.

ஒரு சமுதாயத்தின் விருப்பு வெறுப்பு நம்பிக்கை முதலியவற்றை வரையறுத்துப் பண்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே எனக் கூறுகிறார் டாக்டர் மு.வரதராசனார். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே முழுக்க முழுக்க சிங்கப்பூர்ச் சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது என்றாலும், பல கதைகள் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைக்குள் நுழையாமல் அண்மைய குடியேறிகளின் கதைகளாக, அவர்களின் சிங்கப்பூர் அனுபவங்களாக அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களாகவே இருக்கின்றன. சில கதைகளில் சிங்கப்பூர்க் கதைகளாக அடையாளம் காட்டவேண்டும் என்பதற்காகவே சீன, மலாய் கதாபாத்திரங்களையும் சிங்கப்பூரில் உள்ள இடங்களின் பெயர்களையும் இணைத்துக்கொள்ளும் செயற்கைத்தனமும் சேர்ந்துகொள்கிறது. சிங்கப்பூர் மக்களுக்கென்று ஒரு வாழ்க்கை மொழி இருக்கிறது. அந்த மொழியும் அந்தச்  சூழலும் கதைகளில் வருகின்றனபோதுதான் நிஜமான சிங்கப்பூர்க் கதைகளைக் காண இயலும். அட்டைப் பெட்டிகளையும் டின்களையும் காலையிலேயே எழுந்து சேகரித்துவரும் சீனத் தாத்தாக்களையும் பாட்டிகளையும் மட்டும் பார்க்காமல் அதே தொழிலைச் செய்யும் நமது தாத்தா பாட்டிகளின் மீதும் நமது பேனாக்கள் கவனம் செலுத்தட்டும். இனி கதைகளுக்குச் செல்வோம்.

தனிமை -  மணிமாலா மதியழகன்

சிங்கப்பூர்ச் சூழலுக்கான கதையாடலுடன் எழுதப்பட்ட கதை. சிங்கப்பூர் அடுக்குமாடி வீடுகளின் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் சமகால சிக்கலொன்றை எடுத்துக்கொண்டு அதை இயல்பாகப்  பதிவு செய்ய முனைந்துள்ளார் கதாசிரியர். சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில், பிள்ளைகள் பயிலும் பள்ளிகளின் அருகிலேயே வீடு வாங்க நினைக்கும் சிங்கப்பூர் வாசிகளின் மனநிலையையும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் சின்ன சின்ன மாற்றங்களும் அதனால் ஏற்படும் எதிர்பாராத சில பாதிப்புகளும் கதையின் மையமாக எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

புறவயமான கதை சொல்லலில் ஆங்காங்கே கட்டுரைக்கான மொழி வந்து விழுந்து விடுகிறது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெரியவரின் அகத்துக்குள் கதையை நுழைந்திருந்தால், கதை இன்னும் அழுத்தமாகப் பதிவாகியிருக்கும் என்பதை எனது பார்வையாக இங்கே முன் வைக்கிறேன். ஆள் கிட்டேயே நெருங்க முடியல. இதுல எப்படி அவரின் அகத்துக்குள் நுழையுறதுன்னு நீங்க மைண்ட் வோய்ஸா பேசுறதும் எனக்குக் கேட்கிறது. அந்தப் பெரியவரின் மனத்தோடு ஓர் உரையாடலை இக்கதை நிகழ்த்தியிருந்தால் இக்கதை இன்னும் பரவலாகப்  பேசப்படும் ஒரு சிறந்த கதையாக உருப்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆப்பிள் – மில்லத் அஹ்மது

சிங்கப்பூர்ச் சூழலில் புதியதொரு கதைகளத்தோடு எழுதப்பட்டுள்ள கதை. நவீன தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் கதையாகவும் இதைப் பார்க்கலாம். ஜூமான்ஜி போன்ற திரைப்படச் சாயலில் தமிழுக்கு வந்துள்ள ஒரு படைப்பாகவும் இக்கதையை நாம் அணுகலாம். அங்கதத் தன்மையுடன் நம் அகத்துக்குள்ளும் பதியம் போட்டு அமர்ந்திட முயற்சிக்கும் கதை. நவீன புனைகதையுலகில் மாய எதார்த்ததோடு கதை புனையும் தன்மை அதிகரித்துவரும் இன்றைய படைப்புப்போக்கு இக்கதையிலும் காணப்படுகிறது. இருப்பினும், கதைசொல்லல், கதையை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் இன்னமும் கவனத்தோடு கையாண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒற்றுப்பிழைகள் – பிரேமா மகாலிங்கம்

அம்மா, மகள் உறவைப்பற்றி பேசும் கதை. மகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் நிர்மலா. அம்மாவுக்காகத் தன் வாழ்க்கைகையே சீரழித்துக்கொண்ட சிநேகா. இப்படி இரு வரி கதைதான் இது. சிங்கப்பூர் வாழ் சூழலில் ஒற்றைப் பெற்றோர் அதிகரித்துக்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களைப் பற்றி வெளியிலிருந்து புறவயமான ஒரு பார்வை நமக்கு இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சிக்கல்களையும்  அகவெளிப்பாடுகளையும் எளிதில் நாம் அறிந்துகொள்ள இயலாது. அப்படி ஒரு சிக்கல்தான் இச்சிறுகதையில் மையச்சரடாக இருக்கிறது.

அன்பு அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அதே அன்பு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் புரிந்துணர்வோடு வாழ்வதாகவும் இருக்கவேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல் அவரவர் சூழ்நிலைக்கேற்ப ஒரு புரிதலையும் அதற்கான நியாயங்களையும் அவர்களாகவே கற்பித்துக் கொண்டால் பின்னால் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். உறவின் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளையும் இச்சிறுகதை யதார்த்தமான கதைச் சம்பவங்களோடு வெளிப்படுத்தியுள்ளது. கதையின் இடை இடையே கதாசிரியர் வந்து பேசிவிட்டுப் போவதைத் தவிர்த்து வாசக இடைவெளிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் கதை அதன் இயல்பில் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

தலைமுறை – மலையரசி

முந்தைய தலைமுறையின் கதையை இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச் செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கதை. இன்றைய தலைமுறைக்குத் தெரியாத நம் வரலாற்றுத் தடங்களுக்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்ற உண்மையை வலியுறுத்தும் கதையின் மையம் அதற்கான சம்பவக்கோர்வைகள் என கதை நகர்ந்தாலும் நிறைய வரலாற்றுச் செய்திகளை ஒரு சிறுகதையில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பதிவு செய்திருப்பது கதையின் நகர்ச்சியில் ஓர் அயர்வைக் கொடுக்கிறது. ஒரு கட்டுரைக்கான சில விஷயங்களையும் இக்கதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  மேலும், தாயும் மகளுக்குமான உரையாடல்கள் இயல்பாக அவர்களுக்கான ஒரு மொழியில் இருந்திருந்தால் கதை இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். இதில் வரும் உரையாடல்கள் கதையிலிருந்து அந்நியப்பட்டு இருக்கின்றன.

கதையைப் பொருத்தவரையில் நாவலுக்கான பரப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிறுகதைக்கு இது பொருத்தமாக இருக்காது. கதாசிரியர் நன்கு திட்டமிட்டு இந்தக் கதையைக் கட்டமைத்தால் சிங்கப்பூர்ச் சூழலை மையப்படுத்திய ஒரு நல்ல நாவலை உருவாக்கமுடியும்.

ரஜூலா முதல் டைகர் வரை – அழகு சுந்தரம்

நட்பின் உன்னதத்தை எடுத்துரைக்கும் கதை. ரஜூலா என்ற சொல் அன்றைய மலேசியா சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்றால் அது மிகையாகாது. சாகாவரம் பெற்ற அந்தச் சொல்லுக்கு உயிர்ப்புத் தன்மை இருக்கவே செய்யும் எனப் பதிவிடுகிறார் மலாக்கா முத்துக்கிருஷ்ணன். அந்த வகையில் இக்கதையின்மூலம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்துள்ளது அந்த எஸ் எஸ் ரஜூலா கப்பல்.
கதையின் வடிவமைப்புக் காட்சிப்படுத்துதல் என்ற உத்தியின்மூலம் மிக இயல்பாக நகர்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. முழுமையான ஒரு கதை என்றாலும்கூட, இன்றைய நவீன கதையின் சொல்லாக்கமும் படைப்பாக்கமும் இத்தகைய படைப்புகளைத் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டன என்பதையும் நம் புரிதலுக்குக் கொண்டு வருவது முக்கியமாகும். அந்தப்  புரிதல்களோடு நாம் தம்முடைய படைப்புகளை அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

மனிதன் என்பவன் – தமிழ்ச்செல்வி

மனத்தாலும் சொல்லாலும் அறத்தின் இயல்பு அடித்தளமாக இருந்தாலும், செயல் திறனில் தோன்றும் அறமே முதன்மையான அறமென கொள்ளப்படுகிறது. ஒருவரின் செயலுக்கு உதவாது வெறும் மனத்தாலும வாய்மையாலும் இருக்கும் அறத்திறனால்  யாருக்கும் அவ்வளவாக எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை. வள்ளுவரும் அறத்தின் செயல்மீதே அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் குறள்களைப் பாடியுள்ளார். அவ்வகையில் இக்கதை அறத்தையே முன்நிறுத்தி எழுதப்பட்டுள்ளது. மானுட வாழ்க்கையின் உண்மை அனுபவத்தையும் உளவியலைச் சரியாகப்  புரிந்துகொண்ட தனித்திறனையும் கொண்ட இரு கதாபாத்திரப் படைப்பும் அந்த அறத்தை மறுதலிக்கும் இன்றைய தலைமுறையின் கதாபாத்திரமும் இருதலைமுறையினருக்கும் இருக்கும் சில இடைவெளிகளையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை விழுமியங்களை அவர்கள் செய்யும் தொழிலும் பெற்றோர்களின்மீது அவர்கள் கொண்ட பக்தியையும் மரியாதையையும் இன்றைய தலைமுறை தொலைத்துக்கொண்டு வருவதையும் கதை எடுத்துரைக்கிறது. சிங்கப்பூர்ச் சூழலில் எளிய நடையில் மிகைப்படுத்தி எதையும் கூறாமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவிற்கு ஏற்ப புனையப்பட்ட கதையாக இருக்கிறது. கதையின் முடிவிலும் வாசக இடைவெளியோடு நிறைவுபெற்றும் வாசக மனத்தில் நிறைவுபெறாமல் இருப்பதும் கதை முடித்தலின் உத்தி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

தீராநதியின் சிற்றலை – வித்யா சுப்ரமணியன்

வித்யாவின் ‘தீராநதியின் சிற்றலை’ யின் இறுதி வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் நான் மீளவில்லை என்பதுதான் உண்மை. நல்ல ஒரு கதை வாசிக்கும்போது இன்னொரு நல்ல கதையை நம் நினைவுக்குக் கொண்டு வரும் என்பார்கள். அவ்வகையில் இந்தக் கதையின் இறுதி வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளை சு.வேணுகோபாலின், ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற சிறுகதையும் மலேசியப் பெண்ணிய எழுத்தாளரான வே.இராஜேஸ்வரியின் ‘குழந்தை இன்பம்’ என்ற சிறுகதையும் ஏற்படுத்தியிருந்தன.  இக்கதைகளின் இறுதி வரிகள் வாசிப்பவர்களை ஓர் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி அவர்களை உறைய வைத்துவிடும் தன்மை கொண்டவை. இப்படியெல்லாம் நாம் வாழும் நடப்பியல் வாழ்க்கை முறையில் நடந்துகொண்டு இருக்கிறதா? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு வெளியே சொல்லமுடியாத எண்ணற்ற ஜீவன்களைத்தான் நாம் இங்குத் தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட அதிர்வு அலைகளையும் மனித ஜீவனுக்குள் இருக்கும் மௌனங்களை வெளிப்படுத்தும் குரலாகவும்  உடைபடும் மௌனங்களாகவும் இன்றைய நவீன தமிழிலக்கியம் நேற்று இல்லாத ஒன்றை எழுத முயன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் வித்யாவின் தீராநதியின் சிற்றலையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். கதைசொல்லலிலும் கதையாடலிலும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மேகதூதம் – விஜி

விஜியின் ‘மேகதூதம்’ இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஓர் அறிவியல் கதை. இந்த ‘மேகதூதம்’ அளிக்கும் சாத்தியங்கள் எதிர்காலத்தில் நடப்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் சிங்கையில் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமாக உண்மையும்கூட. எதிர்கால நவீனமாக்கல் யதார்த்தவாதக் கதையாக இக்கதையை அணுகலாம். ஒரு புதிய அனுபவத்தையும் கதை சொல்லலில் உண்டாகும் நம்பகத் தன்மையும் மகிழ்ச்சியும் வேகமாக நகரும் கதைப் போக்கும் நனவிடையில் முனைந்து மெல்ல நிகழ்த்திப்போகும் கதையாடலின்  நெகிழ வைக்கும் காட்சிச் சித்திரமும் இந்தக் கதையை அதற்கு ஏற்ற களம், மொழி, நடை என்ற எல்லை மீறல் இல்லாமல் மிகவும் கவனமாக எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

அறிவியல் புனைகதையாக இருப்பதால் நிறைய இடங்களில் வருகின்ற அறிவியல் தொழில்நுட்பம் பல்லூடகங்கள் தொடர்பான ஆங்கிலச் சொல்லாக்கங்களுக்குப்  பின்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் வாசகர்களின் புரிதல்கள் இன்னும் விரைவாக நடந்தேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லையெனில் இக்கதையை வாசகர்கள் விரைவில் கடந்துபோய் விடும் அபாயமும் இங்கிருக்கிறது. இதுபோன்ற அறிவியல் சார்ந்த படைப்புகளைப் புனைவோர் இங்கு அதிகமில்லை. இதுபோன்ற கதைகளைப் படைப்பவர்களுக்குச் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத்தில் நல்ல எதிர்காலமும் உண்டு.
 
முரணியல் – பானு சுரேஷ்

சிங்கப்பூர்ச் சூழலில் இன, மத, மொழி வேறுபாடின்றி மக்கள் வாழும் சூழல் அமைந்திருந்தாலும் அனைவரும் அப்படி வாழ்வதில்லை, சிலர் இன்னமும் அண்டை வீட்டார்களுடன் ஒட்டாமல் தனித்து வாழ்ந்துகொண்டிருக்கிறனர் என்றக் கூற்றினை உணர்த்தும் கதை. சிங்கப்பூரர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வழக்கமான கதை. கதையாடலில் ஆங்காங்கே செயற்கைத்தனம் வந்து விழுந்து கதையின் நகர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது.

கதை, அதன் மையத்தை நோக்கி நகர்த்தப்படும்போது வழக்கமான ஒரு தீர்வை நோக்கி நகர்ந்தாலும் கதையின் கடைசி ஒரு பக்கம் மட்டும் மையத்திலிந்து தனித்து நிற்கிறது. ஒன்று மற்றொன்றோடு முரண்பட்டு நிற்பதைக் காட்டுவதற்கு இரண்டுக்கும் சம வாய்ப்பும் நிகரான சம்பவக்கோர்வைகளும் கொடுக்கப்பட்டிருந்தால் கதை சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி இயலவில்லை என்றால், கதைக்கருவிற்கு ஏற்ப இரண்டு வெவ்வேறு சிறுகதைகளை உருவாக்கியிருக்கலாம். தராசில் இரண்டு தட்டுகளிலும் சரிசமமாக இருந்தால்தான் தட்டுகள் ஒரே நேர்கோட்டில் நிற்கும். ஒன்றில் கூடுதலாகவும் மற்றொன்றில் குறைவாகவும் இருந்தால் அது நியாயமாகாது. இக்கதையும் அப்படித்தான். படைப்பாக்கத்தில் ஒரே பக்கமாக இறங்கி இருக்கிறது.

உற்றுழி – பிரதீபா

மாணவர்களுக்கும் தனித்து வாழும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை தரும் முன்மாதிரிக்கதை. எந்தத் தடங்கலும் இல்லாமல் பயணிக்க வைக்கிற கதையின் எளிய நடை.  சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கும் கதை சொல்முறை என பலவற்றிலும் கவனம் செலுத்தியதுபோல் கதையில் வரும் சம்பவங்களுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். கதை சொல்லல் மிகவும் மேலோட்டமாக அமைக்கப்பட்டு கதைக்குள் நாம் நுழைவதற்குள் அடுத்தடுத்த செய்திகளைத் தந்து கதை நம்மைவிட்டு நகர்ந்துவிடுகிறது. இதுபோன்ற சாயலில் நிறைய கதைகள் எழுதப்பட்டிருப்பதால் இத்தகைய கதைகளைப் படைப்பாக்கம் செய்யும்போது இதுவரை எழுதப்பட்ட கதைகளிலிருந்து இந்தக் கதையை எப்படி வேறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக வெளிப்படுத்துவது எனச் சிந்தித்து எழுதினால் கதை அடுத்தகட்ட நகர்வை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியிருக்கும்.

ஒற்றை நட்சத்திரம் – வினுதா கந்தகுமாரி

தனித்து வாழும் ஒரு பெண்ணின் கதையோட்டத்தில் சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை மிக இயல்பாகப் படம்பிடித்துக் காட்டும் கதை. நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்கள் கதையினூடே வந்து கதைக்கான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

சமூகத்தில் எழுதாத சட்டமிடப்பட்டுள்ள வரையறைகளின் ஆக்கிரமிப்பால் பெண்கள் பெரும்பான்மையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். கற்பு முதலான ஒழுக்க விதிகள் அனைத்தும் பெண்ணுக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளதால், அவற்றிலிருந்து சிறிதேனும் அசைந்து கொடுக்கக்கூட பெண்களுக்கு இச்சமூகம் இடமளிக்கவில்லை. அதே வேளையில் இப்பெண்களை ஒழுக்க நெறிகளிலிருந்து தவற வைக்க தன்னாலான அனைத்தையும் ஆண்சமூகம் செய்யவும் தவறுவதில்லை. பகுத்தறிவு கதாபாத்திரத்தின் பெண் என்பவள் தனது சக்தியையும் திறனையும் தானே அறிந்துகொண்டு அவள் எதிர்கொள்கின்ற சிக்கல்களிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வைக் கொடுக்கிறது. ஒரு சில கதாபாத்திர வருகை இவ்வுலகில் நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தத் தவறவில்லை.

பிரபஞ்சனின் அப்பாவின் வேஷ்டி போல் பகுத்தறிவுக்கு அம்மாவின் சேலை. அம்மாவின் சேலையை எடுத்து அவளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டபோது ஏதோ ஓர் இதம் அவளை அடைகாப்பதுபோல் உணர்ந்தாள் வாசிக்கும் நம்மை நெகிழவைக்கிறது.

மனித சமுதாயத்தில் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இது எல்லா காலங்களிலும் எல்லா சமூகங்களிலும் நிலவி வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். மனிதனின் வாழ்க்கை பல நிறுவனங்களோடு அவனை இணைத்திருந்தாலும், குடும்பமே அவனின் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. குடும்பமே சமூகம் உருவாக அடிப்படையாகவும் அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை இருக்கிறது. அந்தந்த வாழ்க்கைக்கான காரணகாரியங்களையும் அதற்கான விளக்கங்களையும் கதைகள் நம்மோடு பேசுகின்றன. சில கதைகள் நம்மைக் கதைகளுக்கு மிக அருகாமையில் அழைத்துச் செல்கின்றன. சில கதைகள் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கைக்  காட்டுகின்றன. சில கதைகள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. எது எப்படியினும் அனைத்தும் சிங்கப்பூர்க் கதைகள் என்பதில் மகிழ்ச்சி.

-     எம்.சேகர்

புதன், 10 ஜூன், 2020

இதுவும் கடந்து போகும் (நாவல்) - பொன். சசிதரன்






நாவல்     : இதுவும் கடந்து போகும்
எழுத்து    : பொன். சசிதரன்
வெளியீடு  : சகோதரா எண்டெர்பிரைஸ்
பதிப்பு     : முதற்பதிப்பு 2019

இதையும் கடந்து போகத்தான் வேண்டும் – எம்.சேகர்

மீட்டுக்கொண்டு வர இயலாத
பழைய நாட்களின் பழைய மன நிலைகளின்
நாற்பது ஆண்டுகால நீங்காத நினைவுகளுடன்
இதனை எழுத ஆரம்பிக்கிறேன்.

ஒரு மனிதனின் எண்ணங்களே எழுத்துகளாக உருப்பெறுகிறது. சங்க காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம்வரை படைக்கப்படும் படைப்புகள் அனைத்தும் படைப்பாளனின் மனத்தில் இருந்தும் அவனின் அனுபவத்தில் இருந்தும் வெளிவரும் எண்ணங்களாகவே உள்ளன. இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தான் உணர்ந்தவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துச் சமூகத்தோடு ஒன்றி மற்றவர்களும் அதை உணர வேணடும் என்று இலக்கியத்தைக் கருவியாக்கி எளிமையான எழுத்து நடையில் படைக்கப்படுவது படைப்பிலக்கியமாகும்.

படைப்பு

ஒரு படைப்பு என்பது அனுபவத்தின் வெளிப்பாடாக, அனுபவத்தில் இருந்து பெற்ற சிந்தனை வளர்ச்சியால் படைப்பாளன் உணர்ந்த இந்த வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிப்படுத்தவும் அதை விரிவாக விரித்துச் சொல்லவும் வாழ்க்கைக்கான ஒரு தரிசனத்தைக் காட்டவும் படைக்கப்படுகிறது. படைப்பிலக்கியம் செய்திகளைக் கற்பனையில் இணைத்து அழகான ஒரு வடிவத்தில் கொடுக்கிறது. அந்த வடிவம் ஒரு கவிதையாக, ஒரு சிறுகதையாக, ஒரு நாவலாக, ஒரு நாடகமாக உருப்பெறுகிறது.

நாவல்

நவீன கால இலக்கியம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வரும் இலக்கியங்களாகும். இருபதாம் நூற்றாண்டிற்குப் பிறகே வளர்ச்சி நிலை அடைந்தது. நவீனம் என்ற சொல்லாடல் ஐரோப்பாவில் இருந்து வந்ததாகும். நவீன இலக்கியத்தின் ஒரு வகைதான் நாவல் இலக்கியம்.
கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டுவர முடியும் என்று உணர்த்தப்பட்ட பின் உரைநடை படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது நாவல்தான், என்று கூறுகிறார் இலக்கியத் திறனாய்வாளர் டாக்டர் இரா. தண்டாயுதம்.

இன்றைய சமூக வளர்ச்சியில் மக்களிடையே எழும்புகின்ற எந்த பிரச்சினையையும் நாவல் என்ற கலை வடிவத்தின் வாயிலாக நாம் விவாதிக்க முடிகிறது. நாவல் சமுதாயத்தில் இணைப்பை உருவாக்கும் தன்மையையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கும் கருவியாகவும் அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கும் சிந்தனைக் களமாகவும் சமுதாய கோட்பாடுகளை அலசி ஆராயும் அரங்கமாகவும் விளங்குகிறது.

நவீன வாழ்க்கைச் சூழலினால் மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகள், சிக்கல்கள், பாதிப்புகள், வன்மங்கள், குரூரங்கள் என பலவற்றைத் தன் எழுத்தினூடே வெளிப்படுத்தி, வாசகர்களுக்கு மனிதன் அல்லது சமூகம் குறித்தும் இந்த வாழ்வியலின் இளங்கியல் குறித்தும் சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமைக் கொண்டவர் பொன். சசிதரன். மூடுபனி பாலு மகேந்திராவின் கேமராவைப்போல வாசகனின் விழிகளுக்குள் தன் எழுத்தின்மூலம் காட்சிப்படுத்தும் திறன் மிக்கவர். மலேசிய நாட்டின் சிறந்த ஒரு கதைசொல்லி பொன்.சசிதரன்.

நாம் அறியாத மன ஆழங்களின் பெரும்வலையில் சிக்கியுள்ள ஒரு சின்னஞ்சிறு துகள்தான் இந்நாவலின் கதைக்கரு. நாம் காணும் இப்புறவுலகம் அதன் சாரமான இன்னொன்றால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது  என்பதையே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியப் படைப்புகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சாரத்தையே அவை மீண்டும் மீண்டும் புதிது புதிதாக வரையறை செய்துகொண்டிருக்கின்றன (புதிய காலம். ப.31. ஜெயமோகன்) என்பதற்கேற்ப இந்நாவலில் உடைந்துபோன ஓர் இளைஞனின் மனத்தை மீண்டும் மீண்டும் சில சம்பவங்களின் மூலமாக உடைத்துப் பார்த்துச் சிதைந்துபோன வாழ்விலிருந்து மீண்டெழ வைக்கிறதா இல்லையா என்பதை நோக்கியே இதன் கதையாடலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

நாவல் வகை
மு.வ. (மு.வரதராசன்) அவர்கள், தனது இலக்கிய மரபு என்ற நூலில் நாவல்களை அதன் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் (சிங்கப்பூர்த் தமிழ் – இலக்கியம் பன்முகப் பார்வை, முனைவர் இரா.வேல்முருகன். ப.119)

1.   நிகழ்ச்சிகள் மிக்க நாவல்
2.   பண்புநலன் மிக்க நாவல்
3.   விளக்கமும் வருணனையும் மிக்க நாவல்
4.   நாடகப் போக்கிலான நாவல்

அவ்வகையில், கதைமாந்தர்களையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் அதன் போக்கினையும் கொண்டு பொன்.சசிதரனின் இந்த நாவலைப் பண்பு நலன் மிக்க நாவல் என்ற வகைக்குள் வைக்கலாம்.

கதைக்குரிய பொருள்
பால்வெளி மண்டலத்திலுள்ள நிலவு தேய்வதும் பின வளர்வதுமான அதன் இயக்க மாற்றம் ஒரே சீராக அமைகிறது. அதே போல், நாகரிகம் பெற்ற மனிதனால் உருவான சமூகத்தில் காலந்தோறும் படைப்பாளர்களால் படைக்கப்பட்ட இலக்கியப் பாடுபொருளிலும் மாற்றம் நிகழ்ந்தவாறே உள்ளது.

நாவலுக்குரிய கதைப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நாவலாசிரியர் தாம் விரும்பிய, விரும்பாத, கண்ட, கேட்ட, அனுபவித்த எதையும் கதைப் பொருளாக அமைத்துக் கொள்ளலாம். மலேசிய மண், மக்களின் வாழ்க்கை முறைகள், மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள், குடும்ப உறவுகள், நட்பு, காதல், வெறுப்பு, வன்மம், இயற்கையின் ஆராதனைகள், அழகியல் பார்வைகள், கதாமாந்தர்களின் பண்புகள் போன்றவை ஒரு சடைப்பின்னலாக இணைந்து கதைக்குரிய பொருளாக இந்த நாவலில் அமைந்திருக்கின்றன.

கதை மாந்தர்கள்
நாவலில் இடம்பெறும் கதை மாந்தர்களை இருவகைப்படுத்துவார் அறிஞர் ஈ,எம்.ஃபாஸ்ட்டர்.
1.   முழுநிலை மாந்தர்
2.   ஒருநிலை மாந்தர்

நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நம்முடன் உறவாடி வாசக மனங்களில் முழுமையான இடத்தைப்  பிடிப்பவர்களே முழுநிலை மாந்தர்கள் எனக் கூறப்படுகிறார்கள். கதையின் கட்டுக்கோப்பிற்காகவும் கதையாடலை மேலும் சுவைபடச் சொல்ல இடையிலேயே தோன்றி இடையிலேயே மறைந்துவிடுபவர்கள் ஒருநிலை மாந்தர்கள் எனக் கூறப்படுகின்றனர். இந்நாவலில், அன்புமதியும் சீனிவாசனும் செல்வ விநாயகமும் மனோகரனும் நாவலின் போக்கிற்கேற்ப மெல்ல மெல்ல வளர்ந்து, அவர்களின் பண்பு நலன்களாலும் தியாக உணர்வுகளாலும் வாசகர்களின் உள்ளத்தில் முழுமையாக இடம்பிடித்துக் கொள்கிறார்கள்.

மறுவாழ்வு மையத்தின் தலைமை அதிகாரி பரமசிவம், அன்புமதியின் சித்தி தங்கம், தங்கை சரளா, அவள் கணவன் பிரபு, மகன் ஆனந்த், தம்பி சிவா, அவன் மனைவி சீதா, புதிய நண்பன் அறிவழகன், காதலி ஆர்த்தி, ஸ்ரீமதி, ஸ்ரீமதியின் சித்தி வித்யாஸ்ரீ, அலுவலகத்தில் பணிபுரியும் காஞ்சனா, மலையப்பன், சாமிக்கண்ணு, டிரைவர் செல்வம், ஸ்டீபன் வோங், இந்திரன் போன்ற கதாமாந்தர்கள் நாவலின் கட்டுக்கோப்பிற்காகவும் கதையாடலின் வளர்ச்சி படிநிலைகளுக்கேற்பவும் இடை இடையே வந்து போகின்ற ஒருநிலை மாந்தர்களாக விளங்குகின்றனர்.

இதில், மறுவாழ்வு மையத்தின் தலைமை அதிகாரி பரமசிவத்தின் கதாபாத்திரம் இந்நாவலுக்கு வெளியே நின்றுகொண்டு நாவலின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது. நாவலின் கதையாடலுக்குள் இந்தக் கதாபாத்திரத்தைக் கட்டமைக்காமல் நினைவிலிருந்து மீட்டல் என்ற எளிய உத்தி யதார்த்தத்தின் கலை அழகோடு இயல்பாகப் பொருந்திப் போகிறது. வெளியில் இருந்து நாவலை நகர்த்திச் செல்லும் இந்தக் கதாபாத்திரப் படைப்பு சிறப்பானதும் புதுமையானதும்கூட. இத்தகைய உத்திமுறை பொன்.சசிதரனின் படைப்பிலக்கிய ஆளுமை மேன்மைப் பெற்றுள்ளதைக் காட்டுவதோடு அவரை இந்த மலேசிய மண்ணின் சிறந்த ஒரு படைப்பாளியாகவும் போற்றத்தக்க ஒரு படைப்பாளியாகவும் அடையாளம் காட்டுகிறது.

எழுத்து நடை
நாவலில் வரும் உரையாடல்களும் சின்ன சின்ன வாக்கியங்களால் உருவாக்கப்பட்டு வாசகர்களைக் கவரும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளதும் இங்குக் கவனிக்கத்தக்கது. எளிய மொழி நடையில் அனைத்துத் தரப்பு வாசகர்களாலும் எவ்விதச் சிரமும் இன்றி புரிந்துகொள்ளக்கூடிய எழுத்து நடையில் இலகுவான தளர்வடிவம் கொண்ட நாவல் பெரும் உத்திகளையும் பாவனைகளையும் உதறியுள்ளது. வாசகப் பொதுப்புத்தியைக் கலங்கடிக்காமல் நேர்கொண்ட பார்வையாய் நல்லதோர் இளைய சமுதாயத்தை உருவாக்கச் சமூக விழுமியங்களை வாசக மனங்களில் விதைத்துவிட முயலும் கதைப்போக்கும் கருத்தாக்கங்களும் கொண்ட படைப்பாக்கம்.

நாவலில் அறம்

மனிதன் வாழ்வில் உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் மூத்தோர் சொல் கேட்டலும் பிறரிடத்துப் பணிவும் பரிவும் காட்டுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தம் பெற்றோருக்குரிய கடமைகளில் துணைநின்று, இந்த மண்ணுலக வாழ்வில் நல்ல மனித வாழ்வுக்காகத் தன்னை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும் என தனது இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியிருப்பதைப்போல, இந்த நாவலில் உறவுகளின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் மிகச் சிறப்பாகப் படைப்பாக்கம் செய்துள்ளார் பொன்.சசிதரன்.

சீனிவாசன் மூலமாக ஓர் அப்பாவின் பாசம், கடமை எந்நிலையிலும் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் செல்வ நாயகம் மூலமாக ஒரு நிறுவனத்தின் முதலாளி தன்னுடன் வேலை செய்பவர்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் சுகத் துக்கங்களில் எவ்வாறு பொறுப்புடன் பங்குகொள்ளவேண்டும் என்பதையும் மனோகரன், ஸ்ரீமதி, அறிவழகன் மூகமாக நட்பின் இலக்கணத்தையும் தங்கம், வித்யாஸ்ரீ மூலமாக இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருபவர்கள் எப்படி விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் மிக இயல்பாகத் தன் கதாபாத்திரங்களின் வாயிலாக இந்தச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்க முனைந்திருக்கும் நாவலாசிரியர், முரண் கதாபாத்திரங்களான சீதா, எல்லப்பன், இந்திரன் மூலமாக இந்த உலகில் எத்தகைய வாழ்க்கையை நாம் வாழக்கூடாது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார். கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் வாழ்க்கை நிலையற்றது என்பதை அன்புமதி – ஆர்த்தி காதல் உறவின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

சொல்லருஞ் சூது பொய் மோசம் செய்தால்
சுற்றத்தை முற்றமாய்த் துடைத்திடும் நாசம்
நல்ல பத்தி விசுவாசம்  எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாய் நேசம்
என்ற பாடல் வரிகளால் கடுவெளிச்சித்தர், சொந்தங்கள் நம்முடைய பாதுகாப்பு அரண் போன்றவர்கள். அவர்களைப் பொய், சூது, மோசத்தால் வஞ்சித்தால் நம் வாழ்வில் நாசமானது வீட்டின் தரையில் உள்ள அழுக்கைத் தேய்த்து எடுப்பதைப்போல நமது மகிழ்ச்சிகளை முற்றாய்த் துடைத்து எடுத்துவிடும்  என்கிறார்.

கண்ணதாசனும் தனது இயேசு காவியத்தில் கொலை செய்தால் மட்டும் நரகம் கிடைப்பதில்லை. கொடிய செயல்கள் அனைத்திற்கும் நரகம்தான் பதில் என்கிறார். புண்படுத்தும் சொற்களைப் பேசிப் பிறர் நெஞ்சத்தைச் சுடுபவர்களுக்கும் நரகம் கிட்டும் என்கிறார். சீதா, எல்லப்பன் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பொன்.சசிதரனும் இதையே இந்தச் சமூகத்துக்கும் கூறுகிறார்.
 
அன்பு, இரக்கம், தொண்டு என்னும் வாழ்க்கையே மண்ணில் சிறந்தது என்கின்ற வாழ்க்கை அறங்களை மக்கள் உணரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தை இந்தத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பதை நாவலில் வருகின்ற சம்பவங்களைக் காட்சிப்படுத்தி சமூகக் கருத்துகளையும் தன்முனைப்புக் கருத்துகளையும் நிறையவே பேசியிருக்கிறார் பொன். சசிதரன்.

அறத்தைப் போன்று ஆக்கம் தருவது வேறெதுவுமில்லை. அறம் சிறப்பைத் தரும். நல்ல செல்வத்தையும் தரும். எனவேதான், பண்டைய அகப்பொருள் இலக்கியங்களில் அறத்தோடு நிற்றல்  என்ற தனிப்பெரும் பிரிவு தலைசிறந்து விளங்கியதை நம்மால் உணரமுடிகிறது. வள்ளுவரும்கூட வாழ்வில் அறம் என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்த அறத்துப்பால் எனும் அதிகாரத்தையே இயற்றியுள்ளார். அறம் வலியுறுத்தல் என்ற பகுதியில்,

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

என ஒருவரின் வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மை தரக்கூடியது வேறெதுவுமில்லை. அதுபோல, அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கொடுமையானதும் வேறெதுவுமில்லை என்கிறார். 

மேற்கூறியவற்றின் கூற்றுகளைப் போற்றுவதே இந்த நாவலின் உயரிய விழுமியப்பண்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அறத்தைப் போற்றும் இதுவும் கடந்து போகும் நாவல் இன்றைய சூழலில் நமது சமூகத்துக்குப் பல உயரியத் தத்துவக் கருத்துகளின் பரிமாற்றத்தோடு படைப்பாளனின் எழுத்துகளின்மூலம் களம் இறங்கியிருக்கிறது.

சமூகம் சிறப்பாக அமைந்தால் நன்மை மிகும் என்று இந்தத் தமிழ்ச் சமூகத்தின்பால் அக்கறை கொண்டு இச்சமூகம் சீர்பெற விரும்பிய ஓர் ஆன்மாவின் படைப்பு இது.  கல்வித் துறையில் இருப்பவர்கள் இந்த நாவலை மாணவர் சமூகத்திடமும் இளையோரிடத்திலும் பரவிடச் செய்திடல் வேண்டும். வாய்ப்புக்  கிடைத்தால் இந்த நாவலை நமது பாடத்திட்டத்திற்கான பாடநூலாகவும் தேர்வு செய்யலாம். அதற்கான அனைத்துத் தகுதிகளும் இந்த நாவலுக்கு இருக்கிறது.

இந்தக் கணத்தில் இந்தப் புத்தக்ததை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது கதை எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்பதால், இப்போது, உங்களைச் சுற்றி எழுத்தாளனின் எழுத்தும் ஆன்மாவாக வட்டமடித்துக்கொண்டிருக்கலாம்.
நீ எழுதும்போது
நானிருந்தேன்
நான் எழுதும்போது
நீ இல்லையே என் நண்பா....
நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீதான் ஆய்வு செய்யவேண்டும் என்றாய். இடையில் சந்தித்தபோது எழுதி முடித்திருந்தவற்றைக் காட்டினாய். தலைப்பு மறுவாழ்வு என்றிருந்தது. தலைப்பை மாற்றலாமே என்றேன். நாவலின் இறுதி பத்தியில் வரும் இதுவும் கடந்து போகும் என்றிருந்தது. இதையே தலைப்பாக வைக்கலாமே என்றேன். சரி என்றாய். பிறிதொரு நாளில் தொலைபேசியில் அழைத்து, நாவலை எழுதி முடித்துவிட்டேன். எப்போது வருகிறீர்கள் என்று கேட்டாய். செப்டம்பர் பள்ளி விடுமுறையில் வருகிறேன் என்றேன். வந்ததும் தொடர்பு கொள்ளுங்கள். நாவல் பிரதியைக் கொடுக்கிறேன் என்றாய். செப்டம்பர் வந்தது. நானும் வந்தேன். நீ மட்டும் இல்லையே என் நண்பா........

இதுநாள்வரை
உன் நட்பைச் சுவாசித்தேன்
இனி
உன் எழுத்தைச் சுவாசிப்பேன்

அன்புடன்
எம். சேகர்

காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையின் கவிதையில் கலந்தே வாழுவோம் (பாவை விளக்கு - அகிலன்)